அதெல்லாம் இல்ல... ரூ.2,000 கோடி முதலீடு பண்ணப் போறோம்... டொயோட்டா திடீர் பல்டி!
இந்தியாவில் புதிய முதலீடுகளை நிறுத்தி வைப்பதாக வெளியான தகவல்களை டொயோட்டா கார் நிறுவனம் மறுத்துள்ளது. அத்துடன் புதிதாக ரூ.2,000 கோடியை முதலீடு செய்ய இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

இப்படி எக்கச்சக்கமாக வரி போட்டால், எப்படி பிசினஸ் பண்றது என்று நேற்று டொயோட்டா தலைவர் ஷேகர் விஸ்வநாதன் செய்தி நிறுவனம் ஒன்றிடம் பேட்டி அளித்தபோது, தனது குமுறலை வெளிப்படுத்தினார். மேலும், இந்தியாவில் பின்பற்றப்படும் வாகனங்கள் மீதான வரி விதிப்பு முறை குறித்தும் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

அத்தோடு, இந்தியாவில் புதிய முதலீடுகளை நிறுத்தி வைப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். அவரது இந்த தகவல் அரசியல் ரீதியில் பூகம்பத்தை கிளப்பியது. புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருவதாக மத்திய அரசு கூறி வரும் நிலையில், அவரது கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அரசியல் ரீதியில் இந்த கருத்து அதிர்வை ஏற்படுத்தியது. மேலும், மத்திய அரசுக்கு இது கடும் நெருக்கடியை தரும் வகையில் அமைந்தது. இதனையடுத்து, டொயோட்டா கார் நிறுவனம் அவசரமாக ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில், இந்தியாவில் மிகுந்த ஈடுபாட்டுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருவதாகவும், கடந்த இரண்டு தசாப்தங்களாக மிக வலுவான வர்த்தக அடித்தளத்தை இந்தியாவில் உருவாக்கி இருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

மேலும், இந்தியாவில் செய்யப்பட்டுள்ள முதலீடுகள் மற்றும் வேலைவாய்ப்புகளை பாதுகாக்கும் வகையில், சிறந்த திட்டங்களையும், கொள்கை முடிவுகளையும் எடுத்து வருவதாக டொயோட்டா தெரிவித்தது.

இந்த சூழலில், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்தியாவில் புதிய முதலீடுகளை நிறுத்தி வைப்பதாக டொயோட்டா தெரிவித்ததாக வெளியானத் தகவல் தவறானது.

இதுகுறித்து டொயோட்டா இந்தியா நிறுவனத்தின் துணைத் தலைவர் விக்ரம் கிர்லோஸ்கர் எமக்கு விளக்கம் அளித்துள்ளார். அடுத்த 12 மாதங்களில் ரூ.2,000 கோடியை இந்தியாவில் முதலீடு செய்ய டெயோட்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது," என்று தனது ட்விட்டர் செய்தியில் அவர் கூறியுள்ளார்.

இந்த ட்விட்டிற்கு விக்ரம் கிர்லோஸ்கரும் ஆமோதித்து பதில் அளித்துள்ளார். அதில், பிரகாஷ் ஜவடேகர் கூறியது சரிதான். வாகனத் தொழில்நுட்பம் மற்றும் மின்சார வாகனங்களுக்கான தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்காக ரூ.2,000 கோடியை முதலீடு செய்ய இருக்கிறோம். உள்நாடு மற்றும் ஏற்றுமதி என இரண்டிற்கும் இந்த முதலீடு உதவும்," என்று அவர் தெரிவித்துள்ளார்.

டொயோட்டா துணைத் தலைவர் விக்ரம் கிர்லோஸ்கர் விளக்கத்தையடுத்து, இந்தியாவில் முதலீடுகளை நிறுத்தி வைக்க டொயோட்டா முடிவு செய்துள்ளதாக வந்த செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே, வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரியை தற்காலிகமாக குறைப்பதற்கு மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications








