போர்ஷே நிறுவனத்திற்கு பெருமை தேடி தந்த டைகான்... எவ்வாறு தெரியுமா...?
'2020 வோர்ல்டு பெர்ஃபார்மன்ஸ் கார் ஆஃப் தி இயர்' விருதை போர்ஷே நிறுவனத்தின் டைகான் மாடல் வென்றுள்ளது. இதுகுறித்த முழுமையான தகவல்களை இந்த செய்தியில் காண்போம்.

இந்த விருதை பெறுவதில் போர்ஷே டைகான் காருக்கு கடுமையான போட்டியினை இந்நிறுவனத்தின் 718 மற்றும் 911 மாடல்கள் தான் அளித்தன. டைகான் காரின் மூலமாக போர்ஷே நிறுவனம் இந்த விருதை ஆறாவது முறையாக பெறுகிறது.

பெர்ஃபார்மன்ஸ் கார் ஆஃப் தி இயர் விருதிற்கு டொயோட்டா ஜிஆர் சுப்ரா, பிஎம்டபிள்யூ எம்8, போர்ஷே 718 கேமன் ஜிடி4, போர்ஷே டைகான் மற்றும் போர்ஷே 911 உள்பட மொத்தம் 13 கார்கள் நாமினேஷன் செய்யப்பட்டன. இதில் அனைத்தையும் பின்னுக்கு தள்ளி போர்ஷே டைகான் மாடல் இந்த விருதை வென்றுள்ளது.

இந்த விருதை பெறுவதற்கு போட்டியிடும் அனைத்து மாடல்களும் செயல்படுதிறனில் சிறப்பானதாகவும், வருடத்திற்கு குறைந்தது 2000 யூனிட்கள் தயாரிக்கப்படுவையாகவும், குறைந்தப்பட்சம் இரண்டு கண்டங்களிலாவது விற்பனை செய்யப்படுவையாகவும் இருக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது.

இந்த விருதை டைகான் மாடல் பெற்றது குறித்து போர்ஷே நிறுவனத்தின் நிர்வாக பிரிவு இயக்குனர் ஆலிவர் ப்ளூம் கருத்து தெரிவிக்கையில், ஓட்டுனரின் முகத்தில் மகிழ்ச்சியை காண்பதற்காக முழுக்க எலக்ட்ரிக் காரான டைகானை, நேர்மையான போர்ஷே வாகனமாகவும், மற்ற தயாரிப்பு மாடல்களை காட்டிலும் விதிவிலக்கான செயல்திறனிலும் உருவாக்கியுள்ளோம்.

இப்படிப்பட்ட கார் தற்போது வோர்ல்டு கார் விருதை வென்றிருப்பது உண்மையில் மிகுந்த பெருமையை அளிக்கிறது என கூறினார். இந்த விருதிற்கான வெற்றியாளரை தேர்ந்தெடுக்கும் நடுவர் பணியில் 24 நாடுகளை சேர்ந்த 86 நடுவர்கள் ஈடுப்பட்டனர்.

நீண்ட திரையிடல் செயல்முறை மற்றும் அமெரிக்கா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடத்தப்பட்ட டெஸ்ட் ட்ரைவ் ஆகியவற்றின் முடிவில் டாப்-3 இறுதி மாடல்களின் பெயர்கள் கடந்த மார்ச் 3ஆம் தேதி அறிவிக்கப்பட்டன. போர்ஷே இதற்கு முன்னபாக இந்த விருதை கடந்த 2006, 2012, 2013, 2014 மற்றும் 2017ஆம் ஆண்டுகளிலும் வென்றிருந்தது.

டைகான் மாடலை பற்றி கூற வேண்டுமென்றால், ஜெர்மன் நாட்டை சேர்ந்த போர்ஷே நிறுவனத்தின் முதல் முழு-எலக்ட்ரிக் காராகும். உயர் மின்னழுத்த லித்தியம்-இரும்பு பேட்டரிகள் பொருத்தப்பட்ட இந்த எலக்ட்ரிக் காருக்கு 800 வோல்ட் சார்ஜர் வழங்கப்படுகிறது. இந்த உயர் மின்னழுத்த பேட்டரிகள் பொருத்தப்பட்ட இதன் இரு எலக்ட்ரிக் மோட்டார்கள் மூலமாக 600 பிஎச்பி ஆற்றலை அதிகப்பட்சமாக பெற முடியும்.

இந்த எலக்ட்ரிக் மோட்டார்கள் காரை சிங்கிள் சார்ஜில் சுமார் 500கிமீ தூரம் வரையில் இயக்கி செல்கின்றன. இவற்றுடன் போர்ஷே டைகான் மாடலுக்கு விரைவான சார்ஜிங் தொழிற்நுட்ப வசதியும் கொடுக்கப்படுகிறது. இந்த சார்ஜரின் மூலமாக 400 கிமீ தூர இயக்கத்திற்கான சார்ஜ்ஜை வெறும் 15 நிமிடங்களில் பெற முடியும்.

எலக்ட்ரிக் மோட்டார்கள் மூலமாக எதிர்பார்த்ததை விட அதிக செயல்திறனை பெற்றுள்ள போர்ஷே டைகான் மாடலிற்கு சர்வதேச மார்க்கெட்டில் டெஸ்லா நிறுவனத்தின் கார்கள் தான் முக்கிய போட்டி மாடல்களாக விளங்குகின்றன. டைகானை தொடர்ந்து முழுவதும் எலக்ட்ரிக் தரத்திலான செடான் ரக காரையும் அறிமுகப்படுத்த போர்ஷே நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த புதிய போர்ஷே செடான் கார் இந்திய சந்தையில் 2020ஆம் ஆண்டின் இறுதியிலோ அல்லது 2021ஆம் ஆண்டு துவக்கத்திலோ அறிமுகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








