எத்தனை பேருக்கு தெரியும்? இந்தியாவில் தயாரிக்கப்படும் தென்னாப்பிரிக்காவின் மலிவான காரை பற்றி...
மிக பெரிய ஆப்பிரிக்க ஆட்டோமொபைல் சந்தைகளுள் ஒன்றான தென்னாப்பிரிக்காவில் விற்பனையில் உள்ள மிக மலிவான கார் இந்தியாவில் தான் தயாரிக்கப்படுகிறது என்பதை சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா.

ஆம், பஜாஜ் க்யூட். நான்கு சக்கர வாகனமான இது பாதுகாப்பு தரத்திலும், ஒழுங்குமுறைகளிலும் உலகளவிய ஆட்டோமொபைல் துறையில் புதிய பிரிவுகளை உருவாக்குவது மட்டுமின்றி தென்னாப்பிரிக்கா சந்தையில் மிகவும் மலிவான காராகவும் விற்பனை செய்யப்படுகிறது.

தென் ஆப்பிரிக்கா நாட்டில் பஜாஜ் க்யூட்டின் விலை 75,000 ராண்ட் ஆக உள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் இது ரூ.3,87,278 ஆகும். யாரும் நம்ப முடியாத அளவிற்கான இந்த குறைவான விலையே பஜாஜின் தயாரிப்பை தென் ஆப்பிரிக்கா முழுவதும் கொண்டு சென்றுள்ளது.

காரை போல் தோற்றத்தை கொண்டிருந்தாலும், பஜாஜ் க்யூட் குவாட்ரிசைக்கிளாகும். ஏனெனில் இதில் தொடர் கியர்ஷிஃப்ட் தொழிற்நுட்பம் வழங்கப்படுகிறது. இது கிட்டத்தட்ட மோட்டார்சைக்கிள்களில் பொருத்தப்படும் ட்ரான்ஸ்மிஷன் அமைப்பை போன்றுதான் செயல்படும்.

ஆனால் கார்களை போல் கால் பெடல் கொடுக்கப்படுகிறது. பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்த குவாட்ரிசைக்கிளில் 216சிசி பெட்ரோல் என்ஜினை பொருத்துகிறது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 10.83 எச்பி மற்றும் 18.9 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

இந்த பஜாஜ் நான்கு சக்கர வாகனத்தின் அதிகப்பட்ச வேகம் பெரிய அளவில் கிடையாது 70 kmph தான். ஆனால் இது போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகர்புற பயன்பாட்டிற்கு போதுமானதே. அதேநேரம் இதை காட்டிலும் அதிக வேகத்தில் செல்வதற்கு இந்த வாகனத்தில் போதுமான பாதுகாப்பு வசதிகள் இல்லை.

இந்த வாகனத்தை நீண்டத்தூர பயணமாக நெடுஞ்சாலைகளில் ஓட்டி செல்வது இயலாத காரியம். தினசரி அலுவலக பயன்பாட்டிற்கு என்றால் இந்த பஜாஜ் வாகனம் சரியான தேர்வே. என்ன தான் நம்மூர் தயாரிப்பை பற்றி பெரிய அளவில் புகழ்ந்து பேசினாலும், அதேநேரம் இந்த வாகனத்தில் சில பாதுகாப்பு குறைப்பாடுகளும் உள்ளன.

குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் வாகனம் கவிழ்ந்து போவது. இந்த குவாட்ரிசைக்கிளின் எடை மிகவும் குறைவு. என்ஜினின் எடையும் பெரியதாக கூறும் அளவில் இல்லை என்பதால் வளைவுகளில் அதிக வேகத்தில் திரும்பும்போது வாகனம் ஒரு பக்கமாக கவிழ வாய்ப்புண்டு.

இதனால் தான் இந்த வாகனம் நகர்புற பயன்பாட்டிற்கு மட்டுமே ஏற்றது என அழுத்தமாக கூறுகின்றோம். ஒரு 250சிசி மோட்டார்சைக்கிளை சுற்றிலும் பிளாஸ்டிக் சுவர்கள் எழுப்பப்பட்டது போன்றதுதான் இந்த வாகனம்.

இத்தகைய பாதுகாப்பு குறைப்பாடுகளுக்கு மத்தியில் இந்த வாகனத்தை ஓட்டுவதை விட அதே பணத்தில் இரண்டாவது கையாக ஃபோக்ஸ்வேகன் போலோ அல்லது ஹூண்டாய் ஐ10 காரை வாங்கிவிடலாம் என்றே நமது இந்தியர்கள் நினைப்பர்.


Click it and Unblock the Notifications








