6 நிறத்தேர்வுகளில் இந்தியாவிற்கு வரும் புதிய ஃபோக்ஸ்வேகன் டி-ராக்...
ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் டி-ராக் எஸ்யூவி காரை இந்தியாவில் அறிமுகப்படுத்த அனைத்து விதங்களிலும் தயாராகி வருகிறது. சந்தையில் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ள இந்த எஸ்யூவி கார் இந்த மார்ச் மாதம் 18ஆம் தேதி அறிமுகமாகவுள்ளது.

இதற்கிடையில் டி-ராக் மாடலில் வழங்கப்படவுள்ள தொழிற்நுட்பங்கள் மற்றும் நிறத்தேர்வுகள் உள்ளிட்ட தகவல்கள் புகைப்படம் ஒன்றின் மூலம் வெளிவந்துள்ளன. இந்த புகைப்படத்தில் டி-ராக் எஸ்யூவி மாடல் இந்தியாவில் 1.5 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் என்ஜினுடன் வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்த பெட்ரோல் என்ஜின் 150 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. அதிகப்பட்சமாக 205 km/h என்ற வேகத்தில் இயங்கக்கூடிய இந்த எஸ்யூவி கார் 0-லிருந்து 100 km/h என்ற வேகத்தை வெறும் 8.4 வினாடிகளில் எட்டிவிடும் திறனுடையது.

மேலும் தற்போது இணையத்தில் கசிந்துள்ள புகைப்படம், இந்த கார் சில கவனிக்கத்தக்க வகையிலான வசதிகளையும், பாதுகாப்பு அம்சங்களையும் கொண்டிருப்பதையும் வெளிக்காட்டுகிறது. இந்த வகையில் பார்த்தோமேயானால், புதிய ஃபோக்ஸ்வேகன் டி-ராக் மாடல் எல்இடி தரத்தில் ஹெட்லைட்ஸ், டிஆர்எல்கள் மற்றும் டெயில்லைட்கள், லெதரில் இருக்கைகள் மற்றும் முழுவதும் டிஜிட்டலில் காக்பிட் உள்ளிட்டவற்றை பெற்றுள்ளது.

பாதுகாப்பு தொழிற்நுட்பங்களாக இந்த காரில் 6 காற்றுப்பைகள், ஏபிஎஸ், இஎஸ்பி (எலக்ட்ரானிக் ஸ்டேபிளிட்டி கண்ட்ரோல்), டிசிஎஸ் (ட்ராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம்), இடிஎல் (எலக்ட்ரானிக் டிஃப்ரென்ஷியல் லாக்), எம்எஸ்ஆர் (மோட்டார் ஸ்லிப் ரெகுலேஷன் மற்றும் ஹில்-ஸ்டார்ட் அசிஸ்ட் போன்றவற்றை கொண்டுள்ளது.

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் விரைவில் இந்திய சந்தைக்கு விற்பனைக்கு வரவுள்ள 2020 டி-ராக் எஸ்யூவி மாடலுக்கு அடர்த்தியான நீலம் பெர்ல், குர்குமா மஞ்சள்/கருப்பு, என்ர்ஜெட்டிக் ஆரஞ்ச்/கருப்பு, தெளிவான வெள்ளை/கருப்பு, ரவீனா நீலம்/கருப்பு மற்றும் இந்தியம் க்ரே/கருப்பு உள்ளிட்ட 6 நிறத்தேர்வுகளை வழங்கியுள்ளது.

ஸ்கோடா இந்தியாவுடன் இந்நிறுவனம் கொண்டுள்ள கூட்டணியால் உருவான 'இந்தியா 2.0' ப்ராஜெக்ட்டின் முதல் தயாரிப்பு மாடலாக வெளியாகும் இந்த எஸ்யூவி கார், ஃபோக்ஸ்வேகனின் எம்க்யூபி ஏ0 இந்தியா ப்ளாட்ஃபாரத்தில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த ப்ளாட்ஃபாரம் இந்நிறுவனத்தின் சர்வதேச எம்க்யூபி ஏ0 கட்டமைப்பை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த புதிய எஸ்யூவி காரை சிபியூ முறையில் (முழுவதும் தயாரிக்கப்பட்ட நிலையில்) இந்திய சந்தைக்கு கொண்டுவர ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் அர்த்தம், இந்தியாவில் டி-ராக் மாடல் குறைவான எண்ணிக்கையிலேயே சந்தைப்படுத்தப்படவுள்ளது என்பதாகும்.

'இந்தியா 2.0' ப்ராக்ஜெட்டின் ஒரு பகுதியாக இந்த கார் இந்தியாவில் வெளிவரவுள்ளதால், இந்த காரின் அறிமுகத்தில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் மிகவும் கவனமாக செயல்பட்டு வருகிறது. மேலும் இந்த ப்ராக்ஜெட்டினால் இன்னும் இரண்டு வருடங்களுக்கு இந்த இரு கூட்டணி நிறுவனங்களில் இருந்து அதிக எண்ணிக்கையில் எஸ்யூவி மாடல்களை எதிர்பார்க்கலாம்.

ஃபோக்ஸ்வேகன் டி-ராக் மாடல் அறிமுகத்திற்கு பிறகு ஜீப் காம்பஸ் மற்றும் ஹூண்டாய் டக்ஸன் மாடல்களுக்கு போட்டியாக இந்திய சந்தையில் நிலைநிறுத்தப்படும். இந்த எஸ்யூவி மாடலின் விலை எக்ஸ்ஷோரூமில் ரூ.25 லட்சம் அளவில் நிர்ணயிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.
Source: Team bhp


Click it and Unblock the Notifications








