சூப்பர்... இந்தியன் ஆயில் நிறுவனம் செய்யப்போகும் நல்ல காரியம்... என்னனு தெரிஞ்சா சந்தோஷப்படுவீங்க!
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவின் முன்னணி பெட்ரோலிய நிறுவனங்களில் ஒன்று இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (Indian Oil Corporation - IOC). வழக்கமான பெட்ரோல், டீசல் மட்டுமல்லாது, சுற்றுச்சூழலுக்கு மாசுபாட்டை ஏற்படுத்தாத சிஎன்ஜி போன்ற எரிபொருட்களையும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் விற்பனை செய்து வருகிறது.

ஆனால் உலகம் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறி கொண்டுள்ளது. இதற்கேற்ப இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனமும் புதிய முயற்சிகளை முன்னெடுக்கவுள்ளது. இதன்படி இந்தியா முழுவதும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்களை ஏற்படுத்துவதற்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இந்தியாவின் எலெக்ட்ரிக் வாகன உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு உதவும் வகையில், நாடு முழுவதும் வரும் 2024ம் ஆண்டிற்குள், 10 ஆயிரம் சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைக்கவுள்ளதாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் தற்போது அதிரடியாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைவர் ஸ்ரீகாந்த் மாதவ் வைத்யா கூறுகையில், ''முதற்கட்டமாக அடுத்த 12 மாதங்களில் 2 ஆயிரம் சார்ஜிங் ஸ்டேஷன்கள் அமைக்கப்படும். அதற்கு அடுத்த 2 ஆண்டுகளில் 8 ஆயிரம் சார்ஜிங் ஸ்டேஷன்கள் அமைக்கப்படவுள்ளது. இதன் மூலம் அடுத்த மூன்று ஆண்டுகளில் 10 ஆயிரம் சார்ஜிங் ஸ்டேஷன்கள் அமைப்பது என்ற இலக்கு எட்டப்படும்'' என்றார்.

முன்னதாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைவர் ஸ்ரீகாந்த் மாதவ் வைத்யா அளித்திருந்த ஒரு பேட்டியில், ''வெறும் பெட்ரோலிய பொருட்களை மட்டும் விற்பனை செய்யும் நிறுவனமாக இருக்க நாங்கள் விரும்பவில்லை. மாறாக இந்தியாவின் எனர்ஜி நிறுவனமாக உருவெடுக்க விரும்புகிறோம். தற்போது உலகம் மாறி வருகிறது.

வழக்கமான எரிபொருட்களை விற்பனை செய்வதுடன், எங்களது பெட்ரோல் பங்க்குகளில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்கள் மற்றும் பேட்டரி ஸ்வாப்பிங் ஸ்டேஷன்களையும் அமைக்க விரும்புகிறோம்'' என கூறியிருந்தார். இந்தியாவில் தற்போது பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே வருவதால், எலெக்ட்ரிக் வாகனங்களின் மீது மக்களின் கவனம் திரும்பியுள்ளது.

ஆனால் இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்கள் மிகவும் குறைவான எண்ணிக்கையில்தான் இருக்கின்றன. இப்படிப்பட்ட சூழலில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் அமைக்கவுள்ள சார்ஜிங் ஸ்டேஷன்கள் மூலமாக எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்கள் பயனடைவார்கள்.

அதிக சார்ஜிங் ஸ்டேஷன்கள் அமைக்கப்படுவதால், எலெக்ட்ரிக் வாகனங்களை பொதுமக்கள் தைரியமாக வாங்க முன்வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் தற்போது சார்ஜிங் ஸ்டேஷன்கள் பெரிய அளவில் இல்லாத காரணத்தால் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதற்கு பொதுமக்கள் பலர் தயக்கம் காட்டி வருகின்றனர்.

பெட்ரோல் பங்க்குகளுக்கு நிகராக சார்ஜிங் ஸ்டேஷன்களும் அதிகரிக்கும்பட்சத்தில், எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதில் மக்களுக்கு இருக்கும் தயக்கம் தகர்க்கப்படும். ஆனால் இப்படியான ஒரு நிலை இந்தியாவில் உருவாவதற்கு இன்னும் சில ஆண்டுகள் ஆகும். இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளும் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறி வருகின்றன.

இதன் மூலம் காற்று மாசுபாடு பிரச்னையை குறைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. தற்போதைய காற்று மாசுபாடு பிரச்னைக்கு பெட்ரோல், டீசல் வாகனங்கள் மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகின்றன. எனவே பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு உலகின் பல்வேறு நாடுகளும் ஏற்கனவே முடிவுரையை எழுத தொடங்கி விட்டன.

இன்னும் சில ஆண்டுகளில் உலகம் எலெக்ட்ரிக் வாகனமயமாகி விடும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. இந்தியாவை பொறுத்தவரை எலெக்ட்ரிக் வாகனங்கள் மட்டுமல்லாது, பிரேசில் போன்ற நாடுகளை போன்று எத்தனால் பயன்பாடும் தற்போது ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. இது சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத ஒரு எரிபொருள் ஆகும்.

கரும்பு மற்றும் மக்காச்சோளம் போன்ற விவசாய பொருட்களில் இருந்து கிடைப்பதால், எத்தனாலை எரிபொருளாக பயன்படுத்துவதன் மூலம் இந்தியாவின் விவசாயிகளுக்கும் பல்வேறு நன்மைகள் கிடைக்கும். தற்போது பெட்ரோலுடன் கலக்கப்படும் எத்தனாலின் அளவை அரசு படிப்படியாக அதிகரித்து கொண்டு வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








