மஹிந்திரா நிறுவனத்தின் உயர் அதிகாரி விவேக் நாயர் பதவி விலகினார்
மஹிந்திரா குழுமத்தின் உயர் அதிகாரியாக பதவி வகித்து வந்த விவேக் நாயர் பதவி விலகி உள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் பதவி விலகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மஹிந்திரா குழுமத்தின் முக்கிய உயர் அதிகாரிகளில் ஒருவராக விவேக் நாயர் இருந்து வந்தார். மஹிந்திரா நிறுவனத்தின் பல முக்கிய முடிவுகளை எடுப்பதில் விவேக் நாயர் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வந்தார்.

இந்த நிலையில், அவர் மஹிந்திரா குழுமத்திலிருந்து பதவி விலகி உள்ளதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது,"ஒவ்வொரு பயணம் துவங்கும்போது, அந்த பயணம் ஒரு நாள் முடிவடையும். மஹிந்திராவுடன் கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் பயணத்திற்கு விடை கொடுத்துள்ளேன்.

இது நிச்சயம் சிறந்த பயணமாக இருந்தது. அற்புதமான அனுபவங்களுடன் கற்றுக் கொண்டதும் அதிகம். ஏராளமான நினைவுகளை எனது சக நண்பர்களை வழங்கியுள்ளனர். அனைவருக்கும் நன்றி," என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2005ம் ஆண்டு மஹிந்திரா நிறுவனத்தில் சந்தைப்படுத்துதல் பிரிவு மூத்த துணைத் தலைவராக பதவி ஏற்றார். அதுமுதல் பல்வேறு உயர் பொறுப்புகளில் இருந்தார்.

மஹிந்திரா ஆட்டோமோட்டிவ் நிறுவனத்தின் சந்தைப்படுத்துதல் பிரிவின் தலைமை அதிகாரியாக இருந்த விவேக் நாயர் கடந்த 2017ம் ஆண்டு மஹிந்திரா கார்ப்பரேட் பிராண்டின் சந்தைப்படுத்துதல் பிரிவு தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், மஹிந்திராவுடன் தனது 15 ஆண்டுகால பிணைப்பிலிருந்து இன்று விடைபெற்றிருக்கிறார்.

மஹிந்திராவில் சேர்வதற்கு முன்னதாக இங்கிலாந்தை சேர்ந்த ரெக்கிட் பென்கிசர் பிஎல்சி நிறுவனத்தில் 4 ஆண்டு 6 மாதங்கள் பணிபுரிந்துள்ளார். அங்கும் பல்வேறு உயர் பொறுப்புகளில் அவர் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

லாக் டவுன் முடிந்து சில மாதங்கள் டெல்லியில் இருக்க அவர் திட்டமிட்டுள்ளார். மேலும், உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வரும் அவரது தாயாருடன் நேரத்தை செலவிடவும் அவர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.


Click it and Unblock the Notifications








