டொயோட்டா லிவா, எட்டியோஸ் கார்கள் விற்பனை இந்தியாவில் நிறுத்தம்!
இந்தியாவில் டொயோட்டா லிவா, எட்டியோஸ் கார்களின் விற்பனை நிறுத்தப்பட்டு இருக்கிறது. கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டொயோட்டா நிறுவனத்தின் விலை குறைவான கார் மாடல்களாக லிவா மற்றும் எட்டியோஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தன. இதில், எட்டியோஸ் செடான் கார் டாக்சி மார்க்கெட்டில் பெரிய அளவிலான வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த நிலையில், பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வந்துள்ளதையடுத்து, 4 கார் மாடல்களை இந்திய சந்தையிலிருந்து விலக்கிக் கொண்டுள்ளது. எட்டியோஸ் குடும்பத்தில் விற்பனை செய்யப்பட்டு வந்த லிவா, எட்டியோஸ் செடான், எட்டியோஸ் க்ராஸ் ஆகிய மூன்று கார்களுமே விற்பனையிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. அதேபோன்று, கரொல்லா ஆல்டிஸ் காரும் நீக்கப்பட்டுள்ளது.

டொயோட்டா லிவா காரில் 1.2 லிட்டர் மற்றும் 1.4 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு வந்தது. எட்டியோஸ் செடான் மற்றும் எட்டியோஸ் க்ராஸ் கார்களில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.4 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்பட்டு வந்தன. டொயோட்டா கரொல்லா ஆல்டிஸ் காரில் 1.8 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.4 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்பட்டு வந்தன.

இந்த நிலையில், இந்த எஞ்சின்களை பிஎஸ்6 தரத்திற்கு மேம்படுத்தி விற்பனைக்கு கொண்டு வந்தாலும், அந்த முதலீட்டுக்கு தக்கவாறு விற்பனை இருக்குமா என்பது சந்தேகமாக உள்ளது. இதையடுத்து, மேற்கண்ட 4 கார்களையும் டொயோட்டா விற்பனையில் இருந்து விலக்கிக் கொண்டுள்ளது.

மாருதி நிறுவனத்திடம் இருந்து சப்ளை பெறப்படும் க்ளான்ஸா மற்றும் யாரிஸ் கார்கள் இனி எட்டியோஸ் லிவா மற்றும் எட்டியோஸ் செடான் காருக்கு மாற்றாக பிரிமீயம் மாடல்களாக தொடர்ந்து விற்பனை செய்யப்படும் என்று டொயோட்டா தெரிவித்துள்ளது.

மேலும், கரொல்லா ஆல்டிஸ் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது குறித்து கருத்து தெரிவித்துள்ள டொயோட்டா கார் நிறுவனம், இந்தியாவில் மிட்சைஸ் செடான் கார் வாடிக்கையாளர்கள் மெல்ல எம்பிவி கார்கள் பக்கம் கவனத்தை திருப்பி இருப்பதால், இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

எனினும், டொயோட்டா கரொல்லா ஆல்டிஸ் காரின் ஹைப்ரிட் மாடலை இந்தியாவில் கொண்டு வருவதற்கான திட்டம் டொயோட்டா வசம் இருப்பதாக ஆட்டோமொபைல் வட்டாரத் தகவல் தெரிவிக்கிறது. எனினும், உடனடியாக வருவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே இருக்கிறது.

இதனிடையே, விற்பனையில் இருந்து நீக்கப்பட்ட கார்களுக்கு அரசு விதிகள் படி, தொடர்ந்து உதிரிபாகங்கள் மற்றும் சர்வீஸ் சேவைகள் டீலர்களில் கிடைக்கும் என்று டொயோட்டா தெரிவித்துள்ளது. எனவே, டொயோட்டா எட்டியோஸ் மற்றும் கரொல்லா ஆல்டிஸ் கார் வாடிக்கையாளர்கள் கவலை கொள்ள தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி 27 முதல் பிஎஸ்6 கார்களின் விற்பனையை துவங்கிவிட்டதாகவும், நாடு முழுவதும் அனைத்து டீலர்களிலுமே பிஎஸ்6 கார்கள் கிடைக்கும் வகையில் வர்த்தக செயல்பாடுகளை முன்கூட்டியே செய்து விட்டதாகவும் டொயோட்டா தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








