எங்கே செல்லும் இந்த பாதை... கலங்கி நிற்கும் ஆட்டோமொபைல் துறை!
இந்திய ஆட்டோமொபைல் துறை வளர்ச்சி அபரிமிதமான உச்சத்தையும், வீழ்ச்சியையும் கலந்து கட்டி பதிவு செய்து வந்திருக்கிறது. ஆனால், இப்போது உள்ள எக்காலத்திலும் கண்டிராத ஒரு அசாதாரணமான சூழலை கடந்து செல்லும் கட்டாயத்தில் இருக்கிறது.

கொரோனா பாதிப்பால் கடந்த மார்ச் 24ந் தேதி முதல் இந்தியா முழுவதும் லாக் டவுனில் உள்ளது. தேசிய ஊரடங்கு காரணமாக, மக்கள் வீடுகளுக்குள் முடங்கி இருப்பதால், அனைத்து தொழில்களுமே அடியோடு பாதிக்கப்பட்டுள்ளன. அனைத்து துறைகளுமே பல்லாயிரம் கோடி வருவாய் இழப்பை சந்தித்து வரும் இவ்வேளையில், ஆட்டோமொபைல் துறையும் மிகப்பெரிய இழப்பை சந்தித்து வருகிறது.

நாள் ஒன்றுக்கு ரூ.2,500 கோடி வரை இழப்பு ஏற்பட்டு வருவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்திய ஆட்டோமொபைல் துறை இதுவரை சந்தித்திராத ஒரு அனுபவத்தை இந்த மாதம் கடந்து கொண்டிருக்கிறது.

அதாவது, இந்திய ஆட்டோமொபைல் துறை வரலாற்றில் முதல்முறையாக வாகன விற்பனை பூஜ்யம் என்ற அளவில், ஒரு வாகனம் கூட விற்பனை செய்யப்படாத மாதமாக 2020 ஏப்ரல் மாதம் வரலாற்றில் பதிவு செய்யப்பட உள்ளது. இந்த அசாதாரணமான நிலையை கடந்து செல்வதற்கு ஆட்டோமொபைல் துறை நிறுவனங்கள் கடும் பிரத்யேனங்களை சந்திக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளன.

இந்தியாவின் மொத்த உற்பத்தி திறனில் (GDP) ஆட்டோமொபைல் துறை 8 சதவீத பங்களிப்பையும், அரசின் மொத்த வரி வருவாயில் 15 சதவீதம் அளவுக்கான பங்களிப்பையும் வழங்கி வருகிறது. இந்த நிலையில், ஒரு வாகனம் கூட விற்பனையாகாததால், இந்த மாதம் பெரும் பொருளாதார இழப்பை இந்த துறை சந்தித்துள்ளதோடு, அரசின் வருவாயிலும் பெரும் இழப்பை கொடுத்துள்ளது.

மேலும், ஆட்டோமொபைல் துறையை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் 40 லட்சம் பேர் பணிபுரிகின்றனர். விற்பனை பூஜ்யமாகிவிட்டதால், ஆட் குறைப்பு, சம்பள குறைப்பு நடவடிக்கைகளில் வாகன உற்பத்தி நிறுவனங்களும், டீலர்களும் இறங்கும் வாய்ப்பு இருப்பதால் தொழிலாளர்கள் மத்தியில் அச்சமான சூழல் நிலவுகிறது.

ரெட் அலர்ட் உள்ள பகுதிகளை தவிர்த்து, பிற பகுதிகளில் ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனங்கள் பாதுகாப்பு நிபந்தனைகள் மற்றும் வழிகாட்டு முறைகளுடன் செயல்பட சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், வாகன உதிரிபாகங்களை வழங்கும் நிறுவனங்கள் ரெட் அலர்ட் உள்ள பகுதிகளில் இருப்பதால், அனைத்து பாகங்களையும் பெறுவதற்கான வாய்ப்பு இல்லாத நிலை உள்ளது. அதேபோன்று, வெளிநாடுகளில் இருந்தும் முக்கிய பாகங்களை இறக்குமதி செய்ய முடியாத நிலையும் உள்ளது.

அத்துடன், பெரு நகரங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் இருப்பதால், டீலர்களை திறக்க முடியாத நிலை உள்ளது. உற்பத்தி செய்தாலும், அதனை விற்பனை செய்ய இயலாத நிலை தொடர்கிறது. வரும் மே 3ந் தேதிக்கு பின்னர் ஊரடங்கு தளர்த்தப்பட்டால் மட்டுமே, வாகன உற்பத்தி நிறுவனங்கள் உற்பத்தியை துவங்குவதற்கான ஆயத்தப் பணிகளை துவங்கும்.

மேலும், அடுத்த மாத மத்தியில் இருந்தே விற்பனை மற்றும் உற்பத்திப் பணிகளை துவங்க முடியும். இதனால், கிட்டத்தட்ட 2 மாதங்கள் வரை வாகன உற்பத்தி முடங்கி இருக்கும் நிலை உள்ளது. இந்த இரண்டு மாதங்கள் இழப்பிலிருந்து சீரடைவதற்கு பல மாதங்கள், ஏன் ஓரிரு ஆண்டுகள் கூட பிடிக்கும் நிலை உருவாகி இருக்கிறது.

கடந்த ஆண்டு முதலே இந்திய ஆட்டோமொபைல் துறை பல்வேறு கடினமான சூழலை சந்தித்து வந்த வேளையில், இப்போது கொரோனா ஏற்படுத்தி உள்ள தாக்கம் பெரும் இழப்பை கொடுத்துள்ளது. இந்த நிலையில், வாகன உற்பத்தி மற்றும் விற்பனைத் துறைக்கு அரசு போதிய தளர்வுகளை அளித்து கை தூக்கி விட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி இருக்கிறது.

எனினும், லாக் டவுன் முடிந்தால் மட்டுமே அடுத்த கட்ட நடவடிக்கைகளை ஆட்டோமொபைல் துறையினர் எடுக்க முடியும். ஆனால், லாக் டவுன் எப்போது முடியும் என்பது கொரோனாவுக்கே வெளிச்சம்!


Click it and Unblock the Notifications








