எச்டிஎஃப்சி வங்கியுடன் கூட்டணி அமைத்த வால்வோ... எளிய கார் கடன் திட்டங்கள் அறிமுகம்
எச்டிஎஃப்சி வங்கியுடன் இணைந்து எளிய கார் கடன் திட்டங்களை வழங்க உள்ளதாக வால்வோ கார் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த கார் கடன் திட்டங்கள் குறித்த விரிவானத் தகவல்களை தொடர்ந்து படிக்கலாம்.

இந்திய சொகுசு கார் மார்க்கெட்டில் முதல் மூன்று இடங்களுக்குள் வருவதற்கான முயற்சிகளில் வால்வோ தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில், தனது வாடிக்கையாளர்கள் எளிதாக கடன் பெறுவதற்கான வாய்ப்பை வழங்குவதற்கான முயற்சியில் இறங்கி இருக்கிறது.

இதற்காக எச்டிஎஃப்சி வங்கி கூட்டணி அமைத்து வால்வோ ஃபைனான்சியல் சர்வீசஸ் என்ற பிரிவு மூலமாக தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு கடன் திட்டங்களை வழங்க உள்ளது.

புதிய வால்வோ கார் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த சிறப்பு கடன் பிரிவு மூலமாக மிக எளிதாகவும், விரைவாகவும் கடன் பெறுவதற்கான நடைமுறைகள் மேற்கொள்ளப்படும்.

வால்வோ கார் வாங்கும் வாடிக்கையாளர்கள் அதிகபட்சமாக எக்ஸ்ஷோரூம் விலையில் 100 சதவீதம் வரை கடன் பெற முடியும் என்பதுடன் 7 ஆண்டுகள் வரை மாதத் தவணை முறையில் திருப்பிச் செலுத்துவதற்கான கால அவகாசம் வழங்கப்படும்.

அத்துடன், கடன் காலம் முடிவடைவதற்கு முன்னதாகவே கடன் தொகையை செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது. அதேபோன்று, பிராசஸிங் கட்டணமும் ஒரே மாதிரியாக பின்பற்றப்படும். மேலும், கார்களுக்கான காப்பீட்டுத் தொகைக்கும் சிறப்பு கடனை வாடிக்கையாளர்கள் பெற முடியும்.

இதுதவிர்த்து, ஸ்டெப் அப், புல்லட், பலூன் முறையிலான கடன் திட்டங்களும் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. கொரோனாவால் தற்காலிக பொருளாதார பிரச்னையை எதிர்கொண்டிருக்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த சிறப்பு கடன் திட்டங்கள் சிறப்பானதாக அமையும்.

வால்வோ எக்ஸ்சி40, எக்ஸ்சி60, எக்ஸ்சி90 எஸ்யூவி ரக கார்கள், எஸ்90 செடான் கார் மற்றும் வி90 க்ராஸ் கன்ட்ரி ஆகிய மாடல்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்றன. எக்ஸ்சி90 எஸ்யூவியின் ப்ளக் இன் ஹைப்ரிட் மாடலும் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications








