டவுன்பேமண்ட் இல்லாமல் புதிய டொயோட்டா காரை வாங்க அரிய வாய்ப்பு!
கொரோனா பிரச்னையிலிருந்து மீண்டு வரும் விதமாக, டொயோட்டா கார்களுக்கு சிறப்பு கடன் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

கடந்த மூன்று மாதங்களாக கொரோனா பிரச்னையால் கார் நிறுவனங்களும், அதன் டீலர்களும் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. இதிலிருந்து மீண்டு வருவதற்கான அனைத்து வழிகளையும் ஆராய்ந்து, அதனை அமல்படுத்தி வருகின்றன.

மேலும், கவர்ச்சிகரமான சேமிப்புச் சலுகைகள், சிறப்பு கார் கடன் திட்டங்களை பெரும்பாலான நிறுவனங்கள் அறிவித்துவிட்டன. அந்த வகையில், டொயோட்டா கார் நிறுவனமும் தனது கார்களுக்கான சிறப்பு கடன் திட்டங்களை அறிவித்துள்ளது.

டொயோட்டா அறிவித்துள்ள இந்த சிறப்பு கடன் திட்டங்களில் முதலாவதாக, கார் வாங்கி 90 நாட்களுக்கு பிறகு மாதத் தவணையை செலுத்த துவங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, மூன்று மாதங்களுக்கு மாதத் தவணை செலுத்துவதிலிருந்து விலக்கு பெறலாம். பின்னர் மாதத் தவணையை துவங்கலாம்.

அதேபோன்று, டவுன்பேமண்ட் இல்லாமல் காருக்கு அதிகபட்ச கடன் பெறும் வாய்ப்பையும் டொயோட்டா வழங்குகிறது. மேலும், முதல் 6 மாதங்களுக்கு வெறும் 899 ரூபாய் மாதத் தவணை செலுத்திவிட்டு, பின்னர் சரியான மாதத் தவணையை துவங்கும் திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்னோவா க்ரிஸ்ட்டா, யாரிஸ், க்ளான்ஸா, ஃபார்ச்சூனர் கேம்ரி மற்றும் வெல்ஃபயர் உள்ளிட்ட அனைத்து டொயோட்டா கார்களுக்கும் இந்த சிறப்பு கடன் திட்டங்கள் வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது உள்ள சூழலில், வாடிக்கையாளர்களுக்கு இந்த சிறப்பு கடன் திட்டங்கள் அதிக நெருக்கடியை தராமல் ஆசுவாசமாக மாதத் தவணைகளை கட்டும் வகையில் வழங்கப்படுவதாகவும் டொயோட்டா தெரிவித்துள்ளது.

அத்துடன், யாரிஸ் மற்றும் க்ளான்ஸா ஆகிய கார்களுக்கு Buy Back திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டமும் வாடிக்கையாளர்கள் நம்பிக்கையுடன் கார் வாங்குவதற்கான வாய்ப்பையும் தரும்.

புதிய டொயோட்டா கார் வாங்க திட்டமிட்டிருப்போருக்கு இந்த திட்டம் மிகச் சரியான வாய்ப்புகளை ஏற்படுத்தி தந்துள்ளது. ஜூன் மாதத்திற்கான சிறப்பு கடன் திட்டங்களாக இவை அறிவிக்கப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications








