சேல்ஸ் அதிகமாக இந்த ட்ரிக் ஃபாலோ பண்ணுங்க! எலெக்ட்ரிக் வாகன நிறுவனங்களுக்கு நிதின் கட்காரி செம ஐடியா
மின்சார வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு, மத்திய அமைச்சர் நிதின் கட்காரி வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மின்சார வாகனங்களுக்கான உலகளாவிய மையமாக வரும் 2025ம் ஆண்டில் உருவெடுப்பதற்கான முழு ஆற்றலும், சாத்தியமும் இந்தியாவிற்கு உள்ளது என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளார். அத்துடன் மின்சார வாகனங்களின் விலையை குறைக்க வேண்டும் எனவும் வாகன உற்பத்தி நிறுவனங்களை அவர் வலியுறுத்தியுள்ளார்.

சந்தையை கைப்பற்றவும், வளர்ச்சியை ஊக்குவிக்கவும், ஆரம்பத்தில் லாபத்தை கைவிட வேண்டும் என அவர் கேட்டு கொண்டுள்ளார். உலகிலேயே கச்சா எண்ணெய்யை அதிகம் இறக்குமதி செய்யும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. இது இந்தியாவிற்கு பொருளாதார ரீதியில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

எனவே கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்க தேவையான பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. இதுதவிர பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்களால், இந்தியாவின் பல்வேறு நகரங்கள் காற்று மாசுபாடு பிரச்னையில் சிக்கியுள்ளன. இந்த இரண்டு பிரச்னைகளுக்கும் மின்சார வாகனங்கள் நல்ல தீர்வாக அமையும் என கருதப்படுகிறது.

எனவே மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்காரி, ஆரம்பத்தில் இருந்தே மின்சார வாகனங்கள் மற்றும் மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை தீவிரமாக ஊக்குவித்து வருகிறார். இந்த வரிசையில்தான் வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு அவர் தற்போது இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

வேண்டுகோள் விடுத்திருக்கும் அதே நேரத்தில், இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி செலவு மற்றும் காற்று மாசுபாடு பிரச்னையை குறைக்கும் முயற்சிக்கு ஆதரவு அளிக்கும் வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு அரசு அனைத்து வகையிலும் ஆதரவு அளிக்கும் எனவும் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி உறுதி அளித்துள்ளார்.

இதுகுறித்து நிதின் கட்காரி மேலும் கூறுகையில், ''மின்சார வாகனங்கள்தான் வரும் காலத்தில் செலவு குறைந்த போக்குவரத்து முறையாக இருக்க போகிறது. தற்போதைய நிலையில் வாகன உற்பத்தியாளர்கள், விலையை குறைக்கும் மனநிலையில் இல்லை. விலையை குறைப்பது என்பது ஆரம்பத்தில் ஒரு சில இழப்புகளை ஏற்படுத்தக்கூடும். ஆனால் பல்வேறு நன்மைகளை கொண்டு வரும்.

மார்க்கெட்டிங் யுக்தியின்படி, அதிக விற்பனை எண்ணிக்கையை பெற வேண்டுமானால், நீங்கள் விலையை குறைக்க வேண்டும்'' என்றார். அத்துடன் உலகிலேயே மின்சார வாகனங்களை அதிக எண்ணிக்கையில் உற்பத்தி செய்யும் நாடாக அடுத்த 5 ஆண்டுகளில் உருவெடுப்பதற்கான சாத்தியம் இந்தியாவிற்கு உள்ளதாகவும் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா தனது போக்குவரத்திற்கான எரிபொருள் தேவையை பூர்த்தி செய்து கொள்வதற்கு 80 சதவீதத்திற்கும் மேல் இறக்குமதியை சார்ந்திருக்க வேண்டிய நிலை உள்ளது குறித்தும் நிதின் கட்காரி கவலை தெரிவித்துள்ளார். கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்வது என்பது மிகப்பெரிய பொருளாதார பிரச்னை எனவும் அவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications








