டொயோட்டா வெல்ஃபயர் காருக்கு ரகசிய முன்பதிவு
டொயோட்டா வெல்ஃபயர் சொகுசு காருக்கு இந்தியாவில் முன்பதிவு ஏற்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இன்னோவா க்ரிஸ்ட்டா, ஃபார்ச்சூனர் கார்கள் மூலமாக இந்திய வாடிக்கையாளர்களை வசியம் செய்த டொயோட்டா கார் நிறுவனம் மிகவும் விலை உயர்ந்த புதிய கார் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. வெளிநாடுகளில் விற்பனையில் இருக்கும் அல்ஃபார்டு சொகுசு எம்பிவி காரின் விலை உயர்ந்த வெல்ஃபயர் மாடலையே இந்தியா கொண்டு வர இருக்கிறது.

கடந்த இரு ஆண்டுகளாகவே டொயோட்டா வெல்ஃபயர் வருகை குறித்த தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், 2020ல் நிச்சயம் வந்துவிடும் என்று உறுதியாக நம்பப்படுகிறது. இந்த நிலையில், இந்த காருக்கு டொயோட்டா டீலர்களில் ரகசியமாக முன்பதிவு ஏற்கப்பட்டு வருவதாக புதிய தகவல் வெளியாகி இருக்கிறது.

அதன்படி, இந்த காரை வாங்க விருப்பமுள்ள வாடிக்கையாளர்கள் ரூ.10 லட்சம் முன்பணம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. டெஸ்ட் டிரைவ் வாய்ப்பும் அளிக்கப்படுகிறது. அதேநேரத்தில், இந்த காரின் வேரியண்ட் விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

வெளிநாடுகளில் பல வேரியண்ட்டுகளில் கிடைத்தாலும், இந்தியாவில் ஒரேயொரு வேரியண்ட்டில் மட்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.75 லட்சம் முதல் ரூ.80 லட்சம் வரையிலான விலையில் இந்த கார் இந்தியா வரும் என்பது கணிப்பு.

ஏனெனில், இந்த கார் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்படுவதால், வரி உள்பட இந்த காரின் விலை மிக அதிகமாக நிர்ணயிக்கப்பட வேண்டிய கட்டாயம் உள்ளது.

அடுத்த மாதம் டொயோட்டா வெல்ஃபயர் கார் இந்தியாவில் முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாகவும், தற்போது முன்பதிவு செய்தாலும் டெலிவிரி பெறுவதற்கு 4 முதல் 5 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

டொயோட்டா வெல்ஃபயர் காரில் எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி கேபின் விளக்குகள், டைனமிக் இண்டிகேட்டர் விளக்குகள், இரண்டு சன்ரூஃப் அமைப்பு, பக்கவாட்டில் நகர்ந்து செல்லும் ஸ்லைடிங் டோர்கள், 3 ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டம், பின்புற 10.2 அங்குல உயர் துல்லிய டிவி திரைகளுடன் இந்த கார் வர இருக்கிறது.

அதேநேரத்தில், இந்த காரில் 7.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் டீலரில் பொருத்தித் தரப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதுகுறித்து அடுத்த மாதம்தான் தெரிய வரும்.

இந்த காரில் 2.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் ஹைப்ரிட் சிஸ்டத்துடன் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 197 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும்.

புதிய டொயோட்டா வெல்ஃபயர் கார் மிக சொகுசான அம்சங்களுடன் மெர்சிடிஸ் பென்ஸ் வி க்ளாஸ் சொகுசு காருடன் போட்டி போடும். பெரும் பணக்காரர்கள், நட்சத்திர விடுதிகளை குறிவைத்து இந்த காரை டொயோட்டா அறிமுகம் செய்துள்ளது.
Source: IAB


Click it and Unblock the Notifications








