இந்தியாவில் ரீகால் செய்யப்படும் வால்வோ கார்கள்... காரணம் என்ன?
தானியங்கி பிரேக் சிஸ்டத்தில் இருக்கும் தொழில்நுட்பப் பிரச்னையை சோதிப்பதற்காக, வால்வோ சொகுசு கார்கள் உலக அளவில் திரும்ப அழைக்கப்பட உள்ளன. இந்தியாவிலும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கார்கள் இந்த திரும்ப அழைக்கும் நடவடிக்கையில் இடம்பெற்றுள்ளன.

வால்வோ வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், குறிப்பிட்ட கால இடைவெளியில் உற்பத்தி செய்யப்பட்ட தனது சொகுசு கார்களில் தானியங்கி பிரேக் சிஸ்டத்தை கட்டுப்படுத்தும் சாதனத்தின் சாஃப்ட்வேரில் தொழில்நுட்ப பிரச்னை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட வெப்ப நிலையில், இந்த தானியங்கி பிரேக் சிஸ்டத்தை கட்டுப்படுத்தும் அந்த சாதனம் சரிவர செயல்படாமல், கட்டுப்படுத்தும் சாஃப்ட்வேர் இயங்காமல் போவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன.

வால்வோ நிறுவனத்தின் எக்ஸ்சி40, எக்ஸ்சி60, எக்ஸ்சி90, எஸ்60, எஸ்90 மற்றும் வி வரிசை கார்களில் இந்த பிரச்னை இருப்பதாக தெரிய வந்துள்ளது.

கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் முதல் இந்த மாதம் வரை தயாரிக்கப்பட்டு உலகின் பல்வேறு நாடுகளில் விற்பனை செய்யப்பட்ட 7.5 லட்சம் கார்களில் இந்த பிரச்னை இருப்பதாக கருதப்படுகிறது.

இதனால், சம்பந்தப்பட்ட கார்கள் விபத்தில் சிக்கும் அபாயம் இருக்கிறது. எனவே, அனைத்து கார்களிலும் தானியங்கி பிரேக் சிஸ்டத்தை கட்டுப்படுத்தும் சாஃப்ட்வேரை சோதித்து சரிசெய்வதற்கு திட்டமிட்டுள்ளோம்," என்று வால்வோ தெரிவித்துள்ளது.

இந்தியாவிலும் 1,891 வால்வோ கார்கள் திரும்ப அழைக்கப்பட்டு பிரச்னை குறித்து பரிசோதிக்கப்பட உள்ளது. இதுதொடர்பாக, சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு டீலர்கள் ஏற்கனவே தகவல் அனுப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எனினும், கொரோனா வைரஸ் பிரச்னை காரணமாக, வாடிக்கையாளர் வருகையில் தாமதம் ஏற்படும் என்று கருதப்படுகிறது. கூடிய விரைவில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட கார்களில் சாஃப்ட்வேர் அப்டேட் கொடுக்கப்பட்டு பிரச்னை சரிசெய்யப்படும் என்று வால்வோ டீலர் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலக அளவில் அதிக பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட கார் மாடல்கள் என்ற பெருமையை வால்வோ கார்கள் தக்க வைத்து வருகின்றன. இந்த நிலையில், அதன் பாதுகாப்பு அம்சத்தில் குறைபாடு இருப்பது தெரிய வந்துள்ளது வாடிக்கையாளர் மத்தியில் ஏமாற்றத்தை தந்துள்ளது. இருப்பினும், தாமாக முன்வந்து இப்பிரச்னையை சரிசெய்து தருவதாக வால்வோ அறிவித்திருப்பது ஆறுதலான விஷயமாக கருதலாம்.


Click it and Unblock the Notifications








