விற்பனையாகாத பிஎஸ்4 கார்கள்... ரூ.125 கோடியை நஷ்ட கணக்கில் எழுதிய மாருதி சுஸுகி!
விற்பனையாகாத பிஎஸ்-4 கார்களின் மதிப்பை நஷ்ட கணக்கில் எழுதி உள்ளது மாருதி சுஸுகி நிறுவனம். இதன் மதிப்பு ரூ.125 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 1ந் தேதி முதல் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இந்த சூழலில், கொரோனா நெருக்கடி காரணமாக, காலக்கெடு நெருங்கியபோது பிஎஸ்4 கார்களை விற்க முடியாத நிலை தயாரிப்பாளர்களுக்கும், டீலர்களுக்கும் ஏற்பட்டது.

இதுதொடர்பாக, வாகன உற்பத்தியாளர் கூட்டமைப்பான சியாம் உச்சநீதிமன்றத்தை அணுகியது. இருப்பில் தேங்கிய பிஎஸ்4 வாகனங்களை விற்பனை செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால், டீலர்களும், தயாரிப்பாளர்களுக்கும் பெரிய நஷ்டம் ஏற்படும் என்றும் தெரிவித்தது.

இதனை பரிசீலித்த உச்சநீதிமன்றம், ஏற்கனவே போதுமான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதை மீண்டும் சுட்டிக் காட்டியது. மேலும், லாக் டவுன் முடிந்த பின்னர் 10 நாட்களில் இருப்பில் இருக்கும் 10 சதவீத பிஎஸ்4 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்யலாம் என்று அனுமதித்தது.

இந்த நிலையில், கொரோனா பிரச்னை அதிகரித்ததால், லாக் டவுன் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. வரும் 31ந் தேதி வரை லாக் டவுன் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், தற்போது கொரோனா பாதிப்பு குறைவான பகுதிகளில் டீலர்கள் திறக்கப்பட்டு இயல்பு நிலை திரும்பி வருகிறது.

இந்த சூழலில், வரும் 31ந் தேதிக்கு பின்னர் லாக் டவுன் நீக்கப்பட்டால், இருப்பில் தேங்கி இருக்கும் பிஎஸ்4 வாகனங்களை விற்பனை செய்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். ஆனால், அது சந்தேகத்திற்கு இடமானதாகவே இருக்கிறது.

இந்த நிலையில், நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி தனது ஆலைகளில் உள்ள யார்டுகளிலும், டீலர்களிலும் இருப்பில் தேங்கி இருக்கும் பிஎஸ்4 வாகனங்களை நஷ்ட கணக்கில் எழுதி உள்ளது. இதன் மதிப்பு ரூ.125 கோடியாக தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே, பிஎஸ்4 வாகனங்களை டீலர்கள் தங்களது பெயரில் பதிவு செய்து பயன்படுத்தப்பட்ட வாகனங்களாக விற்பனை செய்யலாம் என்று யோசனை வழங்கி இருந்தது. அத்துடன், தயாரிப்பு நிறுவனம் திரும்பப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பும் டீலர்களுக்கு வழங்கப்பட்டது. மேலும், வேறு வழி இல்லை எனில், அரசு விதிகளின்படி அழிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிகளுக்கு இணையான எஞ்சினுடன் கார்களை அறிமுகம் செய்வதில் மாருதி முன்னோடியாக மாறியது. கடந்த ஆண்டு முதலே பிஎஸ்6 கார்களை அறிமுகம் செய்தது. மேலும், கடந்த ஆண்டு இறுதியுடன் பிஎஸ்4 கார்கள் உற்பத்தியை நிறுத்துவதாகவும் அறிவித்தது. இதனிடையே, டீசல் மாடல்கள் விற்பனையையும் மாருதி நிறுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








