புத்தாண்டு முதல் ஃபோக்ஸ்வேகன் கார்களின் விலை உயரப்போகிறது... எவ்வளவு சதவீதம் தெரியுமா?
புத்தாண்டு முதல் ஃபோக்ஸ்வேகன் நிறுவன கார்களின் விலை உயரவுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

போலோ மற்றும் வெண்டோ கார்களின் விலை வரும் 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2.5 சதவீதம் வரை உயர்த்தப்படும் என ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் அறிவித்துள்ளது. உற்பத்தி செலவுகள் அதிகரித்து வரும் காரணத்தால், புத்தாண்டு முதல் கார்களின் விலைகளை உயர்த்தவுள்ளதாக ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

போலோ மற்றும் வெண்டோ கார்கள் தவிர, டி-ராக் (T-Roc) மற்றும் டிகுவான் ஆல்ஸ்பேஸ் (Tiguan Allspace) ஆகிய கார்களையும் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனை செய்து வருகிறது. இந்த 2 கார்களும் முழுவதும் கட்டமைக்கப்பட்ட நிலையில், இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டு (CBU - Completely Built Units) விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இந்த கார்களின் விலைகளை ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் திருத்தியமைக்கவில்லை. தற்போதைய நிலையில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் போலோ மற்றும் வெண்டோ ஆகிய இரண்டு கார்கள் மட்டும்தான் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் ஓரளவிற்கு பிரபலமாக உள்ளன. இதில், போலோ பிரீமியம் ஹேட்ச்பேக் ரக கார் ஆகும்.

மாருதி சுஸுகி பலேனோ, ஹூண்டாய் ஐ20, டாடா அல்ட்ராஸ், டொயோட்டா க்ளான்சா உள்ளிட்ட கார்கள் உடன் போலோ பிரீமியம் ஹேட்ச்பேக் போட்டியிட்டு வருகிறது. அதே சமயம் ஃபோக்ஸ்வேகன் வெண்டோ செடான் ரக கார் ஆகும். மிக நீண்ட காலமாக பெரிதாக எந்தவொரு அப்டேட்டும் இல்லாமல் இந்திய சந்தையில் ஃபோக்ஸ்வேகன் வெண்டோ விற்பனையில் இருந்து வருகிறது.

எனவே வெண்டோ காரின் புதிய தலைமுறை மாடலை ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்ய தயாராகி கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அனேகமாக அடுத்த ஆண்டு இறுதியில் புதிய தலைமுறை ஃபோக்ஸ்வேகன் வெண்டோ கார், இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே ஃபோக்ஸ்வேகன் மட்டுமல்லாது, இன்னும் ஏராளமான முன்னணி நிறுவனங்களும் கார்களின் விலைகளை உயர்த்தவுள்ளதாக அதிரடியாக அறிவித்துள்ளன. இதில், இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி, ஃபோர்டு, கியா, ஹூண்டாய், மஹிந்திரா, ரெனால்ட், எம்ஜி மோட்டார் ஆகியவை முக்கியமானவை.

டூவீலர்களை பொறுத்தவரையில் உலகின் மிகப்பெரிய இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் ஜாவா ஆகிய நிறுவனங்களின் தயாரிப்புகள் விலை உயரவுள்ளன. மேற்கண்ட அனைத்து நிறுவனங்களின் வாகனங்கள் விலையும் வரும் 2021ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் உயரவுள்ளது.

உற்பத்தி செலவு அதிகரித்து வருவதன் காரணமாகவே விலைகளை உயர்த்தவுள்ளதாக வாகன உற்பத்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. புத்தாண்டில் புதிய வாகனங்களை வாங்கலாம் என முடிவு செய்திருந்த வாடிக்கையாளர்களுக்கு இந்த விலை உயர்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விலை உயர்வதால், வாகனங்களின் விற்பனை சற்று சரியலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








