'எத்தன கோடி ரூபா வாகனமா இருந்தாலும் பறிமுதல் செய்யப்படும்' - உபி போலீஸ் அதிரடி... எதற்காக தெரியுமா?
இந்த விதியை மீறினா எவ்ளோ ரூபா காரா இருந்தாலும் வாகனம் உடனடியாக பறிமுதல் செய்யப்படும் என உபி போலீஸார் அதிரடியாக அறிவித்திருக்கின்றனர்.

உத்தரபிரதேச மாநில போலீஸார் வெளியிட்டிருக்கும் அதிரடி அறிவிப்பால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். குறிப்பாக, ஜாதிப் பெறுமைகளைத் தூக்கிப் பிடிக்கும் நபர்கள் அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்றிருக்கின்றனர். போக்குவரத்து பயன்பாட்டிற்கு பயன்படும் வாகனங்களை, ஒரு சிலர், தாங்கள் இந்த குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்தவர் என்பதை வெளிக்காட்டிக் கொள்ளும் விதமாக ஸ்டிக்கர் மற்றும் பெயர் அச்சுக்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.

இத்தகையோருக்கு ஆப்பு வைக்கின்ற வகையிலேயே உபி மாநில போக்குவரத்துத்துறை அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கின்றது. அதாவது, வாகனங்களில் குறிப்பிட்ட சமூகத்தைக் குறிக்கக் கூடிய ஸ்டிக்கர்கள் இருக்குமானால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஆகையால், அவற்றை உடனடியாக நீக்க வேண்டும் என கூறியிருக்கின்றது.

இதனை மீறினால் வாகனம் பறிமுதல் அல்லது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் பெருவாரியான வாகன உரிமையாளர்கள் தங்களின் கார் அல்லது பிற வாகனங்களின் விண்ட் ஸ்கிரீன், நம்பர் பிளேட் உள்ளிட்டவற்றில் ஜாதிப் பெயர்களைக் குறிப்பிடும் வகையில் ஸ்டிக்கர்களை ஒட்டி வந்தனர்.

இதனால் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டன. குறிப்பாக, குறிப்பிட்ட சில சமூகங்களுக்கு அவர்களின் இந்த செயல் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது. எனவேதான் இதனைத் தவிர்க்கும் விதமாக அதிரடியான நடவடிக்கை உபி மாநில போக்குவரத்துத்துறை எடுத்திருக்கின்றது.

வாகனங்களில் இனி எந்தவிதமான ஜாதிப் பெயர் ஸ்டிக்கர்களையும் ஒட்டக்கூடாது என அறிவித்திருக்கின்றது. உபி மாநிலத்தில் தற்போது பயன்பாட்டில் இருக்கும் 20 வாகனங்களில் குறைந்தது ஒரு வாகனத்திலாவது நிச்சயம் ஜாதி பெயர் இடம் பெற்று விடுகின்றது. பலர் இதனைப் பெருமைக்காக மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர்.

இதுபோன்ற வாகன உரிமையாளர்கள் மீதே நடவடிக்கை எடுக்கும்படி தற்போது அறிவுருத்தப்பட்டிருப்பதாக கான்பூரின் துணை போக்குவரத்து ஆணையர் டிகே திரிபாதி அவர்களுக்கு உத்தரவு கிடைத்துள்ளது. இதனடிப்படையிலேயே மாநிலம் முழுவதும் ஜாதி ஸ்டிக்கர் நீக்கம் பற்றிய தகவல் அறிவிக்கப்பட்டு வருகின்றது.

குறிப்பாக, இந்த உத்தரவை மீறுவோரின் வாகனம் உடனடியாக பறிமுதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மிகக் கடுமையான நடவடிக்கைகளும் எடுக்கப்படலாம் என அதிகாரிகள் வட்டாரம் தற்போது தகவல் வெளியிட்டிருப்பதாக இந்துஸ்தான் டைம்ஸ் ஆங்கில தளம் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், உபி மாநிலத்தைச் சேர்ந்த ஓர் ஆசிரியர் எழுதிய கடிதத்தின் அடிப்படையில், பிரதமர் அலுவலகம் அனுப்பிய கடிதத்தின் வழிகாட்டுதலே இந்த நடவடிக்கைக்கு காரணம் என்றும் இது கூறியிருக்கின்றது.


Click it and Unblock the Notifications








