சப்புக் கொட்ட வைக்கும் இந்த டொயோட்டா எஸ்யூவி... இந்தியா வந்தால் இதெல்லாம் காலி?
உலகின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனங்களில் டாப் 3 இடங்களில் ஜப்பானை சேர்ந்த டொயோட்டா இருந்து வருகிறது. அந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் நீடித்த உழைப்பையும், சிறந்த மதிப்பையும் வழங்கி வாடிக்கையாளர்களை வசப்படுத்தி வைத்துள்ளன.

இந்தியாவிலும் டொயோட்டா தயாரிப்புகளுக்கு மிகப்பெரிய ரசிக கூட்டம் உள்ளது. குறிப்பாக, இன்னோவா க்ரிஸ்ட்டா, ஃபார்ச்சூனர் ஆகிய மாடல்கள் பெரும் கோடீஸ்வர்களையும் கவர்ந்து வரும் மாடல்கள். வீட்டில் பல சொகுசு கார்களை வைத்திருக்கும் சூப்பர்ஸ்டார், மெகா ஸ்டார் வரை தினசரி பயன்பாட்டுக்கு இன்னோவா க்ரிஸ்ட்டாவை பயன்படுத்துவதை பார்த்திருப்பீர்கள்.

இந்த நிலையில், டொயோட்டா கார் நிறுவனம் இந்தியாவில் இன்னோவா க்ரிஸ்ட்டா, ஃபார்ச்சூனர் ஆகிய மாடல்களை வைத்திருந்தாலும், அந்த நிறுவனம் இந்தியர்களின் எதிர்பார்புகளுக்கு சரியான தீணி போடவில்லை என்ற கருத்து பரவலாக உள்ளது.

அதாவது, அந்நிறுவனம் வெளிநாடுகளில் விற்பனையில் வைத்துள்ள பல கார் மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று பல டொயோட்டா ரசிகர்களும், வாடிக்கையாளர்களும் அங்கலாய்ப்பதை காண முடியும்.

குறிப்பாக, சில கார்களை வெளிநாடுகளில் பயன்படுத்திய அனுபவம் கொண்ட இந்தியர்கள் கூட இந்த ஏக்கத்தை சமூக ஊடகங்களில் அடிக்கடி தெரிவிப்பது உண்டு. அந்த வகையில், டொயோட்டா நிறுவனம் பல்வேறு நாடுகளில் விற்பனை செய்து வரும் இந்த எஸ்யூவி மாடல் இந்தியர்களுக்கு மிக சிறப்பான தேர்வாக இருக்கும் என்று கருத்துக்கள் ஆட்டோமொபைல் தளங்களிலும், டொயோட்டா ரசிகர்களிடமும் உள்ளது.

ஆம். நாம் இங்கே குறிப்பிட்டு கூறுவது டொயோட்டா RAV4 என்ற மிட்சைஸ் க்ராஸ்ஓவர் எஸ்யூவி மாடலே ஆகும். கடந்த 1994ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த மிட்சைஸ் பிரிமீயம் எஸ்யூவி பல்வேறு நாடுகளில் வாடிக்கையாளர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்ற மாடலாக இருந்து வருகிறது.

இதுவரை 10 மில்லியன் யூனிட்டுகளுக்கும் மேல் விற்பனையாகி இருக்கிறது. பல ஆண்டுகளாக இந்தியாவிலும் இந்த கார் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று செய்திகள் வருவதுண்டு. கடந்த ஆண்டுதான் இந்த எஸ்யூவியின் ஐந்தாம் தலைமுறை மாடல் உலகளாவிய அளவில் அறிமுகம் செய்யப்பட்டது.

டொயோட்டா நியூ குளோபல் ஆர்க்கிடெக்ச்சர் (TNGA-K) என்ற டொயோட்டாவின் புதிய எஸ்யூவி கார்களை தயாரிக்கும் கட்டமைப்புக் கொள்கையில்தான் இந்த எஸ்யூவியும் உருவாக்கப்பட்டது. மேலும், இந்த கட்டமைப்புக் கொள்கையில் உருவாக்கப்படும் எஸ்யூவி மாடல்களில் ஹைப்ரிட் சிஸ்டத்தையும் வழங்க முடியும் என்பதும் தனிச்சிறப்பு.

ஐந்தாம் தலைமுறை மாடலானது பெட்ரோல் மற்றும் பெட்ரோல் ஹைப்ரிட் எஞ்சின் தேர்வுகளில் அறிமுகம் செய்யப்பட்டது. அதற்கு முந்தைய மாடலில் டீசல் எஞ்சின் தேர்வும் இருந்தது. தற்போது 2.0 லிட்டர், 2.5 லிட்டர் மற்றும் பெட்ரோல் ஹைப்ரிட் மாடல்களில் வெளிநாடுகளில் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த எஸ்யூவியில் வழங்கப்படும் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 173 பிஎஸ் பவரையும், 203 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். மற்றொரு 2.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 207 பிஎஸ் பவரையும், 243 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

பெட்ரோல் ஹைப்ரிட் மாடலில் 2.5 லிட்டர் எஞ்சின் மற்றும் மின் மோட்டார் இணைந்து செயலாற்றும். இந்த ஹைப்ரிட் மாடலானது 218 பிஎஸ் பவரையும், 221 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த மாடலில் ப்ளக் இன் ஹைப்ரிட் மாடலும் உண்டு. இந்த மாடலானது ஆர்ஏவி4 ப்ரைம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த ப்ளக் இன் ஹைப்ரிட் மாடலானது 302 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும்.

மேற்கண்ட டொயோட்டா ஆர்ஏவி4 எஸ்யூவியானது சாதாரண வகை பயன்பாட்டு மாடலாக இருக்கிறது. ஆனால், சில குறிப்பிட்ட நாடுகளில் ஆர்ஏவி4 எஸ்யூவியின் விசேஷ ஆஃப்ரோடு மாடலும் விற்பனையில் உள்ளது. இந்த மாடலில் 207 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் 2.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கிறது. ஆல் வீல் டிரைவ் சிஸ்டமும் உள்ளது. ஆஃப் ரோடு டயர்கள், 18 அங்குல அலாய் வீல்கள் வழங்கப்படுகின்றன.

டொயோட்டா ஆர்ஏவி4 எஸ்யூவியானது 4,600 மிமீ நீளமும், 1,855 மிமீ அகலமும், 1,685 மிமீ உயரமும், 2,690 மிமீ வீல் பேஸ் நீளமும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த பரிமாணத்தை வைத்து பார்க்கும்போது ஜீப் காம்பஸ், இந்தியாவுக்கு உறுதிசெய்யப்பட்டுள்ள சிட்ரோன் சி5 ஏர் க்ராஸ் உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக இருக்கும். இது பிரிமீயம் மாடலாக நிலைநிறுத்தப்படும் என்பதால், ஹோண்டா சிஆர்வி உள்ளிட்ட பிரிமீயம் மாடல்களுக்கும் போட்டியை தரும்.

இந்தியாவில் எஸ்யூவி மாடல்களுக்கு அதிக வரவேற்பு இருக்கிறது. குறிப்பாக மிட்சைஸ் எஸ்யூவிகளுக்கான வரவேற்பு மிக அதிகமாக இருக்கிறது. ஆனால், இந்த எஸ்யூவியை கொண்டு வருவது குறித்த டொயோட்டாவிடம் இதுவரை எந்த திட்டமும் இல்லை என்பதுதான் ஏமாற்றமான செய்தி.

தற்போதுள்ள சூழலில், இந்த டொயோட்டா ஆர்ஏவி4 எஸ்யூவி களமிறக்கப்பட்டால், அது நிச்சயம் இந்தியர்களுக்கு மதிப்புமிக்க தேர்வாகவும், போட்டியாளர்களுக்கு சிறந்த மாற்றாகவும் இருக்கும். டொயோட்டா பிரியர்களுக்கும், ரசிகர்களுக்கும் நல்ல செய்தியாகவும் அமையும்.


Click it and Unblock the Notifications








