கொரோனா பீதி... புதிய முறையில் இந்தியாவில் அறிமுகமாகும் புதிய ஃபோக்ஸ்வேகன் டி ராக்!
கொரோனா அச்சம் காரணமாக, ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவியின் அறிமுக நிகழ்ச்சிக்கு புதிய முறை கையாளப்பட உள்ளது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

கொரோனா வைரஸ் பாதிப்பு உலகையே முடங்க வைத்துள்ளது. எங்கு, எப்போது, யாருக்கு இந்த பாதிப்பு ஏற்படும் என்று சொல்ல முடியாத அளவுக்கு இந்த வைரஸ் பாதிப்பு உலக அளவில் பெரும் பிரச்னையாக மாறி இருக்கிறது. இந்த நிலையில், அதிக அளவில் மக்கள் கூடுவதை தவிர்ப்பதற்கு அந்தந்த நாட்டு அரசுகள் அறிவுறுத்தி வருகின்றன.

மேலும், கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளையும் ஒத்தி வைக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. மக்கள் அதிகம் கூடும் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன.

இந்த சூழலில், ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவி இந்தியாவில் வரும் 18ந் தேதி விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. இதற்கான அறிமுக நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு பத்திரிக்கையாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

இந்தநிலையில், கொரோனா பாதிப்பை தவிர்க்கும் விதத்தில், பத்திரிக்கையாளர்கள் மற்றும் அதிகாரிகள் ஒரே இடத்தில் அதிகம் கூடுவதை தவிர்க்க ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன்படி, டி ராக் எஸ்யூவியின் விலை அறிவிப்பு நிகழ்வை ஆன்லைன் தளங்களில் ஒளிபரப்ப முடிவு செய்துள்ளது.

ஆட்டோமொபைல் துறையினர் மற்றும் பத்திரிக்கையாளர்களுக்கு படங்கள், அதிகாரப்பூர்வ செய்திக் குறிப்பு ஆகியவற்றை வழக்கம்போல் இ-மெயில் மூலமாக பகிர்ந்து கொள்வதற்கும் ஃபோக்ஸ்வேகன் திட்டமிட்டுள்ளது.

இதனிடையே, பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவிக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த எஸ்யூவியானது ஹூண்டாய் டூஸான் உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

புதிய ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவியில் 1.5 லிட்டர் டிஎஸ்ஐ எவோ பெட்ரோல் எஞ்சின் வழங்கப்பட இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 147 பிஎச்பி பவரையும், 240 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 7 ஸ்பீடு டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கும்.

இதன் நான்கு சிலிண்டர்கள் கொண்ட எஞ்சின் புதிய தொழில்நுட்ப முறையை பெற்றிருக்கும். அதாவது, தேவைப்படும்போது மட்டுமே நான்கு சிலிண்டர்களும் இயங்கும். தேவையற்ற சமயத்தில் இரண்டு சிலிண்டர்களின் இயக்கம் தானியங்கி முறையில் நிறுத்திக் கொள்ளும்.

எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், வெர்ச்சுவல் காக்பிட் முறையிலான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை வழங்கப்பட்டு இருக்கும்.

புதிய ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவியானது ரூ.17 லட்சம் முதல் ரூ.20 லட்சம் இடையிலான விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. ஜீப் காம்பஸ், எம்ஜி ஹெக்டர் உள்ளிட்ட கார்களுக்கும் போட்டியாக இருக்கும். ஆனால், விலை அடிப்படையில் பிரிமீயம் மாடலாக நிலைநிறுத்தப்பட இருக்கிறது.


Click it and Unblock the Notifications








