பட்ஜெட் கார்களை புதிய பிராண்டில் களமிறக்க ஃபோக்ஸ்வேகன் திட்டம்
இந்தியாவில், பட்ஜெட் கார் மாடல்களை புதிய பிராண்டு பெயரில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ஜெர்மனியை சேர்ந்த ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்திய கார் சந்தையில் ஒரு கை பார்த்துவிட வேண்டும் என்ற நோக்கில் புரொஜெக்ட் 2.0 என்ற திட்டத்தை செயல்படுத்தி உள்ளது. இந்த திட்டத்தின் மூலமாக இந்திய சந்தையில் குறிப்பிடத்தக்க சந்தைப் பங்களிப்பை பெற்றுவிட வேண்டும் என்பதில் முனைப்பாக உள்ளது.

இதன்படி, ஸ்கோடா மற்றும் ஃபோக்ஸ்வேகன் ஆகிய நிறுவனங்களின் நிர்வாகத்தை ஒரே குடையின் கீழ் கொண்டு வந்துள்ளதுடன், பல புதிய கார் மாடல்களை இரண்டு பிராண்டுகளிலும் அறிமுகம் செய்யத் துவங்கி இருக்கிறது. குறிப்பாக, எஸ்யூவி வகை கார்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.

மேலும், ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் MQB கட்டமைப்புக் கொள்கையை தழுவி இந்தியாவுக்காக மாறுதல்கள் செய்யப்பட்ட MQB A0 என்ற கட்டமைப்புக் கொள்கையின் கீழ் சில புதிய மாடல்களையும் இந்தியாவுக்காக உருவாக்கி அறிமுகம் செய்யும் திட்டங்களிலும் இறங்கி இருக்கிறது.

இந்த சூழலில், இந்தியாவில் பட்ஜெட் வகை கார்களை புதிய பிராண்டில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கும் ஃபோக்ஸ்வேகன் குழுமம் திட்டமிட்டுள்ளதாக லைவ்மிண்ட் தளத்தின் செய்தி தெரிவிக்கிறது.

இந்தியாவுக்கான எம்க்யூபி ஏ0 கட்டமைப்புக் கொள்கையில் உருவாக்கப்படும் சில பட்ஜெட் கார் மாடல்களை ஜெட்டா என்ற துணை பிராண்டில் விற்பனை செய்வதற்கு ஃபோக்ஸ்வேகன் திட்டமிட்டுள்ளதாகவும் அந்த செய்தி தெரிவிக்கிறது.

கடந்த ஆண்டு சீனாவில் ஜெட்டா என்ற புதிய கார் பிராண்டை ஃபோக்ஸ்வேகன் அறிமுகம் செய்தது. இந்த கார்களை சீனாவை சேர்ந்த FAW நிறுவனத்துடன் இணைந்து ஃபோக்ஸ்வேகன் தயாரித்து அங்கு விற்பனை செய்கிறது.

ஜெட்டா பிராண்டில் ஒரு செடான் மற்றும் இரண்டு எஸ்யூவி மாடல்களை ஃபோக்ஸ்வேகன் அறிமுகம் செய்தது. இந்த கார்கள் ஜெர்மனியில் உருவாக்கப்பட்டன. இதே பாணியில் இந்தியாவிலும் ஜெட்டா பிராண்டில் புதிய கார் மாடல்களை கொண்டு வர ஃபோக்ஸ்வேகன் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

குறிப்பாக, வளர்ந்து வரும் கார் சந்தைகளில் ஜெட்டா பிராண்டு கார்களை கொண்டு செல்லவும் ஃபோக்ஸ்வேகன் முடிவு செய்துள்ளது. எனவே, இந்தியாவில் ஜெட்டா பிராண்டு கார்களை அறிமுகம் செய்வது குறித்து ஃபோக்ஸ்வேகன் தீவிரமாக பரிசீலனை செய்து வருவதாகவும் தெரிய வந்துள்ளது.

இதுதவிர்த்து, இந்தியாவில் டாக்சி மார்க்கெட்டிலும் தீவிர கவனம் செலுத்த ஃபோக்ஸ்வேகன் திட்டமிட்டுள்ளது. இந்திய டாக்சி மார்க்கெட் மிக வலுவான சந்தையை பெற்றிருப்பதால், இந்த முடிவை ஃபோக்ஸ்வேகன் எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








