ஆந்திராவில் பயன்பாட்டிற்கு வந்தது வீடி தேடி செல்லும் ரேஷன் கடைகள்... நாட்டையே மிரள வைத்த ஜெகன் மோகன் ரெட்டி!!
ஆந்திராவில் வீடு தேடி சென்று ரேஷன் பொருட்களை வழங்கும் திட்டம் செயல்பாட்டிற்கு வந்ததற்கு. இதற்காக வாங்கப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை மற்றும் எந்த நிறுவனத்தின் வாகனம் வாங்கப்பட்டிருக்கின்றது என்கிற தகவலைக் கீழே காணலாம்.

ஒய்.எஸ். ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆந்திராவில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதில் இருந்து பல்வேறு மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. குறிப்பாக, தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இந்த அரசு அதி-தீவிரம் காட்டி வருகின்றது.

அந்தவகையில் முன்னதாக ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அரசு அம்மாநிலத்தில் கொண்டு வந்த திட்டங்கள் பல. இதில் ஒரு சில திட்டங்கள் பிற மாநில மக்களை பொறாமையில் ஆழ்த்தும் வகையில் இருந்தது என்று கூறினால் மிகையாகாது. அந்தளவிற்கு பெரும் வரவேற்பு மிக்க நடவடிக்கை தற்போது ஆந்திர அரசு அம்மாநிலத்தில் மேற்கொண்டு வருகின்றது.

இந்நிலையில், வீடு வீடாக சென்று ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யும் திட்டத்தை முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று (வியாழக்கிழமை) தொடங்கி வைத்தார். இதற்காக ரூ. 539 கோடி செலவில் வாங்கப்பட்ட 9,260 வாகனங்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டன.

இவையே மக்களின் வீடுகளைத் தேடி சென்று ரேஷன் பொருட்களை வழங்க இருக்கின்றன. இந்த வாகனங்களை மக்கள் பயன்பாட்டிற்கு அர்பணிக்கும் விதமாக விஜயவாடாவில் பச்சைக் கொடியசைத்து ஜெகன் மோகன் ரெட்டி தொடங்கி வைத்தார்.

இந்த வாகனங்கள் அனைத்தும் டாடாவின் தயாரிப்பாகும். இந்நிறுவனத்தின் ஏஸ் கோல்ட் மினி லோடு வேனையே ஆந்திர அரசு தற்போது வாங்கியிருக்கின்றது. 60 சதவீத மானியத்தின்கீழ் இந்த வாகனங்களை ஆந்திர அரசு கொள்முதல் செய்திருக்கின்றது. எனவே இதன் ஒரு யூனிட்டின் விலை ரூ. 3,48,600 ஆக இருக்கின்றது.

மானியம் இல்லாத நிலையில் இந்த வாகனத்தின் விலை ரூ. 5,81,000 ஆக உள்ளது. தற்போது வாங்கப்பட்டிருக்கும் அனைத்து வாகனங்களிலும் ரேஷன் கடைகளுக்கு இணையான வசதிகள் வழங்கப்பட்டிருக்கின்றன.

அதாவது, எடை மிஷின், அத்தியாவசியப் பொருட்கள் (ரேஷன் பொருட்கள்), பணியாளர் நின்று பொருளை அளவிட்டு வழங்குவதற்கான இடவசதி என அனைத்தையும் மனத்தில் கொண்டு இந்த வாகனம் கட்டமைக்கப்பட்டிருக்கின்றது.

எனவேதான் இந்த மினி லோடு வேன் தற்போது ரேஷன் கடைகளாக மாறியிருக்கின்றன. இவற்றின் மூலமே மக்களுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய பொருட்களும் வீடு தேடி சென்று கொடுக்கப்பட இருக்கின்றன. வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்று திறனாளி குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்த திட்டம் அதிகம் பயனளிக்கும் என நம்பப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








