இந்திய மண்ணில் வந்திறங்கியது ஆடியின் முதல் மின்சார கார்!! இ-ட்ரான் எலக்ட்ரிக் எஸ்யூவி...
ஆடி இ-ட்ரான் எலக்ட்ரிக் எஸ்யூவி கார்கள் இந்திய ஷோரூம்களை வந்தடைய துவங்கியுள்ளன. இதனை உறுதிப்படுத்தும் வகையில் நமக்கு கிடைக்க பெற்றுள்ள படங்களை படங்களை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

ஜெர்மனை சேர்ந்த ஆடி நிறுவனம் இந்திய சந்தையில் கொண்டுவரவுள்ள மிக முக்கிய கார்களுள் இ-ட்ரானும் ஒன்று. ஏனெனில் இது பலத்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் உலகளவில் வெளியிடப்பட்ட எலக்ட்ரிக் எஸ்யூவி காராகும்.

இப்படிப்பட்ட, எதிர்பார்ப்பில் உள்ள எலக்ட்ரிக் ஆடி கார் தான் தற்போது இந்தியாவில் டீலர்ஷிப் ஷோரூம் ஒன்றில் காட்சி தந்துள்ளது. இந்தியாவில் ஆடியின் முதல் எலக்ட்ரிக் வாகனமாக விற்பனையை துவங்கவுள்ள இ-ட்ரானிற்கு கடந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் அறிமுகமான மெர்சிடிஸ்-பென்ஸ் இக்யுசி விற்பனையில் முக்கிய போட்டி மாடலாக விளங்கும்.

அதேபோல் கடந்த 2020ஆம் ஆண்டின் துவக்கத்தில் ஜாகுவார் பிராண்டில் இருந்து களமிறக்கப்பட்ட ஐ-பேஸ் எலக்ட்ரிக் காரும் போட்டியாக விளங்கவுள்ளது. இருப்பினும் இந்த போட்டியில் ஆடி நிறுவனத்தின் கை தான் ஓங்கி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனெனில் உலகளவில் ஆடி இ-ட்ரானிற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த எலக்ட்ரிக் எஸ்யூவி காரை ஆடி நிறுவனம் 2020ஆம் ஆண்டின் முதல் பாதியில், கொரோனா ஊரடங்குகளுக்கு மத்தியிலும் மற்ற வெளிநாட்டு சந்தைகளில் 17,641 யூனிட்கள் விற்பனை செய்துள்ளது.

இ-ட்ரான் எஸ்யூவியை ஆடி நிறுவனம் கடந்த ஆண்டு இறுதியில் அப்டேட் செய்தது. இதன் விளைவாக இந்த எலக்ட்ரிக் கார் தற்போது இரண்டாம் ஆன்-போர்டு சார்ஜர் உடன் வெளிநாடுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இ-ட்ரானில் 71.2 kWh பேட்டரி தொகுப்பு வழங்கப்படுகிறது.

இதன் உதவியுடன் இந்த எலக்ட்ரிக் காரில் 0-வில் இருந்து 100kmph வேகத்தை வெறும் 6.8 வினாடிகளில் எட்டிவிட முடியும். இந்த எலக்ட்ரிக் எஸ்யூவி காரின் டாப் ஸ்பீடு 190kmph ஆகும். இதன் பேட்டரியை முழுவதும் சார்ஜ் நிரப்பிக்கொண்டு அதிகப்பட்சமாக 282கிமீ-இல் இருந்து 340கிமீ வரையில் பயணிக்கலாம்.

அதாவது பயணிகளின் எண்ணிக்கை, பாதை, ட்ரைவிங் ஸ்டைல் உள்ளிட்டவற்றினால் காரின் ரேஞ்ச் மாறுப்படலாம். உட்புறத்தில் இயற்பியலாக அழுத்தும் பொத்தான்கள் மிகவும் குறைவாகவே கொடுக்கப்பட்டுள்ளன. இதனாலேயே இ-ட்ரானை எதிர்காலத்திற்கான கார் என ஆடி அழைக்கிறது.

டேஸ்போர்டில் ஓட்டுனருக்கு எதிர்புறமாக பெரியளவில் இரு தொடுத்திரைகள் வழங்கப்படுகின்றன. இவற்றுடன் பல-செயல்பாட்டு ஸ்டேரிங் சக்கரம், 4-நிலை க்ளைமேட் கண்ட்ரோல், கேபினை சுற்றிலும் விளக்குகள் மற்றும் பனோராமிக் சன்ரூஃப்-ஐ இந்த பேட்டரி-எஸ்யூவி காரின் முக்கிய உட்புற சிறப்பம்சங்களாக கூறலாம்.

இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான மார்க்கெட் தற்போது தான் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. இதனால் ஆடி இ-ட்ரானிற்கு எத்தகைய வரவேற்பு கிடைக்கவுள்ளது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஆடியை தொடர்ந்து வால்வோ, போர்ஷே நிறுவனங்களும் எலக்ட்ரிக் கார்களை இந்தியாவில் களமிறக்க திட்டமிட்டு வருகின்றன.


Click it and Unblock the Notifications








