இந்த சமயத்துல இதுதான்யா வேணும்... லாரி ஓட்டுனர்களுக்கு மகிழ்ச்சியை தரும் உருப்படியான செய்தி!
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், மக்களின் அத்தியாவசிய பொருட்களை தங்கு தடையில்லாமல் வழங்கி வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ள லாரி ஓட்டுனர்களுக்கு மகிழ்ச்சியை தரும் செய்தியை மத்திய அரசு வெளியிட்டு இருக்கிறது.

கொரோனா தனது கோர முகத்தை காட்டு வரும் இவ்வேளையில், இரண்டாம் கட்ட ஊரடங்கு உத்தரவு நீட்டிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இதனையடுத்து, வரும் மே 3ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது.

வீடுகளுக்குள் முடங்கி இருக்கும் மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதில் பெரும் நடைமுறை சிக்கல்கள் இருந்து வருகின்றன. ஊரடங்கு உத்தரவால் வீடுகளில் முடங்கி இருக்கும் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் தங்கு தடையில்லாமல் கிடைப்பதை உறுதி செய்யும் பெரும் பொறுப்பு அரசாங்கம் வசம் இருக்கிறது.

இதனால், அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு சிறப்பு அனுமதி சீட்டுடன் போக்குவரத்து சேவையை வழங்குவதற்கு விலக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், கொரோனா வைரஸ் வாய்ப்பையும் பொருட்படுத்தாமல், அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் ஆகச் சிறந்த பணியை செய்யும் பொறுப்பை லாரி ஓட்டுனர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

பல்வேறு சிரமங்களை கடந்து சரக்கு போக்குவரத்துப் பணியில் லாரி ஓட்டுனர்கள் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, மாநிலங்களுக்கு இடையே மளிகை பொருட்கள், காய்கறி இவற்றை தினசரி சப்ளை செய்ய வேண்டிய கட்டாயத்தில் அவர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

சில டிரக்குகள் பல மாநிலங்களை கடந்து செல்லும் நிலை இருக்கிறது. இந்த தருணத்தில் அனைத்து மாநிலங்களிலுமே உணவகங்கள் மூடப்பட்டு இருப்பதால், அவர்களுக்கு உணவு கிடைப்பதில் பெரும் சிக்கல் எழுந்துள்ளது. சில ஓட்டுனர்கள் டிரக்கிலேயே சமைத்து சாப்பிடும் வசதி இருந்தாலும், இப்போதைய சூழலில் குறித்த நேரத்தில் சரக்குகளை கொண்டு சேர்க்கும் கட்டாயத்தில் அவர்களுக்கு சமையலுக்கான நேரம் போதிய அளவு இல்லை.

எனவே, உணவகங்கள் இல்லாததாால், அவர்களுக்கு குறித்த நேரத்தில் உணவு கிடைப்பது பெரும் சிக்கலாக அமைந்துவிட்டது. இதனை கருத்தில்கொண்டு, தேசிய நெடுஞ்சாலைகளில் சில தாபாக்களை செயல்பட அரசு அனுமதித்தது தெரிந்ததே. ஆனால், இதுவும் போதாது என்ற நிலை இருப்பதுடன், அதனை புதிய ஓட்டுனர்கள் கண்டுகொள்வதில் சிக்கல் இருக்கிறது.

எனவே, நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் உணவு கிடைப்பதற்கான வசதியை ஐஓசி, பிபிசிஎல் மற்றும் எச்பிசிஎல் ஆகிய மூன்று எண்ணெய் நிறுவனங்களும் ஏற்படுத்தி உள்ளன. முதல்கட்டமாக 1,700 பெட்ரோல் நிலையங்களில் ஓட்டுனர்களுக்கு உணவு கிடைக்கும் வசதியை வழங்கப்படும்.

எந்தெந்த பெட்ரோல் நிலையங்களில் உணவு கிடைக்கும் என்பது குறித்த பட்டியலை எண்ணெய் நிறுவனங்கள் தயார் செய்து மத்திய நெடுஞ்சாலை போக்குவரத்து அமைச்சகத்திடம் அளித்தன. அந்த பட்டியல் தற்போது மத்திய நெடுஞ்சாலை அமைச்சக இணையதளத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது.

பெட்ரோல் நிலையங்கள் மட்டுமல்லாமல், தேசிய நெடுஞ்சாலைகளில் உணவு விற்பனை செய்யும் தாபா உணவகங்கள் விபரம், வாகன பழுது நீக்கும் கடைகள் குறித்த விபரமும் அந்த பட்டியலில் இடம்பெற்றிருக்கிறது. அந்த கடையின் முகவரி மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல்போன் நம்பரும் கொடுக்கப்பட்டுள்ளது.

இது நடுவழியில் வாகன ரிப்பேர் உள்ளிட்ட விஷயங்களால் ஓட்டுனர்கள் அவதிப்படுவதை தவிர்க்க பெரும் உதவியாக அமையும். தற்போது 1,700 பெட்ரோல் நிலையங்களில் உணவு கிடைக்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், நாட்டின் அனைத்து பகுதிகளிலும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் உணவு கிடைப்பதற்கான திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.


Click it and Unblock the Notifications








