இந்தியாவில் 16 கார் மாடல்களுடன் வர்த்தகத்தை வலுப்படுத்த டொயோட்டா திட்டம்
இந்தியாவில் 16 கார் மாடல்களுடன் வர்த்தகத்தை வலுப்படுத்த டொயோட்டா திட்டமிட்டுள்ளது. இதில், அடுத்த 3 ஆண்டுகளில் 9 புதிய கார் மாடல்களை இந்தியாவில் களமிறக்கவும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளியாகி இருக்கிறது.

ஜப்பானிய கார் நிறுவனமான டொயோட்டா இந்திய கார் சந்தையில் அதிக நம்பிக்கையை பெற்ற நிறுவனமாக விளங்குகிறது. இன்னோவா க்ரிஸ்ட்டா, ஃபார்ச்சூனர் ஆகிய இரண்டு மாடல்களுக்கும் இந்தியர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இருந்து வருகிறது.

அனைத்து ரகங்களிலும் புதிய கார் மாடல்களை களமிறக்கி வர்த்தகத்தை வலுப்படுத்த திட்டமிட்டுள்ளது. தற்போது 7 கார் மாடல்களை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது டொயோட்டா.

இந்த நிலையில், அடுத்த மூன்று ஆண்டுகளில் 9 புதிய கார் மாடல்களை களமிறக்க டொயோட்டா திட்டமிட்டுள்ளது. அதாவது, வரும் 2023ம் ஆண்டுக்குள் டொயோட்டா நிறுவனம் இந்தியாவில் 16 கார் மாடல்களுடன் வர்த்தகத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக டீம் பிஎச்பி தள செய்தி தெரிவிக்கிறது.

புதிய மாடல்களின் பட்டியலில் ஹைலக்ஸ் பிக்கப் டிரக், ஆர்ஏவி4, கரொல்லா க்ராஸ் ஆகிய மாடல்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். இதுதவிரவும், ஃபார்ச்சூனர் மற்றும் யாரிஸ் கார்களின் ஃபேஸ்லிஃப்ட் மாடல்களும் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

தற்போது யாரிஸ், இன்னோவா க்ரிஸ்ட்டா, ஃபார்ச்சூனர், கேம்ரி மற்றும் வெல்ஃபயர் ஆகிய கார்களை தனது சொந்த தயாரிப்பாகவும், மாருதி சுஸுகி கூட்டணியில் ரீபேட்ஜ் செய்யப்பட்ட க்ளான்ஸா மற்றும் விரைவில் வரும் அர்பன் க்ரூஸர் ஆகிய மாடல்களுடன் வர்த்தகம் செய்து வருகிறது.

மாருதி சுஸுகி கூட்டணியில் மேலும் சியாஸ் காரின் ரீபேட்ஜ் மாடலை களமிறக்க உள்ளதுடன், ஹூண்டாய் க்ரெட்டாவுக்கு நிகரான புத்தம் புதிய எஸ்யூவி மாடலையும் களமிறக்க டொயோட்டா திட்டமிட்டுள்ளது.

வரும் 2023ம் ஆண்டு முதல் புதிய கார் மாடல்களுடன் இந்தியாவின் மிக வலுவான கார் நிறுவனங்களில் ஒன்றாக மாறுவதற்கு டொயோட்டா இலக்கு வைத்துள்ளது. இதற்கான அனைத்து திட்டங்களையும் செயல்படுத்துவதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








