மும்பை நிறுவனத்தின் கை வண்ணத்தில் உருவாகும் டிரைவர் இல்லாமல் இயங்கும் கார்கள்! சின்ன பள்ளத்தைகூட மிஸ் பண்ணாது!
மும்பையைச் சேர்ந்த அடானமஸ் இன்டலிஜென்ஸ் மோட்டார்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் உள்நாட்டில் வைத்து டிரைவர் தேவைப்படாத காரை தயாரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் அடானமஸ் இன்டலிஜென்ஸ் மோட்டார்ஸ் பிரைவேட் லிமிடெட் (Autonomous Intelligence Motors Private Limited). இது ஓர் ஆட்டோமொபைல் சேவை நிறுவனம் (automobile-as-a-service company) ஆகும். இந்த நிறுவனமே இந்தியாவில் மிக விரைவில் ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் வாகனங்களைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வர இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதற்காக நிறுவனம் செயற்கை நுண்ணறிவு ( Artificial Intelligence-of-Things)-க் கொண்ட ஹேட்ச்பேக் ரக காரை தயார் செய்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தகைய அம்சங்கள் கொண்ட வாகனங்கள் ஏற்கனவே உலக நாடுகள் சிலவற்றில் பயன்பாட்டிற்கு வந்துவிட்டன என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஆனால், இந்தியாவில் பயன்பாட்டிற்கு வருவது இதுவே முதல் முறையாகும். அதேநேரத்தில், இதுவரை பயன்பாட்டிற்கு வந்திருக்கும் பெரும்பாலான ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் தானியங்கி கார்கள் மின்சார தாயரிப்புகளாக மட்டுமே வந்திருக்கின்றன. ஆனால், இந்தியாவில் பயன்பாட்டிற்கு வர இருப்பதோ பெட்ரோல் மற்றும் டீசலால் இயங்கக் கூடியவை ஆகும்.

இந்த செயற்கை நுண்ணறிவுக் கொண்ட தானியங்கி கார் பெட்ரோல் மற்றும் டீசலால் இயங்கக் கூடியது. இத்தகைய திறன் கொண்ட ஹேட்ச்பேக் ரக காரையே ஏஐஎம்பிஎல் நிறுவனம் இந்தியாவில் அடுத்த ஆண்டு பயன்பாட்டிற்குக் கொண்டு வர இருப்பதாக இன்று (டிசம்பர் 8) தகவல் வெளியிட்டுள்ளது.

செயற்கை நுண்றிவுக் கொண்ட தானியங்கி கார்கள் 2022 மார்ச் மாதத்திற்குள் பயன்பாட்டிற்கு வந்துவிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வாகனங்கள் அனைத்தும் தானியங்கி திறன் கொண்டவை மட்டுமில்லைங்க. அவை பிஎஸ்8 மாசு உமிழ்வு தரத்திற்கு உகந்த வாகனமாகவும் பயன்பாட்டிற்கு வர இருக்கின்றது.

தற்போது இந்தியாவில் பிஎஸ்6 தர வாகனங்களே விற்பனையில் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. தானியங்கி கார்கள் அதிக பாதுகாப்பு மற்றும் தானாக இயங்குவது ஆகிய காரணங்களுக்காக சென்சார்கள், கேமிராக்கள் மற்றும் ரேடார்கள் என பல தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

இவை எதிரில் வரும் வாகனம், போக்குவரத்து, பாதைகள் மற்றும் மக்கள் நடமாட்டம் ஆகியவற்றை கண்டறிந்து அதற்கேற்பவாறு வாகனத்தை இயக்க உதவும். ஏன், பள்ளம்-மேடு மற்றும் வளைவுகள் போன்றவற்றை உணர்ந்து அவற்றிற்கு ஏற்ப வாகனத்தின் வேகத்தை குறைப்பது மற்றும் அதிகரிப்பது உள்ளிட்டவற்றையும் அவை செய்யும்.

இதுமட்டுமின்றி, காரில் பயன்படுத்தப்படும் சென்சார்கள் அவசரக கால டைவர்சன்கள், சாலை மறிப்புகள், பனிமூட்டமான கால நிலை மற்றும் அதிக மழை ஆகியவற்றைக் கூட உணர்ந்து செயல்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த உணர்வானது 500 மீட்டர் வரை இருக்கும் என கூறப்படுகின்றது.

அதாவது, காருக்குள் இருக்கும் சென்சார்கள் என்ன மாதிரியான சூழ்நிலையை நிகழ்கின்றது என்பதை 500 மீட்டர் தூரத்திலேயே கண்டறியும் அளவிற்கு திறன் வாய்ந்ததாக இருக்கின்றது. இது, துரிதமாக செயல்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க போதுமான இடைவெளி ஆகும்.

50 சதவீதம் கூகுள் மேப்பின் உதவியைக் கொண்டு இந்த தானியங்கி கார்கள் இயங்க இருக்கின்றன. கூகுள் மேப் உதவியுடன் பாதையே இல்லாத அல்லது ஆபத்தான பாதைக்குள் இக்கார் வழி நடத்தப்படுமானால், காருக்குள் இருக்கும் சென்சார்கள் பாதையின் ஆபத்தை உணர்ந்து உடனடியாக வாகனத்தின் இயக்கத்தை நிறுத்த உதவும். ஆகையால், இந்த வகையிலான வாகனங்களால் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாது என தெரிகின்றது.

கணினி தொழில்நுட்ப மாணவர் குஷார் தனாஜி ஷிலிம்கர் என்பவரால் உருவாக்கப்பட்டதே இந்த தானியங்கி காருக்கான தொழில்நுட்பம் ஆகும். இவர் இந்த தொழில்நுட்பத்தை 2014ம் ஆண்டிலேயே அறிமுகம் செய்துவிட்டார் என்பது குறிப்பிடத்தகுந்தது. நேஷனல் ரோபோட்டிக் சாம்பியன்ஷிப் ஐஐடி பாம்பேவிலேயே இது முதல் முறையாக காட்சிப்படுத்தப்பட்டது.

முன்னதாக கான்செப்ட் மாடலாக காட்சிப்படுத்தப்பட்ட தொழில்நுட்பமே தற்போது மிக விரைவில் நடைமுறைக்கு வர இருக்கின்றது. இதற்கான பணியிலேயே தற்போது குஷார் தனாஜி ஷிலிம்கரின் ஏஐஎம்பிஎல் நிறுவனம் களமிறங்கியிருக்கின்றது. இந்த தகவல் வாகன உலகில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வரும் வகையில் அமைந்திருக்கின்றது.


Click it and Unblock the Notifications








