போலீஸாரின் ரோந்து பணிக்கு ஸ்கோடா காரா!! ஆர்டர் செய்யப்பட்ட 2,000 ஸ்கோடா சூப்பர்ப் கார்கள்...
நியூசிலாந்து நாட்டு போலீஸ் படையில் 2,000 ஸ்கோடா சூப்பர்ப் காம்பி கார்கள் இணையவுள்ளன. இதுகுறித்த சுவாரஸ்யமான விபரங்களை இனி தொடர்ந்து பார்க்கலாம்.

உலகளவில் பிரபலமான கார் தயாரிப்பு நிறுவனமான ஸ்கோடா ஆட்டோ விரைவில் நியுசிலாந்து நாட்டை சேர்ந்த போலீஸ் துறைக்கு காம்பி ஸ்டைலிலான சூப்பர் கார்களை சுமார் 2,000 யூனிட்கள் டெலிவிரி செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது.

ஆர்டர் செய்யப்படுவதற்கு முன்பு பலத்தரப்பட்ட சோதனைகளில் உட்படுத்தப்பட்ட 2021 சூப்பர்ப் கார்கள் அவற்றின் ஹேண்ட்லிங் பண்புகளினாலும், உயர் பாதுகாப்பு நிலைப்பாட்டினாலும் மற்றும் விசாலமான கேபினினாலும் நியுசிலாந்து போலீஸ் அதிகாரிகளை கவர்ந்துவிட்டதாகவும் ஸ்கோடா தெரிவித்துள்ளது.

போலீஸ் பயன்பாட்டு வாகனத்திற்கான இந்த டெண்டர் போட்டியில் கிட்டத்தட்ட 7 வாகன தயாரிப்பு நிறுவனங்கள் 27 மாடல்களுடன் பங்கேற்றன. பிறகு 12 ஆக குறைக்கப்பட்ட இந்த கார்கள் நியுசிலாந்து அரசாங்க அதிகாரிகளால் பொது சாலைகளில் சோதனை செய்யப்பட்டன.

அதிகாரிகள் வாகனத்தின் மாசு உமிழ்வு மற்றும் சேவைத்திறன் உள்பட எரிபொருளுக்கு ஆகும் செலவையும் கணக்கிட்டு பார்த்த பின்னரே 2,000 சூப்பர்ப் காம்பி கார்களை ஆர்டர் கொடுக்க முன்வந்துள்ளனர். இதில் முதல் 100 யூனிட்கள் அடுத்த ஜூன் மாதத்தில் போலீஸாருக்கு டெலிவிரி செய்யப்பட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதனை தொடர்ந்து 400 யூனிட்கள் இந்த வருடத்திற்குள்ளாக நியுசிலாந்து போலீஸாரின் பணியில் இணைந்துவிடும் என தெரிகிறது. மொத்த 2,000 யூனிட்களும் அடுத்த நான்கு வருடங்களில் டெலிவிரி செய்யப்படும் என ஸ்கோடா கூறியுள்ளது.

செக் குடியரசு நாட்டை சேர்ந்த ஸ்கோடா ஆட்டோ நிறுவனத்தின் கார்கள் ஆஸ்திரியா, செர்பியா, குரோஷியா, போர்ச்சுகல், பிரான்ஸ், நெதர்லாந்து, யுகே என ஐரோப்பாவில் தான் அதிகமாக போலீஸாரின் ரோந்து படையிலும் அவசர துறைகளிலும் பயன்பாட்டில் உள்ளன.

அதிலும் குறிப்பாக ஸ்கோடாவின் சூப்பர்ப் மற்றும் ஆக்டேவியா என்ற செடான் கார்களே இவ்வாறான பயன்பாட்டிற்காக ஆர்டர் செய்யப்படுகின்றன. தாயகமான செக் குடியரசாங்கத்தில் 1993ல் இருந்து இதுவரையில் 20,000க்கும் அதிகமான தனது தயாரிப்பு வாகனங்களை ஸ்கோடா வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவை பொறுத்தவரையில் நமது போலீஸார் ஸ்கோடா கார்களை பயன்படுத்துவது என்பதெல்லாம் மிகவும் அரிது. இந்திய சந்தையில் அடுத்ததாக குஷாக் எஸ்யூவி காரை களமிறக்க ஸ்கோடா நிறுவனம் தயாராகி வருகிறது.


Click it and Unblock the Notifications








