அந்த வசதி உள்ள ஹெல்மெட்டை அணிந்தால் அபராதம்... அதிரடி அறிவிப்பு வெளியிட்ட காவல்துறை! என்ன இதுக்குகூட தடையா?
குறிப்பிட்ட தொழில்நுட்ப வசதிக் கொண்ட ஹெல்மெட்டை பயன்படுத்தும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் நமது அண்டை மாநிலத்தின் குறிப்பிட்ட நகர போலீஸார் அறிவித்திருக்கின்றனர். இதுகுறித்த கூடுதல் தகவலை இப்பதிவில் காணலாம், வாங்க.

இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பு வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது ஹெல்மெட். எனவேதான் இதனை இந்திய போக்குவரத்து விதிகள் கட்டாயம் என கூறுகின்றது. ரைடர் மட்டுமின்றி பின் பக்கத்தில் அமர்ந்து பயணிப்பவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும் அந்த விதிகள் கூறுகின்றது.

இந்த மாதிரியான சூழ்நிலையில், பெங்களூரு நகர போக்குவரத்து காவல்துறை குறிப்பிட்ட தொழில்நுட்ப வசதிக் கொண்ட ஹெல்மெட்டை அணிந்தால் கட்டாயம் அபராதம் விதிக்கப்படும் என அறிவித்திருக்கின்றது. காவல்துறையின் இந்த அதிரடி அறிவிப்பிற்கு அனைத்து ஹெல்மெட் தயாரிப்பு நிறுவனங்களும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றன.

ஹெல்மெட் பயனர்களின் கவரும் விதமாகவும், ஹெல்மெட் பயன்பாட்டை சுவாரஷ்யமானதாக மாற்றும் வகையிலும் ஹெல்மெட் தயாரிப்பாளர்கள் தலைக்கவசங்களில் அதிநவீன வசதிகளை அறிமுகப்படுத்திய வண்ணம் இருக்கின்றனர். அந்ததவகையில், பயன்பாட்டாளர்களை ஈர்க்கும் வகையில் வழங்கப்படும் ஓர் வசதியே ப்ளூடூத் இணைப்பு வசதி.

இதன் வாயிலாக பயனர்கள் செல்போனுக்கு வரும் அழைப்பை ஏற்றல் உள்ளிட்ட பயன்பாடுகளைப் பெற முடியும். இந்த மாதிரியான வசதிக் கொண்ட ஹெல்மெட்டையே பயன்படுத்துவதற்கு பெங்களூரு நகர போலீஸார் தடை விதித்திருக்கின்றனர்.

மீறி ப்ளூடூத் இணைப்பு வசதிக் கொண்ட ஹெல்மெட்டைப் பயன்படுத்தினால் அந்த வாகன ஓட்டிகளுக்கு கடும் அபராதம் விதிக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிகம் விபத்துகள் அரங்கேறுவதற்கு இதுவும் ஓர் காரணம் என்கிற காரணத்தினால் போலீஸார் ப்ளூடூத் இணைப்பு கொண்ட ஹெல்மெட்டை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இருசக்கர வாகனத்தை ஓட்டிக் கொண்டே வாகன ஓட்டிகள் பிறருடன் உரையாடுவதால் அவர்களின் கவனம் சிதறி, விபத்துகளுக்கு வழி வகுக்கின்றது. இதனடிப்படையிலேயே நாட்டின் சில மாநிலங்களில் கார்களில்கூட ஹேண்ட்ஸ் ஃப்ரீ எனப்படும் வசதியைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருக்கின்றது.

இந்த நிலையிலேயே பெங்களூரு நகர போக்குவரத்துக் காவல்துறை ப்ளூடூத் வசதிக் கொண்ட ஹெல்மெட்டை பயன்படுத்தக் கூடாது என தடை அறிவிப்பு வெளியிட்டிருக்கின்றனர். காவல்துறையின் இந்த அதிரடி அறிவிப்பு ப்ளூடூத் இணைப்பு வசதிக் கொண்ட ஹெல்மெட் பயனர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

மேலும், பெங்களூரு காவல்துறையின் இந்த அதிரடி அறிவிப்பிற்கு ஹெல்மெட் உற்பத்தியாளர்கள் சங்கம் கடும் எதிர்ப்பை தெரிவித்திருக்கின்றது. ப்ளூடூத் இணைப்பு வசதிக் கொண்ட ஹெல்மெட்டுகள் இருசக்கர வாகன ஓட்டிகள் ஓர் வரபிரசாதமாகக் காட்சியளிக்கின்றது.

இருப்பினும், இனி பெங்களூரு நகர வாசிகளால் ப்ளூடூத் இணைப்பு வசதிக் கொண்ட ஹெல்மெட்டை பயன்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளது. முன்னதாக இதேபோன்றதொரு அறிவிப்பை கேரள மாநில அரசு அறிவித்திருந்தது. கார்களில் ப்ளூடூத் இணைப்பு வசதி வாயிலாக செல்போனில் உரையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டது. இவ்விதியின்படி, மாநிலத்தில் பலருக்கு உயரிய அபராதத் தொகையை கேரள போக்குவரத்துத் துறை வழங்கியது குறிப்பிடத்தகுந்தது.

பெங்களூரு காவல்துறையின் இந்த அதிரடி அறிவிப்பு இரு சக்கர வாகன ஹெல்மெட் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் ராஜீவ் கபூர் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவர் கூறியதாவது, "இது இரு சக்கர வாகனம் மற்றும் ஹெல்மெட் தொழில்துறையினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கார் ஓட்டும்போது அல்லது இரு சக்கர வாகனம் ஓட்டும்போது கையில் செல்போன் இருப்பதை விட புளூடூத் பாதுகாப்பானது.

இந்த தொழில்நுட்பம் பாதுகாப்பாக வாகனம் ஓட்டுவதற்கு ஓர் தடை அல்ல. உலக நாடுகள் பல ப்ளூடூத் இணைப்பு கொண்ட ஹெல்மெட் பயன்பாட்டை அங்கீகரிக்கின்றன. அமெரிக்காவில் SNELL, BELL போன்றவை, ஆஸ்திரேலியாவை Forcite, சீனா Livall மற்றும் LS2 போன்ற ப்ளூடூத் இணைப்பு வசதிக் கொண்ட ஹெல்மெட்டுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன" என்றார்.


Click it and Unblock the Notifications








