அப்போ வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்புக்கு வாய்ப்பு இல்லைன்னு சொல்லுங்க?
வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு மத்திய நிதி அமைச்சகம் விளக்கம் கொடுத்துள்ளது. இது வாகன நிறுவனங்களுக்கு பெரும் ஏமாற்றத்தை தரும் வகையில் அமைந்துள்ளது.

கொரோனா பிரச்னையால் வாகன உற்பத்தி மற்றும் விற்பனைத் துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து மீண்டு வருவதற்கு சிறப்புச் சலுகைகளை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று வாகன நிறுவனங்கள் கோரிக்கை வைத்து வருகின்றன.

மேலும், வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரி மிக அதிகமாக இருப்பதாகவும், அதனை குறைக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு வாகன நிறுவனங்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றன. ஆனால், இதனை மத்திய அரசு இதுவரை செவி சாய்க்கவில்லை.

இந்த சூழலில், இந்தியாவில் வாகனங்களுக்கான வரி விதிப்பு மிக அதிகமாக இருப்பதால், முதலீடுகளை நிறுத்தி வைக்கப் போவதாக டொயோட்டா கார் நிறுவனத்தின் தலைவர் ஷேகர் விஸ்வநாதன் கூறியதாக வெளியானச் செய்தி பரபரப்பை ஏற்படுத்தியது. இது மத்திய அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது.

இது அரசியல் ரீதியில் சென்றதால், டொயோட்டா உடனடியாக மறுப்பு அறிக்கையும் வெளியிட்டது. இந்த சூழலில், ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என்ற வாகன நிறுவனங்களின் கோரிக்கைக்கு மத்திய நிதி அமைச்சகம் பதில் அளித்துள்ளதாக செய்தி வெளியாகி இருக்கிறது.

கடந்த 30 ஆண்டுகளாக இந்தியாவில் வரி விதிப்பு முறையில் பெரிய உயர்வு இல்லை. மேலும், வாட் வரியை ஒப்பிடும்போது, ஜிஎஸ்டி வரி குறைவாகத்தான் உள்ளது என்றும் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளதாக அந்த செய்தி தெரிவிக்கிறது.

வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்க கோரிக்கை வைப்பதைவிட, வாகன நிறுவனங்கள் தங்களது உற்பத்தி செலவீனத்தை குறைத்து, விற்பனையை அதிகரிக்க முயற்சிக்க வேண்டும்.

அதேபோன்று, தங்களது தாய் நிறுவனமாக செயல்பட்டு வரும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இங்குள்ள வாகன நிறுவனங்கள் தரும் ராயல்டி தொகையை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு அறிவுரை வழங்கி இருப்பதாக தெரிகிறது.

இதனால், வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரியை குறைப்பதற்கு வாய்ப்பு இல்லை என்று தெரிகிறது. ஏற்கனவே மிக மோசமான நிலையில் இந்த இந்திய வாகன சந்தை, கொரோனா பிரச்னையால் பெரிய அடியை சந்தித்துள்ளது.

இந்த நிலையில், வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரியை குறைத்தால், விற்பனை அதிகரித்து தங்களது பொருளாதார பாதிப்பை சரிசெய்ய வழிபிறக்கும் என்று வாகன நிறுவனங்கள் காத்திருந்தன. ஆனால், மத்திய அரசு வழங்கி இருக்கும் அறிவுரை வாகன நிறுவனங்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது.


Click it and Unblock the Notifications








