மஹிந்திரா தாருக்கு போட்டி ரெடி... இறங்கி அடிக்க களமிறங்கியது ஃபோர்ஸ் குர்கா... பாக்கவே முரட்டுத்தனமா இருக்கு!
2021 ஃபோர்ஸ் குர்கா ஆஃப் ரோடு எஸ்யூவி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

2021 ஃபோர்ஸ் குர்கா 4X4 ஆஃப் ரோடு எஸ்யூவி இன்று (செப்டம்பர் 15) அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இதன் டிசைன் மேம்படுத்தப்பட்டிருப்பதுடன், இன்னும் பிரீமியமான உணர்வை அளிக்கும் வகையில் பல நவீன வசதிகளும் சேர்க்கப்பட்டுள்ளன. எனவே முக்கிய போட்டியாளரான மஹிந்திரா தார் எஸ்யூவிக்கு, புதிய ஃபோர்ஸ் குர்கா விற்பனையில் கடும் சவால் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் தற்போது வெளியிடப்பட்டிருப்பது ஃபோர்ஸ் குர்கா எஸ்யூவியின் இரண்டாவது தலைமுறை மாடல் ஆகும். இதன் நீளம் 4,116 மிமீ ஆகும். அதே சமயம் இதன் அகலம் 1,812 மிமீ ஆகவும், உயரம் 2,075 மிமீ ஆகவும் உள்ளது. அதே நேரத்தில் இந்த புதிய ஆஃப் ரோடு எஸ்யூவியின் வீல் பேஸ் நீளம் 2,400 மிமீ ஆக இருக்கிறது.

மஹிந்திரா நிறுவனம் புதிய தலைமுறை தார் எஸ்யூவியை நன்றாக மேம்படுத்தியுள்ளது. அதாவது ஆஃப் ரோடு எஸ்யூவி என்ற ரகத்தில் இருந்து லைஃப்ஸ்டைல் வாகனமாகவும் புதிய தலைமுறை தார் எஸ்யூவி மேம்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு கடுமையான போட்டியை வழங்கும் வகையில், ஃபோர்ஸ் குர்கா எஸ்யூவியும் நன்றாக அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

புதிய தலைமுறை ஃபோர்ஸ் குர்கா எஸ்யூவியில், ஒருங்கிணைந்த எல்இடி பகல் நேர விளக்குகள் உடன் வட்ட வடிவ எல்இடி ஹெட்லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் முன் பக்க க்ரில் அமைப்பும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. புதிய தலைமுறை ஃபோர்ஸ் குர்கா எஸ்யூவியின் டிசைன் முரட்டுத்தனமாக இருக்கிறது.

இதற்கு பம்பர்கள், பெரிய வீல் ஆர்ச்சுகள், ஸ்னோர்கெல், ரூஃப்ரெயில் ஆகியவை துணை புரிகின்றன. இந்த எஸ்யூவியில் 16 இன்ச் ஸ்டீல் வீல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் முன் மற்றும் பின் பகுதியில் டோ ஹூக்குகளையும் (Tow Hooks) இந்த எஸ்யூவி பெற்றுள்ளது. அதே நேரத்தில் இந்த எஸ்யூவியில் டர்ன் இன்டிகேட்டர்கள், முன் பக்க ஃபெண்டரில் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த எஸ்யூவியின் டெயில் லைட்கள் மற்றும் எல்இடி ஸ்டாப் லேம்ப்பும் நன்றாக இருக்கின்றன. சிகப்பு, பச்சை, வெள்ளை, ஆரஞ்ச் மற்றும் க்ரே என மொத்தம் 5 வண்ண தேர்வுகளில் புதிய தலைமுறை ஃபோர்ஸ் குர்கா எஸ்யூவி கிடைக்கும். வெளிப்புறத்தை போலவே உட்புறத்திலும் நிறைய மாற்றங்களை ஃபோர்ஸ் குர்கா எஸ்யூவி பெற்றுள்ளது.

இந்த எஸ்யூவியின் கேபினில் புதிய 7 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இது ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவை சப்போர்ட் செய்யும். அதே நேரத்தில் இந்த எஸ்யூவியில் செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஸ்டியரிங் வீலும் மூன்று-ஸ்போக் யூனிட்டாக மேம்படுத்தப்பட்டுள்ளது.

என்விஹெச் லெவல்கள் குறைவாக இருக்கும் வகையிலும், ஆஃப் ரோடு பயணங்களை முடித்து திரும்பிய பிறகு சுத்தம் செய்வது எளிமையாக இருக்கும் வகையிலும், இந்த எஸ்யூவியில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் பவர் விண்டோஸ் மற்றும் கப் ஹோல்டர்கள் ஆகிய வசதிகளையும் இந்த புதிய எஸ்யூவி பெற்றுள்ளது.

2021 ஃபோர்ஸ் குர்கா எஸ்யூவியில், பிஎஸ்-6 விதிமுறைகளுக்கு இணக்கமான 2.6 லிட்டர், நான்கு-சிலிண்டர் டீசல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 90 பிஹெச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது.

மஹிந்திரா தார் எஸ்யூவியுடன் ஒப்பிடும்போது, இது சக்தி குறைந்த இன்ஜினாக கருதப்படுகிறது. மஹிந்திரா தார் எஸ்யூவியில், 2.2 லிட்டர் டீசல் இன்ஜின் வழங்கப்படுகிறது. இந்த இன்ஜின் 130 ஹெச்பி பவரையும், 300 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. எனவே 2021 ஃபோர்ஸ் குர்கா உடன் ஒப்பிடும்போது, சக்தி வாய்ந்த இன்ஜினை புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவி பெற்றுள்ளது.

அதே நேரத்தில் புதிய தலைமுறை ஃபோர்ஸ் குர்கா எஸ்யூவியில், ட்யூயல் ஏர்பேக்குகள், இபிடி உடன் ஏபிஎஸ், ரியர் பார்க்கிங் சென்சார்கள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் மற்றும் அதிக வேகத்தில் சென்றால் எச்சரிக்கும் வசதி ஆகிய பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் சீட் பெல்ட் ரிமைண்டர் வசதியையும் இந்த எஸ்யூவி பெற்றுள்ளது.

புதிய ஃபோர்ஸ் குர்கா எஸ்யூவி இந்திய சந்தையில் வரும் செப்டம்பர் 27ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதற்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் வாடிக்கையாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். அதே நேரத்தில் இந்த எஸ்யூவியின் டெலிவரி பணிகள் வரும் அக்டோபர் 15ம் தேதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








