இந்தியாவில் டீசல் கார்கள் விற்பனை... ஃபோக்ஸ்வேகன் முக்கிய முடிவு!
கடுமையான மாசு உமிழ்வு விதிகள் இந்தியாவில் அமலுக்கு வந்துள்ள நிலையில், டீசல் கார்கள் விற்பனை குறித்த முக்கிய முடிவை ஃபோக்ஸ்வேகன் எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

கடந்த ஏப்ரல் 1ந் தேதி முதல் இந்தியாவில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான எஞ்சினுடன் கார் உள்ளிட்ட வாகனங்கள் விற்பனை செய்வது கட்டாயமாக்கப்பட்டது. இதனால், அனைத்து நிறுவனங்களும் பிஎஸ்-6 எஞ்சினுடன் கார் மாடல்களை அறிமுகப்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில், பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக டீசல் எஞ்சின்களை மேம்படுத்துவதற்கு அதிக முதலீடு தேவைப்படுகிறது. மேலும், பெட்ரோல் விலையை நெருங்கும் அளவுக்கு டீசல் விலையும் உயர்ந்துவிட்டது.

இதுதவிர்த்து, எதிர்காலத்தில் மாசு உமிழ்வு பிரச்னை காரணமாக, டீசல் கார்கள் மீது அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் வாய்ப்பு உள்ளதாக வாடிக்கையாளர்கள் கருதுகின்றனர். இதனால், டீசல் கார்களின் விற்பனை கணிசமாக குறைந்துவிட்டது.

இவற்றை மனதில் வைத்து, பெரும்பாலான கார் நிறுவனங்கள் டீசல் கார் மாடல்களின் உற்பத்தியை அடியோடு நிறுத்திவிட்டது. இந்த நிலையில், ஃபோக்ஸ்வேகன் நிறுவனமும் டீசல் கார் விற்பனைக்கு முற்றிலுமாக முழுக்கு போடுவதற்கு திட்டமிட்டுள்ளது.

தற்போது டீசல் கார்களுக்கு இணையான அனுபவத்தை தரும் வகையில், டர்போசார்ஜருடன் இயங்கும் தனது டிஎஸ்ஐ வகை பெட்ரோல் எஞ்சின்களுடன் கார்களை அறிமுகப்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறது. எதிர்காலத்தில் டீசல் கார் அறிமுகம் குறித்த திட்டம் எதையும் அந்நிறுவனம் வகுக்கவில்லை.

ஃபோக்ஸ்வேகன் போலோ, வென்ட்டோ, டி ராக், டிகுவான் ஆல்ஸ்பேஸ் ஆகிய கார்கள் பெட்ரோல் எஞ்சின் தேர்வில் மட்டுமே வழங்கப்படும். டீசல் எஞ்சின் தேர்வுகளில் இனி வருவதற்கான வாய்ப்பு இல்லை என்று எக்கனாமிக் டைம்ஸ் ஆட்டோ தளம் செய்தி கூறுகிறது.

மேலும், எஸ்யூவி கார் மாடல்களை களமிறக்குவதில் அதிக கவனம் செலுத்தவும் ஃபோக்ஸ்வேகன் திட்டமிட்டுள்ளது. இதன்மூலமாக, இந்திய மார்க்கெட்டில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்ட முடியும் என்று கருதுகிறது.


Click it and Unblock the Notifications








