சூப்பரான எக்ஸ்சி40 எலெக்ட்ரிக் எஸ்யூவியை இந்தியாவில் களமிறக்க திட்டம்... பரபரக்கும் வால்வோ!
இந்தியாவில் முதல் எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு களமிறக்குவதற்கான வாய்ப்புகள் குறித்து வால்வோ நிறுவனம் பரிசீலித்து வருகிறது.

இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களுக்கான வரவேற்பு மெல்ல அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட ஹூண்டாய் கோனா மற்றும் இந்த ஆண்டு துவக்கத்தில் வந்த எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் மற்றும் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி மாடல்களுக்கு அமோக வரவேற்பு கிடைத்தது.

இதனையடுத்து, எலெக்ட்ரிக் கார் சந்தையில் களமிறங்குவதற்கான வாய்ப்புகள் குறித்து அனைத்து கார் நிறுவனங்களும் பரிசீலித்து வருகின்றன. அந்த வகையில், சொகுசு கார் தயாரிப்பில் உலகின் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றாக விளங்கும் வால்வோ கார் நிறுவனமும் இந்தியாவில் எலெக்ட்ரிக் கார் மாடல்களை கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் குறித்து பரிசீலித்து வருகிறது.
MOST READ : பருவமழை காலம் வருதுங்க... உங்க வண்டி பத்திரம்!

கடந்த 2018ம் ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட வால்வோ எக்ஸ்சி40 எஸ்யூவி பெரும் வரவேற்பை பெற்றது. அட்டகாசமான டிசைன், சிறப்பம்சங்கள், கவர்ச்சிகரமான விலை ஆகியவை இந்த எஸ்யூவிக்கு சிறப்பான தொடக்கத்தை இந்தியாவில் வழங்கியது.

இந்த நிலையில், எக்ஸ்சி40 எஸ்யூவியின் மின்சார வெர்ஷனையும் வால்வோ உருவாக்கி இருக்கிறது. இந்த மின்சார மாடலையும் இந்தியாவில் கொண்டு வருவதற்கான திட்டத்தை வால்வோ பரிசீலித்து வருவதாக கார் அண்ட் பைக் தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் என்ற பெயரில் குறிப்பிடப்படும் இந்த மின்சார எஸ்யூவியில் 150kW மின் மோட்டார்கள் இரண்டு ஆக்சில்களிலும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த மின் மோடடார்கள் அதிகபட்சமாக 402 பிஎச்பி பவரையும், 659 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

இந்த மின்சார கார் 0 - 100 கிமீ வேகத்தை 4.9 வினாடிகளில் எட்டிவிடும். அதாவது, பெட்ரோல், டீசல் எஸ்யூவிகளைவிட மிகச் சிறப்பான செயல்திறனை இந்த மின்சார எஸ்யூவி வழங்கும் என்பதால், வாடிக்கையாளர் மத்தியிலும் ஆவல் எழுந்துள்ளது.

இந்த எஸ்யூவியில் 78kWh பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக 400 கிமீ தூரம் வரை செல்வதற்கான வாய்ப்பை வழங்கும். இதன் பேட்டரியை ஃபாஸ்ட் சார்ஜர் பயன்படுத்தினால், வெறும் 40 நிமிடங்களில் 10 சதவீதத்திலிருந்து 80 சதவீதம் அளவுக்கு சார்ஜ் ஏற்றிக் கொண்டுவிடலாம்.

மெர்சிடிஸ் பென்ஸ், ஜாகுவார் லேண்ட்ரோவர், ஆடி என அனைத்து சொகுசு கார் தயாரிப்பு நிறுவனங்களும் இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்தும் திட்டத்தில் உள்ளன. அதில், வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் எலெக்ட்ரிக் எஸ்யூவிக்கு குறிப்பிடத்தக்க வரவேற்பு இருக்கும் என்று நம்பலாம்.


Click it and Unblock the Notifications








