சினிமா காட்சிகளை மிஞ்சும் கார் திருட்டு... உரிமையாளர் சேஸ் செய்தும் நிற்காமல் சென்ற நபர்... வீடியோ!
சினிமா காட்சிகளை மிஞ்சுமளவிற்கு கார் திருட்டு சம்பவம் ஒன்று கேரளத்தில் அரங்கேறியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

வாகன திருட்டு என்பது மிகவும் சாதாரண செயலாக மாறிவிட்டது. நாட்டில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான வாகன திருட்டு சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இதனைத் தடுக்கும் விதமாக போலீஸார் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றபோதிலும் திருட்டு சம்பவங்கள் கட்டுப்பாட்டிற்குள் வந்தபாடில்லை.

போலீஸார் மட்டுமின்றி வாகன தயாரிப்பு நிறுவனங்களும் திருட்டைத் தடுக்கும் விதமாக பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை வாகனங்களில் களமிறக்கி வருகின்றன. ஆனால், திருடர்கள் மிகவும் கைதேர்ந்தவர்களாக இருப்பதால், அவர்கள் அந்த தொழில்நுட்பத்தைக் கூட மிகவும் சர்வ சாதாரணமாக உடைத்தெறிந்துவிடுகின்றனர்.

மேலும், பல்வேறு புதிய யுக்திகளை அவர்கள் கையாள்வதால் திருடப்படும் வாகனங்களை மட்டுமல்ல அவர்களைக் கண்டறிவதும் மிகவும் சிக்கலானதாக இருக்கின்றது. அதேசமயம், தற்போது முக்கியமான பகுதிகளில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் சிசிடிவி கேமிராக்களைப் பொருத்தியிருப்பதால் பல்வேறு சிக்கலான சம்பவங்களில்கூட போலீஸாரால் மிக எளிதில் விடைக் காண முடிகின்றது.

ஆனால், நாம் பார்க்கவிருக்கும் இந்த சம்பவத்தில் சிசிடிவி கேமிராவோ, போலீஸார்களோ களவு செய்யப்பட்ட காரைக் கண்டுபிடிக்கவில்லை. காரின் உரிமையாளரே காரை கண்டுபிடித்து போலீஸாருக்கும் தகவல் கொடுத்திருக்கின்றார். இந்த சம்பவம் கேரள மாநிலம், வயநாடு பகுதியில் அரங்கேறியிருப்பதாக ஏசியநெட் மலையாள செய்தி தளம் தகவல் வெளியிட்டுள்ளது.

டொயோட்டா இன்னோவா கார் ஒன்றை அதன் உரிமையாளர், டொயோட்டா டீலர்ஷிப் வாயிலாக சர்வீஸுக்கு விட்டுள்ளார். அவர், சர்வீஸ் சென்டரின் அலுவலகத்தில் பேசிக் கொண்டிருந்த அந்த நேரத்தில், மையத்திற்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் காரை சுற்றி சுற்றி வந்தவாறு நீண்ட நேரம் வட்டமடித்துள்ளார். இதைத்தொடர்ந்து, அந்த நேரத்தில் அப்பகுதியில் யாருமில்லாததை நோட்டமிட்ட அந்த நபர், உடனடியாக காரை எடுத்துக்கொண்டு புறப்பட ஆரம்பித்தார்.

இதை அலுவலகத்தில் இருந்து நோட்டமிட்டுக் கொண்டிருந்த இன்னோவா க்ரிஸ்டா காரின் உரிமையாளர், பின்னாடியே ஹூண்டாய் க்ரெட்டா கார் மூலம் திருடனை சேஸ் செய்தார். கடைசியாக ஒரு இடத்தில் இன்னோவா காரை அவர் மடக்கவும் செய்தார். ஆனால், அங்கிருந்து தப்பித்தே ஆக வேண்டும் என எண்ணிய அந்த திருடர், குறுக்கே வந்தவர்களைப் பற்றி கவலைப்படாமல் காரை முன்னோக்கி இயக்கி, அந்த இடத்தில் இருந்து தப்பித்தார்.

பின்னர், இதுகுறித்து தகவலறிந்து காரை பின்தொடர்ந்த போலீஸார் சில நேர போராட்டங்களுக்கு பிறகு காரையும், அதை திருடிச் சென்றவரையும் மடக்கிப்பிடித்தனர். இந்த ஒட்டுமொத்த சம்பவங்களும் அந்தந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமிராக்களில் பதிவாகியிருந்தன. அந்த வீடியோதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பொதுவாக, சர்வீஸ் சென்டர்களில் காரையோ அல்லது இருசக்கர வாகனத்தையோ சர்வீஸுக்கு விட்டால், அதை திரும்பி எடுத்துச் செல்லும்போது வாகனத்தின் உரிமையாளரே வந்தாலும் கேட் பாஸ் இருந்தால் மட்டுமே வெளியே செல்ல சர்வீஸ் மையத்தின் நிர்வாகம் அனுமதிக்கும். ஆனால், இந்த சம்பவத்தில் அந்த திருடர் காரை எப்படி சர்வீஸ் மையத்தின் வளாகத்தை விட்டு வெளியே எடுத்துச் சென்றார் என்பது தெரியவில்லை.

இதுபோன்று களவு செய்யப்படும் வாகனங்களை பின் தொடரவில்லை என்றால் அவற்றைக் கண்டுபிடிப்பது மிகவும் சிரமமாகிவிடும். எனவேதான், இதுபோன்ற சிக்கலை தீர்க்கும் விதமாக தற்போது சந்தையில் ஜிபிஎஸ் மற்றும் நேவிகேஷன் போன்ற டிராக்கிங் கருவிகள் விற்கப்பட்டு வருகின்றன. இவை வாகனங்களை திருட்டு மற்றும் கசப்பான அனுபவங்களில் மீட்டெடுக்க உதவும். தற்போது விற்பனைக்கு வரும் பெரும்பாலான வாகனங்கள் இந்த அம்சம் இடம்பெற்றுவிடுகின்றன.

ஆனால், மிக குறைந்த விலை வாகனங்களில் அது இடம்பெற தவறிவிடுகின்றது. வாகனம் மலிவான விலையில் இருக்க வேண்டும் என்ற காரணத்திற்காக வாகன உற்பத்தி நிறுவனங்கள் இதை வழங்க தவறிவிடுகின்றன. இருப்பினும், நம்மால் இந்த அம்சத்தை வெளிச்சந்தையில் இருந்து பெற்று பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








