அரசுக்கு சொந்தமான வாகனங்களில் நடைபெறப்போகும் அதிரடி மாற்றம்... சூப்பரான செய்தியை சொன்ன துணை முதல்வர்...
எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பது தொடர்பாக கர்நாடக துணை முதல்வர் புதிய தகவல்களை கூறியுள்ளார். அதனை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கர்நாடக மாநில அரசுக்கு சொந்தமான வாகனங்களில் 50 சதவீத வாகனங்கள், அடுத்த 2-3 ஆண்டுகளில் எலெக்ட்ரிக் வாகனங்களாக மாற்றம் செய்யப்படும் என அம்மாநில துணை முதல்வர் அஸ்வத் நாராயண் தற்போது தெரிவித்துள்ளார். எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாகவும், காற்று மாசுபாடு பிரச்னையை கட்டுப்படுத்துவதற்காகவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

இதுகுறித்து அவர் கூறுகையில், ''அரசுக்கு சொந்தமான பெட்ரோல், டீசல் வாகனங்களில் 50 சதவீத வாகனங்களை, எலெக்ட்ரிக் வெர்ஷனுக்கு மாற்றி விடுவோம்'' என்றார். கார்கள், பேருந்துகள் உள்ளிட்ட எலெக்ட்ரிக் வாகனங்களை சார்ஜ் செய்வதற்காக, மெட்ரோ ரயில் நிலையங்கள், ஷாப்பிங் மால்கள், ஐடி பார்க்குகள், அப்பார்மெண்ட்களில் சார்ஜிங் ஸ்டேஷன்கள் அமைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ''எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்கள் அதிகளவில் இல்லாத காரணத்தால்தான், பெட்ரோல், டீசல் வாகனங்களை தொடர்ந்து பயன்படுத்த வேண்டிய கட்டாய நிலை உள்ளது. எனவே எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்காக, சார்ஜிங் ஸ்டேஷன்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.

பெங்களூர் மற்றும் மைசூர் இடையே உள்பட கர்நாடக மாநிலம் முழுவதும் உள்ள மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்கள் கட்டமைக்கப்படும். எலெக்ட்ரிக் வாகனங்கள் பாதுகாப்பானவை. அவற்றை இயக்குவதற்கும் குறைந்த செலவுதான் ஆகும்'' என்றார்.

இந்தியாவின் தொழில்நுட்ப தலைநகரமாக விளங்கும் பெங்களூர் உள்பட கர்நாடக மாநிலம் முழுவதும் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்காக இதுபோல் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கர்நாடகா மட்டுமின்றி இந்தியாவின் இன்னும் பல்வேறு மாநிலங்களும் வேகமாக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுவதற்கு முயற்சி செய்து வருகின்றன.

டெல்லி, மேற்கு வங்கம், கேரளா, தெலங்கானா, ஆந்திரா போன்ற பல்வேறு மாநிலங்களை இதற்கு உதாரணமாக கூறலாம். மத்திய அரசும் தன் பங்கிற்கு ஃபேம் இந்தியா திட்டத்தின் மூலம் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவித்து வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மத்திய அரசு சார்பில் மானியம் வழங்கப்படுகிறது.

மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் மட்டுமல்லாது, பெட்ரோல், டீசல் விலை உயர்வும் மக்களை எலெக்ட்ரிக் வாகனங்களை நோக்கி உந்தி தள்ளி வருகிறது. ஆனால் கர்நாடக துணை முதல்வர் அஸ்வத் நாராயண் குறிப்பிட்டதை போல், சார்ஜிங் ஸ்டேஷன்களின் பற்றாக்குறையால், பெட்ரோல், டீசல் வாகனங்களையே தொடர்ந்து பயன்படுத்த வேண்டிய கட்டாயம் மக்களுக்கு ஏற்படுகிறது.

இந்த பிரச்னை சரி செய்யப்பட்டு விட்டால், இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு வேகமாக உயரும் என்பதில் சந்தேகமில்லை. எலெக்ட்ரிக் கார்களின் விற்பனையை உயர்த்துவதற்காக, எம்ஜி மோட்டார் போன்ற நிறுவனங்களும் இந்தியாவில் சார்ஜிங் ஸ்டேஷன் வசதியை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








