வைராக்கியத்துடன் முடிவு எடுத்த மத்திய அரசு... பெரும் கஷ்ட காலத்தில் ஆட்டோமொபைல் துறை!
கொரோனா தடுப்புப் பணிகளில் மத்திய அரசு வைராக்கியமாக இருந்து வருவதால், ஆட்டோமொபைல் துறை பெரும் கஷ்ட காலத்தில் உள்ளது. இந்த மாதம் பணியாளர்கள் சம்பளம் உள்ளிட்டவற்றை வழங்குவதில் பெரும் பிரச்னை ஏற்படும் என்பதை கருதி, கவலையில் ஆழ்ந்துள்ளன.

கடந்த ஓர் ஆண்டு காலமாகவே ஆட்டோமொபைல் துறை மிகவும் சுணக்கமான நிலையிலேயே இருந்து வந்தது. போதாக்குறைக்கு சில மாதங்களாக உலகம் முழுவதும் பரவி ஆட்டிப் படைத்து வரும் கொரோனா வைரஸ் பிரச்னை, ஆட்டோமொபைல் துறை செயல்பாடுகளை முற்றிலும் முடக்கி உள்ளது.

தேசிய ஊரடங்கு காரணமாக, இந்தியாவில் செயல்பட்டு வரும் அனைத்து வாகன உற்பத்தி நிறுவனங்களும் உற்பத்திப் பணிகளை அடியோடு நிறுத்தி வைத்துள்ளன.

இந்த நிலையில், இரண்டாவது கட்டமாக அறிவிக்கப்பட்டுள்ள தேசிய ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய உற்பத்தித் துறை சாராத 16 நிறுவனங்களில் உற்பத்திப் பணிகளை துவங்குவதற்கு அனுமதிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு மத்திய உள்நாட்டு வணிக மேம்பாட்டுத் துறை கடிதம் அனுப்பியது.

இந்த கடிதத்தில் ஆட்டோமொபைல் துறை உள்பட 16 விதமான தொழிற்துறை நிறுவனங்கள் ஆலைகளை உரிய வழிகாட்டு முறைகளுடன் உற்பத்திப் பணிகளை துவங்குவதற்கு அனுமதி அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு இருந்தது.

மேலும், 25 சதவீத பணியாளர்களுடன் ஆலைகளில் உற்பத்திப் பணிகள் துவங்கினால் பொருளாதார இழப்பும், வேலை இழப்பு பிரச்னையையும் சமாளிக்க முடியும் என்றும் கூறப்பட்டு இருந்தது. இதனால், ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் இருந்து நல்ல செய்தி வரும் என்று காத்திருந்தன.

இந்த நிலையில், வரும் 20ந் தேதி முதல் குறிப்பிட்ட துறை மற்றும் அமைப்பு சாராத தொழிலாளர்கள் உரிய பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி உற்பத்தி மற்றம் பணிகளை செய்யலாம் என்று தெரிவித்திருந்தது. ஆனால், அந்த பட்டியலில் ஆட்டோமொபைல் துறைக்கு விலக்கு அளிக்கப்படவில்லை.

இதனால், இந்த மாதம் முழுவதும் வாகன உற்பத்தி ஆலைகள் தொடர்ந்து மூடி வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு வாகனம் கூட உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், பல்லாயிரம் கோடி முதலீடுகளையும், பல ஆயிரம் பேர் வாழ்வாதாரத்தையும் வழங்கி வரும் வாகன நிறுவனங்கள் கவலையில் ஆழ்ந்துள்ளன.

கடந்த மாதம் கூட கிட்டதட்ட முக்கால் பங்கு நாட்கள் உற்பத்திப் பணிகள் மற்றும் விற்பனை இருந்ததால், ஓரளவு தாக்குப் பிடித்து விட்டன. ஆனால், இந்த மாதம் இதுவரை ஒரு நாள் கூட உற்பத்தி நடக்கவில்லை.

இந்த நிலையில், அடுத்த மாதம் 3ந் தேதி வரை தேசிய ஊரடங்கு காலம் நீட்டிக்கப்பட்டு விட்டதால், இந்த மாத்தில் உற்பத்தி நடக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், பல ஆயிரம் ஊழியர்களுக்கான சம்பளம், நடைமுறை செலவீனங்கள், உற்பத்தி இழப்பால் பொருளாதார முடக்கம் போன்றவற்றால் பெரும் கஷ்ட காலத்தில் வாகன நிறுவனங்கள் உள்ளன.

வரும் 20ந் தேதி முதல் வாகன உற்பத்தி ஆலைகளில் உரிய பாதுகாப்பு வழிகாட்டு முறைகளை பின்பற்றி குறைந்த பணியாளர்களுடன் ஷிஃப்ட் முறையில் உற்பத்திப் பணிகளை துவங்குவதற்கு அனுமதித்தால் சிறப்பாக இருக்கும் என்ற கருத்துடன் வாகன நிறுவனங்களும், அதன் சார்புடைய உதிரிபாக உற்பத்தி நிறுவனங்களும் காத்திருக்கின்றன.


Click it and Unblock the Notifications








