வால்வோ எக்ஸ்சி40 எலெக்ட்ரிக் எஸ்யூவி குறித்த ஒரு சூப்பர் நியூஸ்!
வால்வோ எக்ஸ்சி40 எலெக்ட்ரிக் எஸ்யூவி உற்பத்தி குறித்து சூப்பரான செய்தி வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் தொடர்ந்து பார்க்கலாம்.

எலெக்ட்ரிக் கார் சந்தை வலுவடைந்து வரும் நிலையில், வால்வோ சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமும் அடுத்த ஆண்டு 5 ஆண்டுகளில் பல புதிய சொகுசு ரக எலெக்ட்ரிக் கார் மாடல்களை அறிமுகப்படுத்த உள்ளது. இதில் முதலாவாதக எக்ஸ்சி40 எஸ்யூவியின் அடிப்படையிலான எலெக்ட்ரிக் எஸ்யூவி மாடலை உருவாக்கி இருக்கிறது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியிடப்பட்ட இந்த எஸ்யூவி வாடிக்கையாளர் மத்தியில் அதிக ஆவலை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இந்த எஸ்யூவியின் உற்பத்தி முறைப்படி துவங்கப்பட்டு இருக்கிறது.

வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் என்ற பெயரில் வெளியிடப்பட்ட இந்த எஸ்யூவி உலகின் பல்வேறு நாடுகளில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இந்தியாவிலும் இந்த புதிய எலெக்ட்ரிக் கார் மாடல் அடுத்த ஆண்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

வால்வோ நிறுவனத்தின் தாய் நிறுவனமான சீனாவை சேர்ந்த கீலி குழுமத்துடன் இணைந்து இந்த புதிய எலெக்ட்ரிக் கார் மாலை காம்பேக்ட் மோடுலர் ஆர்க்கிடெக்ச்சர்(CMA) என்ற கட்டமைப்புக் கொள்கையின் அடிப்படையில் உருவாக்கி இருக்கிறது.

புதிய வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் எலெக்ட்ரிக் கார் சோதனை தரவுகளின் அடிப்படையில் 399 கிமீ தூரம் வரை பயணிக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக 408 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறனை இதன் மின் மோட்டார் பெற்றுள்ளது.

இந்த புதிய சொகுசு எலெக்ட்ரிக் எஸ்யூவியின் பேட்டரியை டிசி ஃபாஸ்ட் சார்ஜர் பயன்படுத்தினால் 40 நிமிடங்களில் 80 சதவீதம் அளவுக்கு சார்ஜ் செய்துவிட முடியும். சீனாவை சேர்ந்த சிஏடிஎல் மற்றும் தென்கொரியாவை சேர்ந்த எல்ஜி கெம் ஆகிய நிறுவனங்களிடம் இருந்து பேட்டரியை சப்ளை பெறுவதற்கு வால்வோ திட்டமிட்டுள்ளது.

வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் எலெக்ட்ரிக் எஸ்யூவிக்கு அதிக டிமான்ட் இருப்பதாக வால்வோ தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு உற்பத்தி செய்யப்பட இருக்கும் அனைத்து ரீசார்ஜ் எலெக்ட்ரிக் கார்களும் விற்று தீர்ந்து விட்டதாகவும் வால்வோ கார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பெல்ஜியம் நாட்டின் கென்ட் நகரில் உள்ள வால்வோ கார் ஆலையில்தான் இந்த புதிய ரீசார்ஜ் எலெக்ட்ரிக் எஸ்யூவி உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. குறைபாடுகள் இல்லாமல் கார்களை உருவாக்குவதற்கான மிக மேம்பட்ட முறை பின்பற்றப்படும் என்றும் வால்வோ தெரிவித்துள்ளது. 55,000 டாலர் விலையில் புதிய எக்ஸ்சி40 ரீசார்ஜ் எஸ்யூவி விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது.

வால்வோ கார்கள் பாதுகாப்புக்கு பெயர் பெற்றவை. அந்த வகையில், ரீசார்ஜ் எஸ்யூவியின் பாதுகாப்பை அதிகபட்ச உறுதி செய்யும் விதத்தில், முன்புற கட்டமைப்பு மிகச் சிறப்பாக மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. மேலும், சாதாரண கார்களை போல எஞ்சின் பொருத்துவதற்கான இடம் மிச்சப்படுத்தப்படுவதால், பொருட்கள் வைப்பதற்கு அதிக இடவசதியை வழங்கும்.

எதிர்காலத்தில் முழுமையான எலெக்ட்ரிக் கார்கள் மற்றும் ஹைப்ரிட் கார் மாடல்களும் ரீசார்ஜ் குடும்ப வரிசையில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகவும் வால்வோ தெரிவித்துள்ளது. வரும் 2025ம் ஆண்டில் தனது விற்பனையில் 50 சதவீத பங்களிப்பை பேட்டரியில் இயங்கும் மாடல்கள் மூலமாக பெறுவதற்கான திட்ட இலக்குடன் வால்வோ செயலாற்றி வருகிறது.


Click it and Unblock the Notifications








