காவல்துறைக்காக புத்தம் புதிய கார்களை களமிறக்கிய ஆந்திர அரசு... மொத்தம் எத்தனை வாங்கியிருக்காங்க தெரியுமா?
ஆந்திராவில் காவல்துறையில் நெடுஞ்சாலை பேட்ரோல் பயன்பாட்டிற்காக புதிய எஸ்யூவி ரக கார்கள் வாங்கப்பட்டிருக்கின்றன. இந்த கார்கள் பற்றிய சிறப்பு தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

பிற மாநில மக்களைப் பொறாமைக்குள்ளாக்கின்ற வகையில் ஒய்.எஸ். ஜகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சி ஆந்திராவில் நடைபெற்று வருகின்றது. இவர், அண்மையில் மாநில மக்களின் அவசர கால பயன்பாட்டிற்கு உதவுகின்ற வகையில் 1,000 புதிய ஆம்புலன்ஸ்களை மாநிலத்தில் களமிறக்கினார். இவை, கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நிலவிய ஆம்புலன்ஸ் பற்றாக் குறையை கணிசமாக பூர்த்தி செய்தன.

இந்த நிலையில், உயிர் காக்கும் ஆம்புலன்ஸ்களைத் தொடர்ந்து மக்கள் பணியில் ஈடுபடும் காவல்துறை பயன்பாட்டிற்காக புதிய எஸ்யூவி கார்களை ஆந்திர அரசு புதிதாக வாங்கியுள்ளது. மொத்தம் 36 புதிய எஸ்யூவி கார்கள் களமிறக்கப்பட்டிருக்கின்றன.

வீடியோ கான்ஃபெரன்ஸிங் வாயிலாக வாங்கப்பட்ட அனைத்து வாகனங்களையும் பச்சைக் கொடி காட்டி ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். இந்த புதிய வாகனங்கள் ஃபோர்ஸ் நிறுவனத்தின் டிராக்ஸ் ஹாவ்க் மாடல் எஸ்யூவி கார்கள் ஆகும்.

இதனையே மாநிலத்தின் காவல்துறையைப் பலப்படுத்தும் வகையில் ஆந்திர அரசு அண்மையில் கொள்முதல் செய்தது. தற்போது அவற்றையே நெடுஞ்சாலை காவல்துறைப் பணிக்காக ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது. புதிய வாகனங்கள் அனைத்தும் பிஎஸ்6 தரத்திலானவை ஆகும்.

இக்காரை பிக்-அப் ட்ரக் ரகத்திலும் ஃபோர்ஸ் நிறுவனம் வழங்கி வருவது குறிப்பிடத்தகுந்தது. ஆஃப்-ரோடு மற்றும் பன்முக பயன்பாட்டைக் கொண்ட வாகனம் இதுவாகும். எனவேதான் ஆந்திர அரசு இந்த வாகனங்களை தங்கள் மாநிலத்தின் காவல்துறை பயன்பாட்டிற்காக வாங்கியிருக்கின்றது.

இதன் ஒரு யூனிட்டின் விலை ரூ. 11.06 லட்சம் ஆகும். இது 9 இருக்கை மற்றும் 12 இருக்கைகள் தேர்வில் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. மேலும், ஏசி உள்ள மற்றும் ஏசி வசதி இல்லாத என்ற தேர்விலும் இக்கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

இவ்வாறு பன்முக தேர்வுகளுடன் விற்பனைக்குக் கிடைக்கும் ஃபோர்ஸ் டூஃபான் ஹாவ்க் மாடலையே ஆந்திரா தற்போது தனது நெடுஞ்சாலை காவல்துறையின் பயன்பாட்டிற்கு வழங்கியிருக்கின்றது. காவலர்களின் பயன்பாட்டிற்கு ஏற்ப பல்வேறு சிறப்பு வசதிகள் இதில் செய்யப்பட்டிருக்கின்றன.

குறிப்பாக, இது போலீஸ் வாகனம் என்பதை பிரதிபலிக்கக் கூடிய ஸ்டிக்கர்கள், சைரன் மற்றும் பெயிண்டிங் வேலைகள் கூடுதலாக செய்யப்பட்டிருக்கின்றன. இத்துடன், பேரிடர் காலம் மற்றும் கைதிகளைக் கையாளுவதற்கான சிறப்பு வசதிகளை இந்த வாகனங்கள் பெற்றிருப்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








