கடவுள்போல உயிரை காத்த கார்! நெகிழ வைக்கும் வெளிநாட்டு பெண்ணின் பதிவு! இது உங்களை உருக வைக்கலாம்..!
வெளிநாட்டு இளம்பெண் ஒருவர் தன் கணவரை பெரும் விபத்தில் இருந்து காப்பாற்றிய காருக்கு புகழ் சேர்க்கும் விதமாக இணையத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

வாகனம் சார்ந்து அரங்கேறும் விபத்து சம்பவங்கள் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டி வருகின்றன. இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் அனைத்திலும் இதே நிலைதான் நீடித்து வருகின்றது. எனவேதான் வாகன உற்பத்தி நிறுவனங்கள் தங்களின் தயாரிப்புகளை அதிக பாதுகாப்பு தரத்திற்கு உயர்த்தும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றன.

நிறுவனங்களின் இந்த முயற்சியால் சந்தையில் தற்போது பாதுகாப்பான வாகனங்களின் எண்ணிக்கை சற்றே அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அந்தவகையில், அதிக பாதுகாப்பு வசதிகளைக் கொண்ட ஓர் காரே இளம் பெண் ஒருவரின் கணவனை மிக மோசமான விபத்தில் இருந்து காப்பாற்றியிருக்கின்றது. இதற்காக அப்பெண், காரை தயாரித்த நிறுவனத்திற்கு பெருத்த நன்றியை சமூக வலை தளத்தின் வாயிலாக தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் நெட்டிசன்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பாம் பேக்கர் எனும் அந்த பெண் டுவிட்டர் வாயிலாக வெளியிட்டதாவது, "எலன் மஸ்க் நீங்கள் தயாரித்த காரொன்று எனது கணவரை நேற்றைய தினம் அரங்கேறிய பெரும் விபத்தில் இருந்து காப்பாற்றியது. இதற்காக நானும் எனது 4 பிள்ளைகளும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம்" என கூறியிருக்கின்றார்.

பாம் பேக்கரின் இந்த பதிவு சமூக வலைதளத்தில் மிக வேகமாக வைரலாகத் தொடங்கியுள்ளது. இந்த தகவலுடன், தனது கணவர் சென்ற காரின் புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்லார். அதில், டெஸ்லா மாடல் 3 கார் உருவே தெரியாத அளவிற்கு அப்பளம் போல் நொறுங்கியிருப்பதை நம்மால் காண முடிகின்றது. மேலும், இப்படிப்பட்ட விபத்தில் இருந்தா., அந்த நபர் தப்பினார் என்ற கேள்வியையும் நம் மத்தியில் எழுப்புகின்றது.

டெஸ்லா மாடல் 3 ஓர் மின்சார காராகும். இக்காரில் அதிக பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக, தானியங்கி பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் தன்னிச்சையாக ஓடும் திறனை இந்த கார் கொண்டிருக்கின்றது. இதுமட்டுமின்றி, ஏர் பேக் போன்ற கூடுதல் பாதுகாப்பு அம்சங்களும் இக்காரில் இடம்பெற்றிருக்கின்றன. இந்த அம்சங்களே பாம் பேக்கரின் கணவரை சிறு சிறு கீரல்களுடன் காப்பாற்ற உதவியாக இருந்திருக்கின்றன.

டெஸ்லா மாடல் 3 கார் பாதுகாப்பு வழங்குவதில் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்ற வாகனம் ஆகும். யூரோ என்சிஏபி அமைப்பு நிகழ்த்திய கிராஷ் டெஸ்ட் பரிசோதனையிலேயே இந்த தரத்தை அக்கார் பெற்றது. இதுமட்டுமின்றி, என்எச்டிஎஸ்ஏ எனும் அமைப்பு மேற்கொண்ட மோதல் பரிசோதனையிலும் இக்கார் 5 நட்சத்திரத்தைப் பெற்று அசத்தியது. எனவேதான் உலகின் பாதுகாப்பான கார்களில் டெஸ்லாவின் மாடல் 3 மின்சார காரும் ஒன்றாக இருக்கின்றது.

இருப்பினும் ஒரு சிலர் பாம் பேக்கர் வெளியிட்டுள்ள பதிவின்கீழ் எதிர்மாறான கருத்தைத் தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர். பலர் இந்த விபத்தில் இருந்து உங்கள் கணவன் தப்பித்ததற்கு கடவுளே காரணம், அவருக்கு முதலில் நன்றி தெரியுங்கள் என்ற கருத்தைத் கூறியிருக்கின்றனர். ஒரு சிலர் கூடுதலாக ஒரு படி மேலேச் சென்று இந்த விபத்தில் இருந்து அந்நபர் பிழைத்ததற்கு ஏபிஎஸ் பிரேக்கிங் வசதியே காரணம் எனகூறி காரசார விவாதத்தை முன்னெடுக்க தொடங்கியிருக்கின்றனர்.

இவ்வாறு கூறப்படும் கருத்துகளை ஒரு புறம் வைத்துவிட்டு அறிவியல் பூர்வமாக ஆராய்ந்தால், காரில் பாதுகாப்பிற்காக வழங்கப்பட்ட வசதிகளே அந்த நபர் சிறிய கீரல்களுடன் தப்பிக்க காரணமாக இருக்கின்றன. ஆம், காரில் ஏர் பேக் மற்றும் தானியங்கி பிரேக் வசதி இல்லாமல் இருந்திருந்தால் பாம் பேக்கரின் கணவருடைய நில மிக மோசமானதாக மாறியிருக்கும். ஆனால், இந்த நிலையை காரின் தானியங்கி வசதி முற்றிலுமாக மாற்றியிருக்கின்றது.

பாதுகாப்பு விவகாரத்தில் மட்டுமின்றி ரேஞ்ஜ் மற்றும் தொழில்நுட்ப விஷயத்திலும் டெஸ்லா மாடல் 3 மின்சார கார் நம்மை வியப்பில் ஆழ்த்தும் வகையில் இருக்கின்றது. இக்காரை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 530 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

மேலும், அதிகம் டிராஃபிக் இல்லாத வழி தடத்தில் பயணித்தோமேயானால் மேலே கூறிய அளவீட்டைக்க்காட்டிலும் கூடுதல் ரேஞ்ஜை நம்மால் பெற முடியும். இக்கார் சார்ஜ் செய்ய அதிக நேரம் தேவைப்படாது. ஏனெனில், இதில் சூப்பர் சார்ஜிங் திறன் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சார்ஜ் செய்கையில் வெறும் 30 நிமிடங்களில் 270 கிமீ தூரம் வரை பயணிப்பதற்கான சார்ஜை பெற்று விட முடியும். இதற்கு அதி சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் நிலையத்தின் பங்கு மிக முக்கியம்.

இதுபோன்ற பல்வேறு தொழில்நுட்பங்களையே இக்கார் பெற்றிருக்கின்றது. இதுமாதிரியான தொழில்நுட்பங்களே இக்கார் இந்தியாவில் அறிமுகமாவதற்கு தடையாக அமைந்துள்ளது. எனவேதான் இக்காரின் அறிமுகம் தள்ளிப்போய் கொண்டே இருக்கின்றது. அதேசமயம் விரைவில் இக்கார் விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வரவிருப்பதாக தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன.


Click it and Unblock the Notifications