பெங்களூர் ஆலையில் கார் உற்பத்தி பணிகள் தொடக்கம்... மீண்டும் களத்தில் இறங்கியது டொயோட்டா...
பெங்களூர் ஆலையில் டொயோட்டா நிறுவனம் மீண்டும் கார் உற்பத்தி பணிகளை தொடங்கியுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் (கோவிட்-19) பரவுவதை தடுப்பதற்காக, கடந்த மார்ச் 24ம் தேதியில் இருந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. எனவே அன்றைய தினம் முதல் இந்தியாவில் உள்ள தொழிற்சாலைகளில் வாகன உற்பத்தி நிறுத்தப்பட்டது. அத்துடன் டீலர்ஷிப்களும் தற்காலிகமாக மூடப்பட்டதால், வாகன விற்பனையும் பாதிக்கப்பட்டது.

எனினும் ஊரடங்கில் மத்திய, மாநில அரசுகள் வழங்கிய தளர்வுகள் காரணமாக, கடந்த மே 4ம் தேதி முதல் இந்தியாவில் வாகன உற்பத்தி மற்றும் விற்பனை மீண்டும் தொடங்கியது. தொழிற்சாலைகள் மற்றும் டீலர்ஷிப்களில், மத்திய, மாநில அரசுகள் வழங்கிய பாதுகாப்பு விதிமுறைகள் தீவிரமாக பின்பற்றப்படுகின்றன.

ஆனால் அதையும் மீறி, முன்னணி நிறுவனங்களின் தொழிற்சாலைகளில் கொரோனா புகுந்து வருவது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹூண்டாய் மோட்டார் இந்தியா மற்றும் மாருதி சுஸுகி நிறுவனங்களின் தொழிற்சாலைகளில் பணியாற்றிய ஊழியர்களுக்கு கடந்த மாதம் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

சென்னையில் உள்ள ஹூண்டாய் நிறுவனத்தின் ஆலையில் மூன்று பேருக்கும், மனேசரில் இயங்கும் மாருதி நிறுவனத்தின் ஆலையில் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த வரிசையில் டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனமும் இணைந்துள்ளது. கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருக்கு அருகே உள்ள பிடதியில் அந்நிறுவனத்தின் ஆலை செயல்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸ் ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின் கடந்த மே 26ம் தேதிதான் பிடதி ஆலையில் டொயோட்டா நிறுவனம் மீண்டும் கார் உற்பத்தி பணிகளை தொடங்கியது. ஆனால் கடந்த ஜூன் 7 மற்றும் 16 ஆகிய நாட்களில் பிடதி ஆலையில் வேலை செய்த இரண்டு ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனால் பிடதி ஆலையில் கார் உற்பத்தி பணிகளை கடந்த ஜூன் 17ம் தேதி முதல் டொயோட்டா நிறுவனம் நிறுத்தியது. மேலும் ஆலை முழுவதும் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யும் பணிகளும் நடைபெற்றன. இந்த சூழலில் பிடதி ஆலையில் இன்று முதல் (ஜூன் 19 - வெள்ளி) வாகன உற்பத்தி பணிகளை மீண்டும் தொடங்கியுள்ளதாக டொயோட்டா அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆலையின் பாதுகாப்பை உறுதிப்படுத்திய பின்னர், உள்ளூர் நிர்வாகம் மற்றும் மாநில அரசு உள்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இருந்து, ஆலையில் மீண்டும் பணிகளை தொடங்க அனுமதி கிடைத்துள்ளது என கூறப்பட்டுள்ளது.

அரசு வழங்கிய பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி இன்று (ஜூன் 19ம் தேதி) முதல் பிடதி ஆலையில் கார் உற்பத்தியை மீண்டும் தொடங்கியுள்ளதாகவும் டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் தெரிவித்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட ஊழியர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும், அவர்களின் மருத்துவ சிகிச்சைக்கு தேவையான உதவிகளை வழங்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








