பெங்களூர் டொயோட்டா ஆலையில் உற்பத்தி நிறுத்தி வைப்பு... டெலிவிரிப் பணிகளில் தொய்வு ஏற்பட வாய்ப்பு!
கொரோனா பரவலை தடுக்கும் விதமாக பெங்களூரில் லாக்டவுன் போடப்பட்டுள்ளதால், டொயோட்டா கார் ஆலையில் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க எடுக்கப்பட்டு வரும் முயற்சிகள் அனைத்தும் போதிய பலனளிக்காத நிலை தொடர்கிறது. இந்த கொரோனா பிரச்னை எப்போது முடிவுக்கு வரும் என்ற விடை தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், இயல்பு நிலைக்கு வருவதில் பெரும் சிக்கல் நீடிக்கிறது.

இந்த நிலையில், கர்நாடக தலைநகர் பெங்களூரில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வந்தது. இதனை கடுப்படுத்தும் விதமாக இன்று இரவு முதல் வரும் 22ந் தேதி வரை லாக்டவுன் போடப்பட்டு இருக்கிறது. இதனால், மக்களுக்கும், தொழில்துறைக்கும் மீண்டும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், லாக்டவுனை மனதில் வைத்து பெங்களூர் அருகே செயல்பட்டு வரும் டொயோட்டா கார் ஆலையில் உற்பத்திப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இன்று இரண்டாவது ஷிஃப்ட் முதல் வரும் 22ந் தேதி முதல் ஷிஃப்ட் வரை உற்பத்திப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக டொயோட்டா அறிவித்துள்ளது.

கர்நாடக அரசு வெளியிட்டுள்ள லாக்டவுன் வழிகாட்டு முறைகளை பின்பற்றும் விதமாக இந்த முடிவை எடுத்துள்ளதாக டொயோட்டா கிர்லோஸ்கர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், டொயோட்டா ஆலையில் சில பணியாளர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதும் மற்றொரு காரணமாக தெரிவிக்கப்படுகிறது.

முதலீட்டாளர்கள், ஆலை தொழிலாளர்கள், பணியாளர்கள் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக டொயோட்டா தெரிவித்துள்ளது. மேலும், கொரோனா தொற்றுக்கு உள்ளான பணியாளர்களுக்கு முழு உதவியும் அளிக்கப்படும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொரோனா லாக்டவுனால் பெங்களூர் அருகே உள்ள டொயோட்டா ஆலையில் உற்பத்தி பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதால், புதிய கார் டெலிவிரி பணிகளில் சிறிது காலதாமதம் ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. ஆனால், முன்பதிவு பழைய நிலையில் இல்லை என்பதால், இதனை சமன்படுத்திவிட முடியும் வாய்ப்பு இருப்பதாக கருதி, டொயோட்டா ஆலையை தற்காலிகமாக மூடியுள்ளது.

இதனிடையே, டொயோட்டா நிறுவனத்தின் நிர்வாகம் மற்றும் அலுவலகங்களில் பணியாற்றுவோர் தொடர்ந்து வீட்டிலிருந்தே பணிபுரிவதற்கு அறிவுறுத்தப்பட்டு இருக்கின்றனர். கொரோனா பரவும் வாய்ப்பை தவிர்க்கும் விதமாக, தொடர்ந்து அவர்கள் வீட்டில் இருந்தே தங்களது அலுவலகப் பணிகளை மேற்கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








