நிதி இழப்பை சமாளிக்க புதிய திட்டங்கள்... உபி முதலமைச்சர் அதிரடி அறிவிப்பால் அரசு ஊழியர்கள் கலக்கம்!
கொரோனா வைரசால் ஏற்பட்டிருக்கும் இக்கட்டான சூழ்நிலையை பாதுகாப்பாக கையாளும் விதமாக உபி-யில் பல அதிரடி திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

நாடு முழுவதும் தற்போது பூட்டப்பட்ட நிலையே காட்சியளிக்கின்றது. இதற்கு ஒற்றை உயிர் கொல்லி வைரஸ் கொரோனா மட்டுமே காரணம். இந்த வைரஸ் பரவல் அச்சம் காரணமாக நாட்டின் அனைத்து துறைகளும் இயங்க முடியமால், முடங்கிக் கிடக்கின்றன. இதனால், வர்த்தகம் மிகக் கடுமையாக குறைந்து, அதளபாதாளத்தில் வீழ்ந்திருக்கின்றது.

இதன் விளைவாக, மத்திய மற்றும் மாநில அரசுகள் நிதி பற்றாக்குறையை சந்திக்க நேரிட்டுள்ளது. அதிலும், மாநிலங்களின் நிலை சற்றே கூடுதல் மோசமானதாக இருக்கின்றது. தமிழகம் போன்ற ஒரு சில மாநிலங்களுக்கு, மத்திய அரசு, இதுவரை அவற்றின் ஜிஎஸ்டி வரி இழப்பீட்டை வழங்காமல் இருக்கின்றது.

டிசம்பர் முதல் மார்ச் மாதம் வரையிலான ஜிஎஸ்டி இழப்பீடு மாநிலங்களுக்கு வழங்கப்படாமல் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தகுந்தது. ஏற்கனவே கொரோனா கோர ஆட்டத்தால் மாநில அரசுகள் நிதி பற்றாக்குறையால் சிக்கித் தவித்து வருகின்றன. இந்த நிலையில், நிலுவைத் தொகையும் இழுத்தடிப்புச் செய்யப்படுவதால் கூடுதல் சுமையைச் சந்திக்கும் நிலைக்கு மாநில அரசுகள் ஆளாக்கப்பட்டுள்ளன.

இதனால், முன்பெப்போதும் இல்லாத அளவிலான கஷ்ட காலத்தை அவைச் சந்தித்து வருகின்றன. இம்மாதிரியான சூழ்நிலையைக் கவனத்துடன் கையாளும் விதமாக பல அதிரடி அறிவிப்புகளை உத்தரபிரேதச மாநில அரசு வெளியிட்டுள்ளது.
முக்கியமாக அரசு ஊழியர்களுக்கான புதிய வாகனங்கள் வாங்கும் திட்டம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இத்துடன், தேவையற்ற பயணச் செலவுகளையும் குறைத்துக் கொள்ளுமாறு பணியாளர்களுக்கு உபி அரசு அறிவுறுத்தியுள்ளது.

தற்போது இருக்கும் நிதி சுமையில் கூடுதல் சுமையை ஏற்படுத்திக் கொள்ளாமல் இருப்பதற்காக செலவுகளைக் குறைக்கும் யுக்தியை உபி அரசு கையிலெடுத்துள்ளது. இதற்கான ஆணையை கடந்த திங்களன்று, 2020-2021ஆம் நிதியாண்டுகளுக்கான நிதி கூடுதல் தலைமைச் செயலாளர் சஞ்சீவ் மிட்டல் வெளியிட்டிருந்தார்.

அதில், அரசு ஊழியர்களின் பயன்பாட்டிற்காக புதிய வாகனங்களை வாங்க வேண்டாம் என்று அழுத்தம், திருத்தமாக கூறப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, நேரடி குழு ஆலோசனைகளுக்கு பதிலாக வீடியோ மீட்டிங்குகளை நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன்மூலம், ஆலோசனைக்காக தனியார் உணவு விடுதி வாடகை எடுப்பது மற்றும் பயணச் செலவுகள் உள்ளிட்டவை தவிர்க்கப்படும். எனவே, பெரிய அளவில் தொகை அரசுக்கு மிச்சமாகும்.
தொடர்ந்து, தவிர்க்க முடியாத சூழலில் கலந்தாய்வு கூட்டத்தை அரசுக்கு சொந்தமான இடங்களில் மட்டுமே நடத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றது.

ஆனால், கட்டாயம் ஆடம்பர உணவகங்களில் கலந்தாய்வு போன்ற நிகழ்ச்சிகளை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், புதிய வாகனம் வாங்க தற்போது தடை விதிக்கப்பட்டிருப்பதால், இந்த நேரத்தில் பழைய வாகனம் பழுதாகி பயனற்றதாகிவிட்டால், கட்டாயம் அவர்களாகவே அதனை அவுட்சோர்ஸ் செய்து மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

தொடர்ந்து, மற்ற இடங்களில் பயனற்று நிற்கும் வாகனங்களையும் கண்டறிந்து அவற்றை ஸ்கிராப் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, அரசு உயர் பணியில் இருப்பவர்களின் விமான போக்குவரத்திலும் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

அதாவது, முன்பைப் போன்று பிசினஸ் மற்றும் எக்ஸிக்யூடிவ் வகுப்பில் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, அரசு பணியாளர்கள் எந்த பொருப்பில் இருந்தாலும் அவர்கள் பொருளாதார வகுப்பில் மட்டுமே பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு பயணம் மற்றும் வாகனம் சார்ந்த முடிவுகளுடன் புதிய நபர்களைப் பணியமர்த்தும் செயலுக்கும் உபி அரசு தற்காலிக தடையை அறிவித்துள்ளது.

இதற்கு பதிலாக கான்ட்ராக்ட் மற்றும் உபரி ஊழியர்கள் பணியமர்த்தப்படுவர் என கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து, அத்தியாவசிய கட்டுமானங்களைத் தவிர வேறெந்த கட்டுமானப் பணியையும் இப்போதைக்கு நடத்தப்படக்கூடாது என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதி பற்றாக்குறையை கருத்தில் கொண்டு இந்த அதிரடி நடவடிக்கைகளை உபி அரசு மேற்கொண்டுள்ளது.

சிக்கன மற்றும் நிதி மேலாண்மைக்காக கொண்டுவரப்பட்டுள்ள இந்த புதிய உத்தரவு குறித்த அறிவிப்பாணை, அனைத்து கூடுதல் தலைமை செயலாளர்கள், முதன்மை செயலாளர்கள், செயலாளர்கள் மற்றும் துறைத் தலைவர்களுக்கு உபி அரசு அனுப்பி வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications








