இந்தியாவில் புதிய பஸ், டிரக் மாடல்களை அறிமுகப்படுத்தியது பாரத் பென்ஸ்!
டெய்ம்லர் இந்தியா வர்த்தக வாகன நிறுவனம் தனது கீழ் செயல்படும், பாரத் பென்ஸ் பிராண்டில் 6 புதிய டிரக்குகள் மற்றும் 2 புதிய பஸ் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தி உள்ளது. பயன்பாட்டிற்கு தக்கவாறு பல்வேறு சிறப்பம்சங்கள், கொரோனா தடுப்பு அம்சங்களுடன் இந்த பஸ், டிரக் மாடல்கள் வந்துள்ளன.

இந்திய சந்தையில் பாரத் பென்ஸ் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு அதிக வரவேற்பு உள்ளது. சர்வதேச தரத்திலான பாரத் பென்ஸ் நிறுவனத்தின் பஸ், டிரக் மாடல்கள் அதிக மதிப்பையும் தொடர்ந்து தக்க வைத்து வருகிறது. இந்த நிலையில், இந்திய வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், பல புதிய டிரக் மற்றும் பஸ் மாடல்களை பாரத் பென்ஸ் அறிமுகப்படுத்தி உள்ளது.

பாரத் பென்ஸ் நிறுவனம் டிரக் வரிசையில் 1917ஆர், 4228ஆர், டேங்கர், 1015ஆர்+, 42டி எம்-கேப், கட்டுமானப் பணி பயன்பாட்டிற்கான 2868 டிரக் மற்றும் அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து போக்குவரத்துக்கான பிசேஃப் எக்ஸ்பிரஸ் ஆகிய மாடல்களை கொண்டு வந்துள்ளது.

இதில், 1917ஆர் டிரக் மாடலானது நெடுஞ்சாலை சரக்கு போக்குவரத்திற்கு ஏற்ற அம்சங்களை இந்த டிரக் பெற்றிருக்கிறது. அடுத்து 4228ஆர் மாடலானது கன்டெய்னர் மற்றும் பார்சல் வேன் போன்று பயன்படுத்த ஏதுவாக இருக்கும்.

இதேபோன்று, 50 பயணிகள் செல்வதற்கான இருக்கை வசதி கொண்ட அகலமான பாடி அமைப்பில் 1017 பஸ் மாடலையும், பாரபோலிக் சஸ்பென்ஷன் கொண்ட 1624 பஸ் சேஸீயையும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 1017 மாடலானது பள்ளிக்கூடங்கள், அலுவலக பணியாளர்கள் போக்குவரத்திற்கும், 1624 மாடலானது குறைந்த தூர நகரங்களுக்கு இடையில் இயக்குவதற்கான அம்சங்களையும் பெற்றிருக்கிறது.

இதுதவிர்த்து, பிசேஃப் பேக் என்ற பெயரில் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை வழங்கும் சிறப்பு அம்சங்களையும் இந்த பஸ் மற்றும் டிரக்குகளில் பாரத்பென்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

பஸ்களில் சானிடைசர் வழங்கும் கருவி, தொற்று பரவாத சிறப்பம்சங்களுடன் ஃபேப்ரிக் இருக்கைகள், பயணிகளின் வெப்ப நிலையை கண்டறியும் கருவி, காற்று சுத்திகரிப்பு வசதி, தானியங்கி கதவுகள் ஆகியவை முக்கிய அம்சங்களாக உள்ளன.

கடந்த ஆண்டு ஏப்ரலில் பிஎஸ்-6 வாகனங்களை பாரத் பென்ஸ் விற்பனை செய்ய துவங்கியது முதல், சந்தைப் பங்களிப்பு இரு மடங்காக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் 250 விற்பனை மையங்களுடன் செயல்பட்டு வருவதால் விற்பனையில் குறிப்பிடத்தக்க அளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால், தற்போது வலுவான நிலையை எட்டுவதற்கு பல புதிய மாடல்களை களமிறங்குவதில் ஆர்வம் காட்டி வருகிறது.


Click it and Unblock the Notifications








