மல்டி பிராண்டு யூஸ்டு கார் விற்பனையில் இறங்கும் ஃபோக்ஸ்வேகன்!
இந்தியாவில் மல்டி பிராண்டு யூஸ்டு கார் விற்பனையில் களமிறங்குவதற்கு ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

புதிய கார்களுக்கு இணையாக பயன்படுத்தப்பட்ட கார்களின் விற்பனையும் மிக வலுவாக இருந்து வருகிறது. எனவே, முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்கள் பயன்படுத்தப்பட்ட கார் விற்பனையிலும் ஈடுபட்டு வருகின்றன. மேலும், பல நிறுவனங்கள் தனது பிராண்டின் யூஸ்டு கார்களை விற்பனை செய்யும் ஷோரூம்களையும் நடத்தி வருகின்றன.

மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனங்கள் அனைத்து பிராண்டு கார்களையும் விற்பனை செய்வதற்கான பிரத்யேக ஷோரூம்களை நடத்தி வருகிறது. இது தனி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில், அனைத்து பிராண்டுகளின் யூஸ்டு கார்களை விற்பனை செய்யும் தொழிலை துவங்குவதற்கு ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 105 தஸ் வெல்ட்ஆட்டோ என்ற பெயரில் இந்த ஷோரூம்கள் திறக்கப்படும்.

இந்த புதிய ஷோரூம்கள் மூலமாக அதிக வெளிப்படைத்தன்மையுடன், சரியான விலையில் பயன்படுத்தப்பட்ட கார்களை விற்பனை செய்ய உள்ளதாக ஃபோக்ஸ்வேகன் தெரிவித்துள்ளது.

நாட்டின் அனைத்து பெருநகரங்களிலும் 105 தஸ் வெல்ட்ஆட்டோ யூஸ்டு கார் ஷோரூம்கள் விரைவில் திறக்கப்பட உள்ளன. இந்த ஷோரூம்களில் வரும் பயன்படுத்தப்பட்ட கார்கள் முழுமையாக பரிசோதிக்கப்பட்ட பின்னரே விற்பனைக்கு செல்லும்.

மேலும், பயன்படுத்தப்பட்ட கார்களில் இருக்கும் பழுதுகள் மற்றும் பிரச்னைகள் நீக்கப்பட்டு விற்பனைக்கு கொண்டு செல்லப்பட உள்ளது. மேலும், ஆவணங்களும் முறையாக சரிபார்த்த பின்னரே விற்பனை செய்யப்படும் என்பதால், வாடிக்கையாளர்கள் நம்பிக்கையுடன் பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்குவதற்கான வாய்ப்பை பெறுவர்.

ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் புதிய 105 தஸ் வெல்ட் ஆட்டோ ஷோரூம்களில் விற்பனையாகும் கார்களுக்கு ஆக்சஸெரீகள், பராமரிப்புத் திட்டங்கள், ஓர் ஆண்டுக்கான வாரண்டி ஆகியவையும் வழங்கப்படும். இது வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் மதிப்பை வழங்கும்.

ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் 105 தஸ் வெல்ட் ஆட்டோ யூஸ்டு கார் விற்பனைப் பிரிவுக்காக பிரத்யேக மொபைல்போன் செயலியும் அறிமுகம் செய்யப்ட உள்ளது. இதன்மூலமாக, மிக எளிதாக யூஸ்டு கார்களை தேர்வு செய்து வாங்குவதற்கான வாய்ப்பை வாடிக்கையாளர்கள் பெற முடியும்.


Click it and Unblock the Notifications








