கார்களை விட குறைந்த நேரமே ஆகும்... மின்சார ரிக்ஸாக்களை அறிமுகம் செய்தது உபேர்... எங்கு தெரியுமா?
உபேர் நிறுவனம் மின்சார ரிக்ஸாக்களை அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பெட்ரோல், டீசல் வாகனங்கள் வெளியிடும் புகையால், காற்று மிக கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. காற்று மாசுபாட்டால் மிக கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக தற்போது இந்தியா மாறியுள்ளது. காற்று அதிகம் மாசடைந்த நகரங்களின் பட்டியலில் இந்தியாவில் பல்வேறு முன்னணி பெரு நகரங்கள் இருக்கின்றன.

குறிப்பாக டெல்லி மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அங்கு மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மின்சார வாகனங்களை வாங்குபவர்களுக்கு மானிய தொகைகளை டெல்லி அரசு சமீபத்தில் அறிவித்தது.
ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

இதன்படி மின்சார கார்களை வாங்குபவர்களுக்கு 1.50 லட்ச ரூபாய் மானியமாக கிடைக்கும். டெல்லியில் காற்று மாசுபாடு பிரச்னையை குறைக்க மாநில அரசு இப்படி தீவிரமாக முயன்று வரும் நிலையில், இதற்கு கை கொடுக்கும் வகையில் உபேர் நிறுவனமும் தற்போது அசத்தலான நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளது.

உபேர் நிறுவனம் டெல்லியில் தற்போது தனது அதிகாரப்பூர்வ செயலியில் மின்சார ரிக்ஸாக்களை அறிமுகம் செய்துள்ளது. மக்களின் பயணங்களை எளிதாக்குவதை மனதில் வைத்து உபேர் செயலியில், இந்த மின்சார ரிக்ஸாக்களை உபேர் இந்தியா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. டெல்லி மெட்ரோவின் ப்ளூ லைனில் உள்ள 26 ஸ்டேஷன்களில் இந்த மின்சார ரிக்ஸாக்களின் சேவை கிடைக்கும்.

உபேர் செயலியின் மூலமாக மிகவும் குறைவான கட்டணத்தில் இந்த மின்சார ரிக்ஸாக்களின் சேவையை பயணிகள் பயன்படுத்தி கொள்ள முடியும். இந்த மின்சார ரிக்ஸாக்கள் மக்களின் பயணங்களுக்கு உதவி செய்வதோடு, வழக்கமான ஐசி இன்ஜின்கள் உருவாக்கும் தீங்கு விளைவிக்க கூடிய வாயுக்களிடம் இருந்து சுற்றுச்சூழலையும் பாதுகாக்கும்.

குறிப்பாக டெல்லிக்கு தற்போது இதுபோன்ற வாகனங்கள்தான் தேவையாக உள்ளது. இந்த மின்சார ரிக்ஸாக்களில் நான்கு பேர் அமர்ந்து பயணம் செய்ய முடியும். அதிகபட்சமாக மணிக்கு 25 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தில் இந்த மின்சார ரிக்ஸாக்கள் செல்லும். இந்த மின்சார ரிக்ஸாக்கள் சிறிய அளவில் இருப்பதால், போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகர சாலைகளில் எளிதாக பயணிப்பதற்கு ஏற்றதாக இருக்கும்.

இதன் காரணமாக வேகம் குறைவாக இருந்தாலும் கூட, வழக்கமான உபேர் ஹேட்ச்பேக் மற்றும் செடான் டாக்ஸிக்களை காட்டிலும் குறைவான நேரத்தில் செல்ல வேண்டிய இடத்திற்கு சென்று விடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே டெல்லி மக்கள் மத்தியில் இந்த மின்சார ரிக்ஸாக்களுக்கு நல்ல வரவேற்பு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

ஊரடங்கில் படிப்படியாக அறிவிக்கப்பட்ட தளர்வுகள் காரணமாக இந்தியா தற்போது மெல்ல மெல்ல முழுமையான இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. அலுவலகம் செல்வது உள்ளிட்ட பயணங்களை மக்கள் அதிகளவில் மேற்கொள்ள தொடங்கியுள்ளனர். அவர்களுக்கு இந்த மின்சார ரிக்ஸாக்கள் பயனுள்ளதாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








