இதுக்குதான் தொழிலதிபர்கள் தவமா காத்துகிட்டு இருந்தாங்க... மீண்டும் தொடங்கியது Benz EQC புக்கிங்!
Mercedes-Benz EQC எலெக்ட்ரிக் காருக்கான புக்கிங் மீண்டும் இந்தியாவில் தொடங்கியிருக்கின்றது. இதுகுறித்த முக்கிய விபரங்களை இப்பதிவில் பார்க்கலாம், வாங்க.

Mercedes-Benz (மெர்சிடிஸ் பென்ஸ்) நிறுவனத்தின் இந்தியாவிற்கான முதல் எலெக்ட்ரிக் காராக EQC (இக்யூசி) இருக்கின்றது. இக்காரை நிறுவனம் கடந்த ஆண்டின் இறுதியில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இந்த காருக்கே நிறுவனம் மீண்டும் புக்கிங் பணிகளைத் தொடங்கியிருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த கார் விற்பனைக்கு வந்த புதிதில் நாட்டின் ஆறு மிக முக்கியமான நகரங்களில் மட்டுமே விற்பனைக்குக் கிடைத்தது. அதிலும், அந்தந்த நகரங்களில் முக்கியமான பகுதியை மட்டும் தேர்வு செய்து அங்கு மட்டும் இக்யூசி விற்பனைக்கு வழங்கப்பட்டது. அந்தவகையில், 14 முக்கிய பகுதிகள் தேர்வு செய்யப்பட்டு அங்கு பென்ஸ் இக்யூசி கார் விற்பனைக்கு வழங்கப்பட்டன.

தற்போது பேஸ்-2 திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் உள்ள விற்பனையாளர்கள் வாயிலாக இக்யூசி எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு வழங்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தற்போது நிறுவனத்தின்கீழ் 50க்கும் மேற்பட்ட நகரங்களில் 94 பகுதிகளில் நிறுவனத்தின் ஷோரூம்கள் செயல்பட்டு வருகின்றன.

அந்த ஷோரூம்களில் புதிய இக்யூசி எலெக்ட்ரிக் கார் விற்பனைக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூசி ஓர் எலெக்ட்ரிக் கார் மட்டுமல்ல. அது ஓர் சொகுசு மற்றும் ஆடம்பர வசதிகள் கொண்ட மின் வாகனமும் கூட. எனவேதான், இக்காருக்கு தொழிலதிபர்கள் மற்றும் சொகுசு வாகன பிரியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு நிலவி வருகின்றது.

இதனை உறுதிப்படுத்தும் வகையில் முன்னதாக விற்பனைக்குக் கொண்டு வரப்பட்ட முதல் மற்றும் இரண்டாம் தொகுப்பு இக்யூசி கார்களுக்கு நல்ல விற்பனை கிடைத்தது. அதாவது, விற்பனைக்கு வந்த சில நாட்களிலேயே முழுவதுமாக விற்று தீர்ந்தன.

இந்த நிலையிலேயே சிபியூ வாயிலாக மீண்டும் மற்றுமொரு தொகுப்பை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வந்துக் கொண்டிருக்கின்றது, மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம். இவற்றிற்கான புக்கிங்கையே நிறுவனம் தற்போது இந்தியாவில் தொடங்கியிருக்கின்றது.

முதல் தொகுப்பு விற்பனைக்கு வந்தபோது இக்யூசி மாடலின் விலை ரூ. 99.3 லட்சமாக இருந்தது. ஆனால், தற்போது இதன் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. ஆகையால், இக்காரின் தற்போது ஆரம்ப விலை ரூ. 1,06,80,000 ஆக உயர்ந்துள்ளது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். ஆன்ரோடில் கிடைக்கும்போது இன்னும் சில லட்சங்கள் இந்த விலை உடன் ஒட்டிக்கொள்ளும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

அனைத்து விற்பனையாளர்கள் வாயிலாகவும் இக்யூசி எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு வந்திருப்பதை முன்னிட்டு அதன் ஊழியர்களுக்கு பிரத்யேக பயிற்சியை நிறுவனம் வழங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இக்யூசி வாடிக்கையாளர்கள் இடையூறு இல்லா அனுபவத்தைப் பெறும் நோக்கில் சில பயிற்சிகளை நிறுவனம் வழங்கியிருக்கின்றது.

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இக்யூசி எலெக்ட்ரிக் காரில் 80 kWh லித்தியம்-அயன் (WLTP) பேட்டரி தொகுப்பு பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இப்பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 370 கிமீ தொடங்கி 414 கிமீ தூரம் வரையில பயணிக்கக் கூடிய ரேஞ்ஜை வழங்கும்.

மேலும், இக்காரில் 405 பிஎச்பி மற்றும் 765 என்எம் டார்க் திறனை வெளியேற்றக் கூடிய மின் மோட்டார்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 180 கிமீ வேகம் ஆகும். அதேவேலையில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை இக்கார் வெறும் 5.1 வினாடிகளிலேயே எட்டிவிடும் திறனைக் கொண்டிருக்கின்றது.

மெர்சிடிஸ் எலக்ட்ரிக் இக்யூசி காரை 40 நிமிடங்களில் சார்ஜ் செய்தால் பூஜ்ஜியத்தில் இருந்து 80 சதவீதம் வரை சார்ஜை நிரப்பிவிட முடியும். ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தின் வாயிலாக சார்ஜ் செய்யும்போதே இத்தகைய அதி-வேக சார்ஜ் திறனை நம்மால் பெற முடியும்.

இத்துடன், புதிய தலைமுறை டிரைவர் அசிஸ்டன்ட் தொழில்நுட்பம், நல்ல பார்வை திறனை வழங்கக் கூடிய எல்இடி மின் விளக்கு மற்றும் ஹைபீம் கன்ட்ரோல் டர்ன் இன்டிகேட்டர்கள், தானாக பார்க் செய்யும் வசதி, விபத்திற்கு முன் மற்றும் பின்னால் பாதுகாக்கும் வகையில் ஏர்பேக் மற்றும் ஆபத்தை உணரக் கூடிய தொழில்நுட்பங்கள் என பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் இக்காரில் வழங்கப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications








