சூப்பர் நியூஸ்... அனைத்து கார்களையும் இந்தியாவிலேயே அசெம்பிள் செய்ய வால்வோ திட்டம்!
அனைத்து கார் மாடல்களையும் இந்தியாவிலேயே அசெம்பிள் செய்து விற்பனை செய்வதற்கு வால்வோ நிறுவனம் முடிவு எடுத்துள்ளது. இது இந்தியர்களுக்கு சூப்பர் நியூஸாக அமையும் என்பதற்கான காரணங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய சொகுசு கார் சந்தை ஜெர்மனியை சேர்ந்த மெர்சிடிஸ் பென்ஸ், ஆடி, பிஎம்டபிள்யூ ஆகிய மும்மூர்த்திகளின் ஆதிக்கத்தில் உள்ளது. இந்தநிலையில், சொகுசு கார் மார்க்கெட்டில் மும்மூர்த்திகளை விஞ்சி முக்கிய இடத்தை பிடிப்பதற்கான முயற்சிகளில் வால்வோ கார் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

அதேநேரத்தில், மெர்சிடிஸ் பென்ஸ், ஆடி, பிஎம்டபிள்யூ ஆகிய கார் நிறுவனங்கள் பெரும்பாலான கார்களை இந்தியாவிலேயே அசெம்பிள் செய்து விற்பனை செய்து வருகின்றன. இதனால், விலையை மிக சவாலாக நிர்ணயிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளன.

வால்வோ கார் நிறுவனம் எக்ஸ்சி60, எக்ஸ்சி90 மற்றும் எஸ்90 செடான் கார்களை பெங்களூர் அருகே உள்ள தனது ஆலையில் அசெம்பிள் செய்து விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில், விற்பனையில் முக்கிய பங்கு வகிக்கும் எக்ஸ்சி40, வி90 க்ராஸ் கன்ட்ரி மற்றும் எக்ஸ்சி90 எக்ஸ்சலென்ஸ் ப்ளக் இன் ஹைப்ரிட் மாடல்களையும் இந்தியாவில் அசெம்பிள் செய்ய வால்வோ திட்டமிட்டுள்ளது.

இந்த கார்களை இறக்குமதி செய்து விற்பனை செய்வதால், மிக கணிசமான வரியை செலுத்த நேரிடுவதால், போட்டியாளர்களை விட விலை மிக அதிகமாக இருக்கிறது. வால்வோ கார்களை வாடிக்கையாளர்கள் வாங்க விரும்பினாலும், போட்டியாளர்களைவிட அதிக விலை இருப்பதால், தயங்குகின்றனர்.

இதனை மனதில் வைத்து தனது அனைத்து கார் மாடல்களையும் இந்தியாவிலேயே அசெம்பிள் செய்து விற்பனை செய்வதற்கு வால்வோ திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து வால்வோ இந்தியா நிர்வாக இயக்குனர் சார்லஸ் ஃப்ரம்ப் கூறுகையில்,"மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் அனைத்து கார்களையும் இந்தியாவிலேயே அசெம்பிள் செய்ய திட்டமிட்டுள்ளோம்.

இதன்மூலமாக, சொகுசு கார் மார்க்கெட்டில் மிக வலுவான போட்டியாளராக மாற முடியும் என்று நம்புகிறோம். கொரோனா காரணமாக, கடந்த ஆண்டை காட்டிலும் நடப்பு ஆண்டு விற்பனையில் சரிவு இருக்கும். எனினும், உள்நாட்டிலேயே அசெம்பிள் செய்யும்போது நிச்சயம் முக்கிய இடத்தை பிடிக்க வாய்ப்பு ஏற்படும்," என்று குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த ஆண்டு முதல் அனைத்து கார்களும் இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யப்படும் என்று வால்வோ கூறி இருக்கிறது. இதன்மூலமாக, வால்வோ சொகுசு கார்களின் விலை மிக கணிசமாக, அதாவது லட்சங்களில் குறைவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

இது நிச்சயம் வால்வோ கார் வாங்க விரும்புவோருக்கு அதிக மதிப்பை வழங்கும். மேலும், சொகுசு கார் மார்க்கெட்டில் சிறந்த தேர்வுகளை வாடிக்கையாளர்கள் பெறுவதற்கும் வழி வகுக்கும். குறிப்பாக வால்வோ எக்ஸ்சி40 காருக்கு இந்தியாவில் பெரிய வரவேற்பு இருக்கிறது.

இந்த காரின் விலையை குறைப்பதன் மூலமாக, இதன் விற்பனை வெகுவாக அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. அண்மையில் இந்த காருக்கு ரூ.3 லட்சம் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டது. இதனால், ரூ.36.90 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது. இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யும்போது நிச்சயம் இந்த ஆரம்ப ரக சொகுசு எஸ்யூவியின் விலை போட்டியாளர்களுக்கு சவால் தரும் வகையில் அமையும் வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications








