ஆடி சொகுசு கார் உரிமையாளருக்கு ரூ.17.5 லட்சம் வழங்க உத்தரவு! காப்பீடு நிறுவனத்துக்கு பாடம் கற்பித்த நீதிமன்றம்
ஆடி க்யூ7 சொகுசு கார் உரிமையாளருக்கு ரூ. 17.5 லட்சத்தை இழப்பீடாக வழங்க தனியார் காப்பீட்டு நிறுவனத்திற்கு தெலங்கானா நுகர்வோர் மன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

தெலங்கானா மாநிலம், பஞ்சாரா ஹில்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் சுதாகர் ராஜூ. இவர், கடந்த 2013ஆம் ஆண்டு ரூ. 60 லட்சம் செலவில் புதிய ஆடி க்யூ7 3.0டிடிஐ மாடல் சொகுசு காரை பயன்பாட்டிற்கு வாங்கினார். இதற்கு ரூ. 1.12 லட்சம் செலவில் இன்சூரன்ஸ் பிரீமியத்தையும் காரின் கொள்முதலின்போதே அவர் பெற்றார்.

இந்நிலையில், சரியாக காரை வாங்கி பத்து மாதங்களான நிலையில், அதாவது, கடந்த 2013 செப்டம்பர் மாதம் தெலங்கானா மாநிலத்தின் ஹைதராபாத்தில் கடுமையான மழை பொழிவு ஏற்பட்டது. இதனால் நகரத்தின் பெரும்பாலான பகுதி வெள்ளக் காடாக மாறியது. குறிப்பாக, ஜூபிலி ஹில்ஸ் போன்ற தாழ்வான பகுதிகளில் முதல் தளம் மூழ்குமளவிற்கு வெள்ளம் பெருக்கெடுத்தது.

அதிகளவு வெள்ள நீரால் ஏற்பட்ட கடும் வாகன நெரிசல் ராஜுவை கேபிஆர் பார்க் எனும் பகுதியிலேயே காரை நிறுத்துவிட்ட செல்ல நேரிட்டது. அதிக மழையினால் பெருக்கெடுத்த வெள்ள நீர் காரை மூழ்குமளவிற்கு சூழ்ந்தது. இதனால், காரை மீட்க முடியாத சூழல் ஏற்பட்டது. தொடர்ந்து, மறு நாள் வெள்ள நீர் வடிந்த பின்னர் ராஜு கார் இருக்கும் பகுதிக்கு விரைந்தார்.

Source: TOI
தொடர்ந்து, காரை இயக்கும் விதமாக பலவித முயற்சிகளில் ஈடுபட்டார். ஆனால், காரோ சிறிதளவுகூட அசைந்துக் கொடுக்கவில்லை. இதனால், ஆடி நிறுவனத்தின் சர்வீஸ் மையத்தின் உதவியை அவர் நாடினார். இங்கு ஊழியர்கள் சிலர் வழிகாட்டியதன் அடிப்படையில், இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் உரிய இழப்பீடைப் பெறும் முயற்சியில் களமிறங்கினார்.

ஆனால், இன்சூரன்ஸ் நிறுவனமோ ராஜூ மீது பழிபோட்டுவிட்டு, இந்த கோளாறுகளுக்கு எங்களால் தீர்வு வழங்க முடியாது என கையை விரித்துவிட்டது. மழை நீரில் முழுமையாக மூழ்கியநிலையில் காரை இயக்கும் விதமாக முயற்சி செய்தது மிகப்பெரிய தவறு என்றும், இதனால், காரில் மேலும் பல பாகங்கள் கூடுதலாக பாதிப்பைச் சந்தித்திருப்பதாகவும், இழப்பீட்டை நிராகரிப்பிற்கான காரணமாக காப்பீட்டு நிறுவனம் கூறியது.

ஆடி க்யூ7 காரை மீண்டும் இயங்குநிலைக்குக் கொண்டு வர ரூ. 20 லட்சம் வரை ராஜூ செலவு செய்ததாகக் கூறப்படுகின்றது. இது மிகப்பெரிய தொகை என்பதால் தனக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டிருப்பதாகக் கூறி, தெலுங்கானா மாநில நுகர்வோர் நிவாரண ஆணையத்திடம் அவர் புகார் அளித்தார்.

இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிமன்றமே சுமார் 7 ஆண்டுகளானநிலையில் தற்போது உரிய தீர்ப்பை வழங்கியிருக்கின்றது. ஆடி க்யூ7 சொகுசு கார் உரிமையாளருக்கு சாதகமான தீர்ப்பை அது வழங்கியிருக்கின்றது. ரூ. 17.54 லட்சத்தை 7சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

உரிமையாளரின் கவனக்குறைவால் இந்த தவறு ஏற்பட்டுவிட்டதாக இன்சூரன்ஸ் நிறுவனம் கருதியது தவறு என்பதைச் சுட்டிக் காட்டிய நுகர்வோர் மன்றம் இந்த அபராதத்தை உடனடியாக செலுத்தும்படி உத்தரவிட்டிருக்கின்றது. முன்னதாக, உரிமையாளர் மீது முழு தவறும் இருப்பதாக கூறிய காப்பீட்டு நிறுவனம், ரூ. 53 ஆயிரம் வரை இழப்பீடாக வழங்குவதாக கூறியிருந்தது.

ஆனால், தான் செலவு செய்தது ரூ. 20 லட்சம் என்பதானலேயே, இதற்கான உரிய இழப்பீடு வெண்டும் என எண்ணி நுகர்வோர் மன்றத்தை ராஜூ நாடினார். இதற்கான பலனையும் அவர் தற்போது பெற்றிருக்கின்றார்.


Click it and Unblock the Notifications








