பெட்ரோல், டீசல் விலை உயரும் நிலையில் எலெக்ட்ரிக் வாகனங்களை நம்பி வாங்கலாம்... டெல்லி அரசின் அடுத்த அதிரடி...
எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக டெல்லி அரசு அடுத்த அதிரடி நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டெல்லி முழுவதும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மேலும் 100 சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைப்பதற்காக புதிய டெண்டரை டெல்லி மாநில அரசு கோரியுள்ளது. டெல்லி மாநில அரசு தற்போது 'ஸ்விட்ச் டெல்லி' என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக மேலும் 100 சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைப்பதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளது.

ஸ்விட்ச் டெல்லி திட்டம் சமீபத்தில்தான் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ், எலெக்ட்ரிக் வாகனங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பெட்ரோல், டீசல் வாகனங்களில் இருந்து, எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்தும் இந்த திட்டத்தின் மூலமாக பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்படுகிறது.

டெல்லியில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் குறைந்தபட்சம் ஒரு சார்ஜிங் ஸ்டேஷனையாவது அமைப்பதற்கு அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக அடுத்த இரண்டு ஆண்டுகளில், 100 இடங்களில் 500 சார்ஜிங் பாயிண்ட்களை அமைப்பதற்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் வளாகங்கள், டெல்லி போக்குவரத்து கழக பஸ் டெப்போக்கள் மற்றும் மார்க்கெட்கள் உள்ளிட்ட இடங்களில் இந்த சார்ஜிங் ஸ்டேஷன்கள் அமைக்கப்படவுள்ளன. சார்ஜிங் ஸ்டேஷன்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறலாம் என்ற எண்ணத்தை மக்களுக்கு ஏற்படுத்த முடியும் என டெல்லி அரசு நம்புகிறது.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். இதனால் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுவது குறித்து பலர் யோசித்து கொண்டுள்ளனர். ஆனால் சார்ஜிங் ஸ்டேஷன்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளதால், அவர்கள் தொடர்ந்து பெட்ரோல், டீசல் வாகனங்களையே பயன்படுத்தும் நிலை காணப்படுகிறது.

எனவே சார்ஜிங் ஸ்டேஷன்களின் எண்ணிக்கையை அதிகரித்து, எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுவதற்கான நம்பிக்கையை மக்களுக்கு வழங்க டெல்லி அரசு திட்டமிட்டுள்ளது. இந்தியாவிலேயே எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதில், மற்ற மாநிலங்களுக்கு எல்லாம் முன்னுதாரணமாக டெல்லி திகழ்கிறது.

டெல்லியில் காற்று மாசுபாடு பிரச்னை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்வதால், எலெக்ட்ரிக் வாகனங்களை அதிகளவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் விரும்புகிறார். இதன் ஒரு பகுதியாக கடந்த 2020ம் ஆண்டில் டெல்லி அரசின் எலெக்ட்ரிக் வாகன கொள்கை வெளியிடப்பட்டது.

இதன் கீழ் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்களுக்கு மானியங்களையும் டெல்லி அரசு வழங்கி வருகிறது. பெட்ரோல், டீசல் வாகனங்களுடன் ஒப்பிடுகையில், எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை சற்று அதிகமாக இருக்கும் நிலையில், இந்த மானிய தொகை எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க மக்களை ஊக்குவித்து வருகிறது.


Click it and Unblock the Notifications








