அக்.1 முதல் நாடு முழுவதும் ஒரே மாதிரி ஆர்.சி.புக், ஓட்டுனர் உரிமம்: புதிய நடைமுறை அறிமுகமாகிறது
வரும் 1ந் தேதி முதல் நாடு முழுவதும் ஒரே மாதிரியான வாகனப் பதிவு அட்டை மற்றும் ஓட்டுனர் உரிமம் வழங்கும் புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட உள்ளது.

மோட்டார் வாகன விதிகளிலும், காலத்திற்கு தக்கவாறு தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கும் மத்திய அரசு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. ஒரே நாடு, ஒரே ரேசன் கார்டு திட்டத்தை தொடர்ந்து, அதே பாணியில் பல்வேறு அரசு சார்ந்த பயன்பாட்டு அட்டைகளை ஒரே மாதிரியாக வழங்குவதற்கு மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இதன்மூலமாக, மாநிலங்களுக்கு இடையே பணி, தொழில் சார்ந்து அல்லது குடிபெயர்ந்து செல்வோருக்கு ஏற்படும் நடைமுறை சிக்கல்கள் தவிர்க்க முடியும் என்று மத்திய அரசு கருதுகிறது.

அந்த வகையில், நவீன மின்னணு தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய வாகனப் பதிவு அட்டை மற்றும் ஓட்டுனர் உரிமங்களை அறிமுகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக, 1989ம் ஆண்டு மோட்டார் வாகனச் சட்டத்தில் பல புதிய மாற்றங்கள் செய்யப்பட்டன.

இதன்படி, நாடுமுழுவதும் வாகனங்களுக்கு ஒரே மாதிரியான பதிவு அட்டை மற்றும் வாகன ஓட்டிகளுக்கான உரிமத்தை வழங்கும் புதிய நடைமுறை வரும் 1ந் தேதி முதல் அமலுக்கு வர இருக்கிறது.

இனி ஆர்.சி.புக் என்பது மின்னணு அட்டை வடிவில் வழங்கப்படும். அதேபோன்று, ஓட்டுனர் உரிமமும் மின்னணு அட்டை வடிவிற்கு மாறுகிறது. இந்த ஓட்டுனர் உரிம அட்டையில் QR Code மற்றும் Micro Chip ஆகியவை கொடுக்கப்பட்டு இருக்கும்.

வாகன ஓட்டிகள் செலுத்தி அபாரதம் மற்றும் தண்டனை விபரங்களை எளிதாக இந்த அட்டையை வைத்து போலீசார் மற்றும் மோட்டார் வாகனத் துறையினர் கண்டறிந்துவிடலாம். 10 ஆண்டுகள் வரையிலான தண்டனை விபரங்களை இந்த புதிய மின்னணு அட்டையை பயன்படுத்தி கண்டுபிடிக்க முடியும்.

அதேபோன்று, வாகனங்களின் ஆவணங்கள் மற்றும் விபரங்கள் அனைத்தும் மின்னணு முறைக்கு மாற்றப்பட உள்ளது. அதேநேரத்தில், தற்போது பயன்பாட்டில் உள்ள ஆர்.சி. புத்தகம் அல்லது வாகனப் பதிவு அட்டையை புதுப்பிக்க வேண்டுமா என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை.

மின்னணு பண பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில், பெட்ரோல் நிலையங்களில் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலமாக பணம் செலுத்தினால் பரிவர்த்தனை கட்டணத்தில் சலுகை வழங்கப்பட்டு வந்தது. வரும் அக்டோபர் 1 முதல் கிரெடிட் கார்டு மூலமாக பணம் செலுத்துவோருக்கு இந்த சலுகை ரத்து செய்யப்படுகிறது. ஆனால், டெபிட் கார்டு மூலமாக செலுத்துவோருக்கு பரிவர்த்தனை கட்டணச் சலுகை தொடரும் என்று தெரிவிக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








