உபேரின் புதிய லட்சியம்! 20 ஆண்டுகளுக்குள் அரங்கேற இருக்கும் அதிரடி மாற்றம்! என்ன தெரிஞ்சா ஆச்சரியம்
உபேர் தனது புதிய லட்சியம் பற்றிய தகவலை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

செல்போன் ஆப்பினை மையமாகக் கொண்டு இயங்கி வரும் பிரபல கால் டாக்சி நிறுவனான உபேர், தற்போது புதிய இலக்கை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. அதாவது, இந்நிறுவனத்தின்கீழ் பயன்பாட்டில் இருக்கும் அனைத்து வாகனங்களையும் மின்சார ரகத்திற்கு மாற்ற இருப்பதாக அது அறிவித்துள்ளது. வருகின்ற 2030ம் ஆண்டிற்குள் இந்த இலக்கை அடைய அது திட்டமிட்டுள்ளது.

மேலும், 2040ம் ஆண்டிற்குள் பூஜ்ஜியம் உமிழ்வு என்ற இடத்தைப் பிடிக்கவும் அது திட்டமிட்டிருக்கின்றது. காற்று மாசிற்கு முக்கிய காரணமாக இருப்பவற்றில் எரிபொருள் வாகனங்களும் அடங்கும். எனவேதான் உலகம் முழுவதும் மின் வாகன பயன்பாடு ஊக்குவிக்கப்பட்டு வருகின்றது. அதாவது, மக்களை எரிபொருள் வாகனங்கள் பயன்பாட்டில் இருந்து மின் வாகன பயன்பாட்டை நோக்கி நகர்த்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்காக மானியம் வழங்குதல் போன்ற பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை அந்த நாட்டு அரசு எடுத்து வருகின்றது. இந்தியாவில்கூட மின்வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் ஃபேம்-2 திட்டத்தின்கீழ் மானியம் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தகுந்தது. இம்மாதிரியான சூழ்நிலையிலேயே பிரபல உபேர் கால் டாக்சி நிறுவனம், அதன்கீழ் இயங்கும் வாகனங்களை முற்றிலுமாக மின்வாகனமாக மாற்ற இருப்பதாக தெரிவித்துள்ளது.

முதற்கட்டமாக இந்த முயற்சியை அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பா ஆகிய நாடுகளில் உபேர் மேற்கொள்ள இருக்கின்றது. இந்த முயற்சியின் மூலம் உலக கால நிலை மாற்றம் மற்றும் உலக வெப்ப மயமாதலைக் குறைக்க முடியும் என அந்நிறுவனம் நம்பிக்கைத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உபேர் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி தாரா கோஸ்ரோஷாஹி கூறியதாவது, "உலகம் ஒரு முக்கியமான கட்டத்தில் உள்ளது. நாம் அனைவருக்கும் அதில் ஒரு பங்கு உள்ளது. உபேர் நிறுவனமும் இதில் உயர்ந்த இலக்கை கொண்டுள்ளது. இதைக் கட்டமைப்பதற்கான முயற்சியில் நாங்கள் இறங்கியிருக்கின்றோம். இந்த இயக்கத்திற்காக உலகின் மிகவும் திறமையான, டிகார்பனேற்றப்பட்ட மற்றும் மல்டிமாடல் தளத்தை உருவாக்க நாங்கள் முயன்றுக் கொண்டிருக்கின்றோம்" என்றார்.

இதனடிப்படையிலேயே உபேர் நிறுவனம் உலக வெப்பமயமாதலைத் தடுக்கும் பணியில் ஈடுபட இருக்கின்றது. இந்த பணியில் உபேர் நிறுவனம் மட்டுமின்றி மேலும் பல நிறுவனங்கள் களமிறங்கியிருக்கின்றது. ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் கூட அதன் டெலிவரி வாகனங்களை விரைவில் மின்சார ரகத்தில் மாற்ற இருப்பதாக அறிவித்தது.

அதற்கேற்ப கடந்த சில மாதங்களுக்கு முன்பு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மின்சார டெலிவரி வாகனங்களை அது களமிறங்கியது. இந்த நிலையிலேயே உபேர் நிறுவனமும் மின்வாகனங்களை தன்னுடைய சேவையில் பயன்படுத்த இருப்பதாக அறிவித்துள்ளது. 2040ம் ஆண்டிற்குள் இந்த நோக்கத்தை நிறைவேற்றும் முயற்சியில்ல களமிறங்கியிருக்கின்றது.

முயற்சியை மட்டுமின்றி இதற்காக பெரும் தொகையை செலவழிக்கவும் அந்த நிறுவனம் முன் வந்துள்ளது. அதாவது, 800 மில்லியன் டாலர்களை இந்த நோக்கத்திற்காக செலவழிக்க இருப்பதாக உபேர் தெரிவித்துள்ளது. கொரோனா வைரசால் நீடித்து வந்த பொதுமுடக்கம் காற்று மாசு மற்றும் புவி வெப்ப மயமாதலுக்கு தற்காலிக முற்றுப் புள்ளியை வைத்திருந்தது.

ஆனால், பொருளாதார மீட்பின் காரணாக மேற்கொள்ளப்பட்டு வரும் சில நடவடிக்கைகள் மீண்டும் பழைய நிலைக்கே திரும்ப ஆரம்பித்துள்ளது. அதாவது முன்பைப் போன்ற காற்றின் மாசு அளவு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இது எதிர்காலத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் கணிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக லிஃப் எனும் நிறுவனமும் இதே மாதிரியான ஓர் அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அந்நிறுவனம், 2030ம் ஆண்டிற்குள் 100 சதவீத வாகனங்களை மின் வாகனமாக மாற்றவிருப்பதாக தெரிவித்திருந்தது. இதற்கான முயற்சியை அமெரிக்காவில் வருகின்ற ஜூன் மாதத்தில் இருந்து தொடங்க இருப்பதாக கூறியிருந்தது. இந்த நிலையிலேயே தொழிலில் மட்டுமின்றி அதன் லட்சியத்திலும் போட்டியாக உபேர் மின் வாகன பயன்பாடுகுறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








