பெட்ரோல், டீசல் வாகன தயாரிப்பை 'கை' விட தயாராகும் பிரபல நிறுவனம்... என்ன சொல்றீங்க! உறைந்து நிற்கும் மக்கள்!
பிரபல சொகுசு கார் உற்பத்தி நிறுவனம் விரைவில் உள் எரிப்பு (பெட்ரோல், டீசல்) வாகனங்கள் தயாரிப்பை கை விட இருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

சொகுசு கார் உற்பத்தியாளரான ஆடி மிக விரைவில் அதன் முதல் மின்சார காரான இ-ட்ரான் எஸ்யூவி-யை இந்திய சந்தையில் விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது. இந்த காரை ஏற்கனவே உலக நாடுகள் சிலவற்றில் விற்பனைக்கு வழங்கி வரும்நிலையில், இப்போதே இதன் இந்திய அறிமுகத்திற்கு நிறுவனம் தயாராகி வருகின்றது.

வரும் ஜூலை 22ம் தேதி அன்றே ஆடி இ-ட்ரான் இந்தியாவில் விற்பனைக்கு களமிறங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்காலத்தில் இதுமாதிரியான மின்சாரத்தால் இயங்கும் வாகனங்களையே பெருமளவில் நிறுவனம் தயாரிக்க இருக்கின்றது.

அதாவது, 2026ம் ஆண்டில் இருந்து முழு வீச்சில் மின் வாகன தயாரிப்பை கையிலெடுக்க இருப்பதாக ஆடி தெரிவித்துள்ளது. இதுமட்டுமின்றி 2033ம் ஆண்டிற்கு பின்னர் முழு முழுக்க மின் வாகனங்களை மட்டுமே தயாரிக்க இருப்பதாகவும் நிறுவனம் அதிர்ச்சியளிக்கும் தகவலை வெளியிட்டுள்ளது.

ஆமாங்க, நீங்க நினைக்கிறது சரிதான். ஆடி நிறுவனம் முழுவதுமாக பெட்ரோல், டீசல் ஆகியவற்றால் இயங்கும் வாகனங்களின் உற்பத்தி கை விட இருக்கின்றது. இதுகுறித்த தகவலை நிறுவனம் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கின்றது.

ஆகையால், நிறுவனத்தின் உள் எரிப்பு எஞ்ஜின் கொண்ட வாகன பிரியர்கள் மிகுந்த அதிர்ச்சியில் உறைந்திருக்கின்றனர். ஆடி நிறுவனம் மட்டுமில்லைங்க ஏற்கனவே இந்த முடிவை பல முன்னணி நிறுவனங்கள் எடுத்திருக்கின்றன.

எதிர்காலத்தில் முழுக்க முழுக்க மின்சாரத்தால் இயங்கும் வாகனங்களை மட்டுமே விற்பனைக்குக் கொண்டு வருவோம் என அவை தீர்மானம் எடுத்திருக்கின்றன. சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் சுகாதாரச் சீர்கேடில் அதிக பங்கினை எரிபொருளால் இயங்கும் வாகனங்கள் கொண்டிருக்கின்றன.

இதனால், புவி வெப்ப மயமாதல் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் எழும்பிய வண்ணம் இருக்கின்றன. இதற்கு முற்று புள்ளி வைக்கும் நோக்கில் மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையிலேயே வாகன உற்பத்தி நிறுவனங்கள் ஒவ்வொன்றாக தங்களின் மின் வாகன கொள்கை பற்றி அறிவிக்கத் தொடங்கியிருக்கின்றன. மேலும், தற்போது ஆடி நிறுவனமும் இத்தகவலை வெளியிட்டுள்ளது. சமீபத்தில் பெர்லின் நகரத்தில் நடைபெற்ற ஓர் மாநாட்டில் பங்கேற்ற ஆடி நிறுவனத்தின் சிஇஓ மார்கஸ் டியூஸ்மேன் இத்தகவலை உறுதி செய்தார்.

இதுகுறித்த அவர் கூறியதாவது, "ஆடி ஏற்கனவே இ-ட்ரான் எலெக்ட்ரிக் காரின் வாயிலாக மின்சார உலகில் காலடி எடுத்து வைத்துள்ளது. ஏ6 அடிப்படையிலான இன்னுமொரு மின்சார காரும் தயாரிப்பில் இருக்கின்றது. இதைத்தொடர்ந்து இன்னும் பல தயாரிப்புகளை மின்சார வெர்ஷனில் உருவாக்க முதலீடுகளைச் செய்ய நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது" என எதிர்கால தயாரிப்புகள்குறித்து அவர் தெரிவித்தார்.

2025ம் ஆண்டிற்குள் 20 புதிய மின்சார கார்களை வெளியிட நிறுவனம் திட்டமிட்டிருப்பதாகவும் அவர் கூறியிருக்கின்றார். ஆகையால், சொகுசு கார் தயாரிப்பாளரான ஆடி எரிபொருளால் இயங்கும் வாகன தயாரிப்பை கைவிட இருப்பது இப்போதே உறுதியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications








