பெட்ரோல், டீசல் விலை உயர்வு பிரச்னை தாங்க முடியலயா? அப்போ கெஜ்ரிவால் சொல்ற இந்த ஐடியாவ ஃபாலோ பண்ணுங்க!
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மக்களிடம் ஒரு சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

எலெக்ட்ரிக் வாகனங்களை பிரபலமாக்குவதற்காக, ஸ்விட்ச் டெல்லி (Switch Delhi) திட்டத்தை, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று (பிப்ரவரி 4) தொடங்கி வைத்தார். அத்துடன் டெல்லியில் காற்று மாசுபாடு பிரச்னையை எதிர்த்து போரிடுவதற்காக எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க வேண்டும் என மக்களுக்கு அவர் வேண்டுகோளும் விடுத்துள்ளார்.

பெரிய நிறுவனங்கள், குடியிருப்பு நல சங்கங்கள், மார்க்கெட் சங்கங்கள், மால்கள் மற்றும் திரையரங்குகள் ஆகியவை எலெக்ட்ரிக் வாகனங்களை பிரபலப்படுத்த வேண்டும் எனவும், இதன் ஒரு பகுதியாக தங்களது வளாகத்திற்குள் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன் வசதியை ஏற்படுத்த வேண்டும் எனவும் அரவிந்த் கெஜ்ரிவால் கேட்டு கொண்டுள்ளார்.

அத்துடன் இளைய தலைமுறையினர் அனைவரும் தங்களது முதல் வாகனமாக எலெக்ட்ரிக் வாகனத்தை வாங்க வேண்டும் எனவும் அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை வைத்துள்ளார். மேலும் டெல்லி அரசின் எலெக்ட்ரிக் வாகன கொள்கை, உலகிலேயே மிகச்சிறந்த எலெக்ட்ரிக் வாகன கொள்கைகளில் ஒன்றாக கருதப்படுகிறது எனவும் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அதனை அர்ப்பணிப்பு உணர்வுடன் சரியாக செயல்படுத்துவதற்கான நேரம் இதுதான் எனவும் அவர் கூறியுள்ளார். இதுகுறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மேலும் கூறுகையில், ''ஸ்விட்ச் டெல்லி திட்டத்தின் கீழ், எலெக்ட்ரிக் வாகனங்களால் கிடைக்கும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

அத்துடன் தூய்மையான, மாசு இல்லாத டெல்லியை உருவாக்குவதற்கு எலெக்ட்ரிக் வாகனங்கள் எப்படி தங்களது பங்களிப்பை வழங்கும்? என்பது குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படும். சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக எலெக்ட்ரிக் வாகனங்களை பிரபலப்படுத்தும் இந்த திட்டத்தில் மக்கள் அதிகளவில் பங்கேற்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன்.

மாசு இல்லாத டெல்லியை நோக்கிய திட்டத்தில் பொதுமக்கள் தங்கள் பங்களிப்பை செய்ய வேண்டும்'' என்றார். டெல்லி மாநில அரசு தனது எலெக்ட்ரிக் வாகன கொள்கையின் கீழ், எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் உள்ளிட்டவற்றை வாங்குபவர்களுக்கு மானியம் வழங்க திட்டமிட்டுள்ளது.

அத்துடன் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு சாலை வரி மற்றும் பதிவு கட்டணங்களில் இருந்து விலக்கும் வழங்கப்படும். டெல்லி அரசின் எலெக்ட்ரிக் வாகன கொள்கை, கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. அப்போதில் இருந்து 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட எலெக்ட்ரிக் வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன.

டெல்லி அரசு மட்டுமல்லாது, மேற்கு வங்கம், தெலங்கானா, கர்நாடகா மற்றும் கேரளா போன்ற பல்வேறு மாநில அரசுகளும், மத்திய அரசும் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு முயற்சி செய்து வருகின்றன. காற்று மாசுபாடு பிரச்னை மட்டுமல்லாது, கச்சா எண்ணெய் இறக்குமதி அதிகரிப்பு பிரச்னையை குறைப்பதற்கும் எலெக்ட்ரிக் வாகனங்கள் இந்தியாவிற்கு உதவி செய்யும்.

அதே சமயம் மத்திய, மாநில அரசுகளின் அதிகப்படியான வரி காரணமாக இந்தியாவில் தற்போது பெட்ரோல், டீசல் விலை மிகவும் அதிகமாக உள்ளது. ஆனால் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறினால், பெட்ரோல், டீசல் விலை உயர்வு பிரச்னையில் இருந்தும் தப்பிக்கலாம். இதன் காரணமாகவும் தற்போது அதிகப்படியான மக்களின் கவனம் எலெக்ட்ரிக் வாகனங்களின் மீது திரும்பி வருகிறது.


Click it and Unblock the Notifications








